Translate this blog to any language

வெள்ளி, 31 ஜூலை, 2026

உளவியல் மாணவர்கள் நேரடியாக சிகிச்சை அமர்வுகளைப் பார்ப்பது சரியா?


மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு கேள்வி இது!



கடந்த பல ஆண்டுகளாக, B.Sc. மற்றும் M.Sc. உளவியல் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் Internship-க்காக என்னை அணுகி வருகிறார்கள். அவர்களுடைய ஆர்வமும், கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகமும் என்னை எப்போதும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.

ஆனால், அவர்கள் அடிக்கடி முன்வைக்கும் ஒரு கோரிக்கை உண்டு.

"சார், நீங்கள் உண்மையான உளவியல் கேஸ்களை எப்படி கையாளுகிறீர்கள் என்பதை நேரில் பார்க்க வேண்டும். கவுன்சிலிங் மற்றும் ஆழ்மன சிகிச்சையை நேரடியாகக் கவனிக்க வேண்டும்."

நான் அது சாத்தியமில்லை என்று கூறினால், பெரும்பாலும் அவர்கள் சொல்லும் பதில்:

"சார், எங்கள் கல்லூரியில் அப்படித்தான் எதிர்பார்க்கிறார்கள்."

அவர்களுடைய நோக்கம் எனக்குப் புரிகிறது. புத்தகத்தில் படித்த அறிவுக்கும், நடைமுறை அனுபவத்திற்கும் இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை. அந்த ஆர்வம் மிகவும் அவசியமானது.

ஆனால், இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது.

அப்போது நான் அவர்களிடம் ஒரு எளிய கேள்வியைக் கேட்பேன்.

"நீங்களே ஒரு கிளையண்ட் என்று நினைத்துப் பாருங்கள்."

கவலை, மனச்சோர்வு, குழந்தைப் பருவ மனக்காயம், உறவு சிக்கல்கள், பயம் அல்லது வேறு ஏதாவது ஆழமான உளவியல் பிரச்சனையால் நீண்ட நாட்கள் தவித்த பிறகு, ஒரு உளவியல் நிபுணரை நம்பி நீங்கள் சிகிச்சைக்கு வருகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அந்த அறைக்குள் நுழைந்தவுடன், அங்கே ஒரு குழு உளவியல் மாணவர்கள் உங்களுடைய சிகிச்சையைப் பார்ப்பதற்காக அமர்ந்திருக்கிறார்கள்.

அப்போது...

உங்கள் மனத்தின் ஆழத்தில் இருக்கும் உண்மைகளை நீங்கள் சுதந்திரமாகச் சொல்வீர்களா?

யாரிடமும் இதுவரை பகிராத அனுபவங்களைப் பகிர்வீர்களா?

உணர்ச்சிவசப்பட்டு அழுவீர்களா?

பெரும்பாலானவர்களின் பதில் ஒன்றுதான்.

"இல்லை."

ஏனெனில், உளவியல் சிகிச்சை என்பது ஒரு வகுப்பறை செய்முறை அல்ல.

ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் நடத்தும் மிக ரகசியமான உரையாடல்களில் அதுவும் ஒன்று.

நம்பிக்கையும், ரகசியத்தன்மையும் வெறும் தொழில்முறை நெறிமுறைகள் அல்ல; அவைதான் சிகிச்சையின் அடித்தளம்.

இந்த இடத்தில், உளவியல் கற்பிக்கும் கல்லூரிகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் நான் ஒரு பணிவான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்.

உங்கள் Internship நடைமுறையில், மாணவர்கள் உண்மையான கிளையண்ட்களின் சிகிச்சை அமர்வுகளை நேரடியாகக் கவனிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், தயவுசெய்து அதை மறுபரிசீலனை செய்யுங்கள்.

அது நடைமுறையிலும் சாத்தியமில்லை.

அதைவிட முக்கியமாக, அது முழுமையாக நெறிமுறைகளுக்கும் பொருந்தாது.

சிகிச்சையின் நோக்கம் ஒரு மனிதரின் மனக் காயத்தை ஆற்றுவது; மாணவர்களுக்குக் காட்சி அளிப்பது அல்ல.

அதற்காக மாணவர்களுக்கு நடைமுறை அனுபவம் கிடைக்கக்கூடாது என்று நான் கூறவில்லை.

மாறாக, நான் கற்பிப்பதில் எப்போதும் மகிழ்ச்சியே அடைகிறேன்.

என்னிடம் வரும் மாணவர்களுடன் சிகிச்சை முறைகளைப் பற்றி விவாதிப்பேன். அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பேன். அடையாளம் தெரியாத வகையில் மாற்றப்பட்ட Case Histories-ஐ எடுத்துக்கூறுவேன். கவுன்சிலிங் அணுகுமுறைகளையும் விளக்குவேன்.

சில நேரங்களில், மாணவர்களின் சம்மதத்துடன், அவர்களிலேயே ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஒரு Demonstration Counselling Session நடத்தி காட்டியிருக்கிறேன். சில சந்தர்ப்பங்களில் ஆழ்மன சிகிச்சை முறைகளையும் விளக்கியிருக்கிறேன்.

ஆனால், அந்த Demonstration-களே எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுக் கொடுத்தன.

சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது, சில மாணவர்கள் தங்களை அறியாமலேயே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதிருக்கிறார்கள்.

தங்கள் நண்பர்களிடமும் இதுவரை பகிராத தனிப்பட்ட அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அமர்வு முடிந்த பிறகுதான், "என்னுடைய நண்பர்களுக்கே என் வாழ்க்கையின் பல ரகசியங்கள் தெரிந்துவிட்டதே!" என்று வருந்திய சம்பவங்களும் உண்டு.

அந்த அனுபவங்களே ஒரு பெரிய பாடமாக அமைந்தன.

மனித மனம் எவ்வளவு மென்மையானது, எவ்வளவு பாதுகாப்பு தேவைப்படுவது என்பதை அவை நமக்குக் கற்றுத் தருகின்றன.

நடைமுறைப் பயிற்சி அளிக்க பல நெறிமுறை சார்ந்த வழிகள் இருக்கின்றன.

அடையாளம் மறைக்கப்பட்ட Case Histories-ஐ விவாதிக்கலாம்.

சிகிச்சை முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை ஆராயலாம்.

Role Play, Simulation, Demonstration போன்ற முறைகளைப் பயன்படுத்தலாம்.

முழுமையான தகவலறிந்த சம்மதத்துடன் (Informed Consent), கல்வி நோக்கத்திற்காக பதிவு செய்யப்பட்ட சில Audio அல்லது Video-களையும், ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்படும் வகையில் பயன்படுத்தலாம்.

இவை அனைத்தும் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தை வழங்கும்.

அதே நேரத்தில், கிளையண்டின் தனியுரிமையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும்.

மனித உடலும், மனித மனமும் ஒன்றல்ல.

ஒரு அறுவை சிகிச்சையின் போது பல மருத்துவர்கள், செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் இருப்பார்கள். ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு மருத்துவப் பொறுப்பு இருக்கிறது.

ஆனால், மனத்தின் ஆழத்தில் நடக்கும் சிகிச்சை முற்றிலும் வேறுபட்டது.

அங்கே ஒரு மனிதர் தனது வாழ்க்கையின் மிக ஆழமான உண்மைகளைத் திறந்து வைக்கிறார்.

பல அனுபவமிக்க உளவியல் நிபுணர்கள் அறிந்த ஒரு உண்மை என்னவென்றால், சில குழந்தைகளும், பதின்ம வயதினரும், தங்களுடைய பெற்றோர் அறையில் இருக்கும் வரை மனம் திறந்து பேசவே மாட்டார்கள். பெற்றோர் வெளியே சென்ற பிறகுதான் அவர்கள் உண்மையாகப் பேசத் தொடங்குவார்கள்.

அப்படிப்பட்ட புனிதமான இடம்தான் ஒரு Therapy Room.

அது வெறும் ஆலோசனை அறை அல்ல.

ஒரு மனிதனின் நம்பிக்கையால் கட்டப்பட்ட மன ஆலயம்.

ஒரு உளவியல் நிபுணராக, நமது முதல் பொறுப்பு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது அல்ல.

தன்னுடைய வாழ்க்கையின் மிகவும் பலவீனமான தருணத்தில் நம்மை நம்பி வந்திருக்கும் அந்த மனிதரின் நம்பிக்கையைப் பாதுகாப்பதுதான்.

உளவியல் கல்வி மேலும் மேலும் வளர வேண்டும் என்று நான் மனதார விரும்புகிறேன்.

ஆனால், அந்த வளர்ச்சி இரண்டு அடிப்படை மதிப்புகளை எப்போதும் இணைத்தே இருக்க வேண்டும்.

சிறந்த நடைமுறைப் பயிற்சி.

அசைக்க முடியாத கிளையண்ட் ரகசியத்தன்மை.

ஏனெனில், இறுதியில்...

"உண்மையான உளவியல் கல்வி, சிகிச்சையைப் பார்ப்பதில் தொடங்குவதில்லை; ஒரு கிளையண்டின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில்தான் தொடங்குகிறது."

-Yozen Balki 💢 


புதன், 29 ஜூலை, 2026

டிஜிட்டல் மூலம் திகில் வாழ்க்கை !!


டிஜிட்டல் யுகத்தில் மன அமைதிக்கான எளிய வழிகாட்டல்:

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நமது நிம்மதியை நாமே தொலைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருக்கிறோம். நம் கையில் இருக்கும் செல்ஃபோன் வழியாகத் திடீரென்று யார் வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் நம் மனதைச் சங்கடப்படுத்தி விடுகிறார்கள். 


இத்தகைய டிஜிட்டல் இரைச்சல்களிலிருந்து தப்பித்து, நம் 'மனம்' என்கிற மாளிகையை எப்படிப் பூஞ்சோலையாக மாற்றுவது? 

இதோ நான் தொகுத்த சில எளிய, நடைமுறை வழிகள்:

1. டிஜிட்டல் நச்சு நீக்கம் (Digital Detox)
உடனுக்குடன் பார்க்காதீர்கள்: 

வரும் ஒவ்வொரு நோட்டிபிகேஷனையும், போனையும் உடனுக்குடன் பார்க்க வேண்டிய அவசியம் நமக்குக் கிடையாது. உங்களுக்கான தனிப்பட்ட நேரத்தை மொபைல் ஃபோன்கள் திருட அனுமதிக்காதீர்கள்.

 காலை நேர அமைதி: காலையில் கண்விழித்த முதல் ஒரு மணி நேரம் மொபைல் திரையைப் பார்க்கவே கூடாது. அன்றைய நாளின் மகிழ்ச்சியை அந்த முதல் மணி நேரமே தீர்மானிக்கிறது. அதைத் தேவையற்ற வாட்ஸ்அப் செய்திகளால் நிரப்பக் கூடாது.

 அரசியல் மற்றும் வெறுப்புப் பேச்சுகள்: தேவையில்லாத அரசியல் கருத்துக்களைப் பார்ப்பதோ, பேசுவதோ நம் மனதை வெறுப்பு, கோபம் மற்றும் தேவையற்ற கவலையாக மாற்றிவிடும். சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறை விவாதங்களிலிருந்து விலகியிருங்கள்.

 எதிர் கருத்து பேசாதீர்கள்: எந்தவொரு சிறிய விஷயத்திற்கும் மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு மாற்றுக்கருத்து பேசி, வாதாடி நம்முடைய 'டென்ஷனை' நாமே ஏற்றிக் கொள்ளக் கூடாது. சில நேரங்களில் மௌனமே மன அமைதிக்கான சிறந்த மருந்து.

 கருத்துக்களைப் போட்டு அடைக்காதீர்கள்: நீண்ட நேரம் மொபைல் அல்லது டிவி போன்ற திரைகளைப் பார்ப்பதால், தேவையற்ற கருத்துக்கள் நம் மனமாளிகையை நிரப்பி விடுகின்றன. அங்கே நல்ல எண்ணங்கள் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்குக் கூட இடமில்லாமல் போய்விடுகிறது.

2. நிதானமும் நம்பிக்கையும் வளர்த்தல்
 வேகத்தைக் குறைப்போம்: இந்த உலகம் ஓடிக் கொண்டே இருக்கிறது என்பதற்காக நாமும் பதற்றத்துடன் ஓட வேண்டியதில்லை. நிதானமாக இயங்குவதும், நம்பிக்கையோடு வாழ்வதுமே வாழ்க்கையை அழகாக்கும்.

 பிடித்தவர்களுடன் சிரித்துப் பேசுங்கள்: உங்களுக்குப் பிடித்தமான மனிதர்களோடு மனமாறச் சிரித்துப் பேசுங்கள். நல்ல புத்தகங்களைப் படிப்பது மற்றும் மெல்லிய, இனிமையான பாடல்களைக் கேட்பது ஆன்மாவிற்குப் புத்துணர்ச்சி தரும்.

 நன்றியுணர்வுப் பயிற்சி: இல்லாத ஒன்றை நினைத்து ஏங்குவதை விட்டுவிட்டு, நம்மிடம் இருக்கும் நல்ல விஷயங்களுக்கு (உடல் ஆரோக்கியம், குடும்பம், உணவு) தினமும் இரவில் தூங்கும் முன் மனதார நன்றி கூறும் பழக்கம் எதிர்மறை எண்ணங்களை அழிக்கும்.

3. இயற்கையோடும் குடும்பத்தோடும் இணைவோம்

 வெறும் கால் நடைப்பயிற்சி: மாலை நேரங்களில் மொபைலை வீட்டில் வைத்துவிட்டு, அருகிலுள்ள பூங்கா அல்லது மொட்டை மாடியில் வெறும் கால்களுடன் நிதானமாக உலா வாருங்கள். அது உடலையும் மனதையும் பூமியோடு இணைக்கும் (Grounding).

 குடும்பத்தோடு ஒரு டின்னர்: இரவு நேர உணவின் போதாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்தமர்ந்து, போன்களைத் தள்ளி வைத்துவிட்டு, அன்றைய நாளைப் பற்றிப் பேசி, சிரித்து மகிழுங்கள். இது உறவை பலப்படுத்தும்.

4. பயனுள்ள வாழ்க்கை வாழ்தல்
 இயற்கையோடு தொண்டு: நம் வீட்டில் செடி, கொடிகளை வளர்ப்பதோ அல்லது வாரத்தில் ஒரு மணி நேரமாவது பிறருக்கு/சமூகத்திற்குத் தொண்டு செய்வதோ நம் மனதில் எல்லையற்ற நிம்மதியை உருவாக்கும்.

 உலகிற்குப் பயனாகுங்கள்: நாம் வாழ்கிற இந்தச் சமூகத்திற்கும், இந்த உலகத்திற்கும் நம்மால் இயன்ற ஏதோ ஒரு வகையில் பயனுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதே மனிதப் பிறவியின் ஆகச்சிறந்த அர்த்தமாகும்.


முடிவுரை:
நம் மனமாளிகையைத் தேவையில்லாத குப்பைகளால் நிரப்பாமல், கொஞ்சம் காற்றோட்டமாக வைத்திருப்போம்.

நிம்மதி தானாகத் தேடி வரும்!

-Yozen Balki 💢