Translate this blog to any language

வெள்ளி, 18 செப்டம்பர், 2026

தந்தை பெரியார் பிறந்த நாளில்… என் புத்தகம் ஆசிரியரிடம் சேர்ந்த தருணம்


நேற்று  செப்டம்பர் 17 எனக்கு வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத நாள்.

தந்தை பெரியார் அவர்களின்‌ 148-வது பிறந்த நாளான செப்டம்பர் 17-ஆம் தேதி, நான் பெரியார் குறித்து எழுதியிருந்த என் புத்தகம் அச்சிடப்பட்டு, நேற்று மாலைதான் என் கைகளில் வந்து சேர்ந்தது.


அதே நாளில், பெரம்பூர் அகரம் பகுதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், வழக்கறிஞர் ஐயா துரைசாமி அவர்கள், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், வழக்கறிஞர் மதிவதனி அவர்கள், எனது நீண்டகால நண்பர் செம்பியம் இராமலிங்கம் உள்ளிட்ட பலரும் மேடையில் அமர்ந்திருந்தனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு எனது பழைய திராவிடர் கழக நண்பர்கள், திரு. சிட்டிபாபு, திரு. தங்கமணி, புரசைவாக்கம் ஓட்டேரி திராவிடர் கழக தலைவர், காலம் சென்ற திரு. வெங்கடேசன் அவர்களின் மகன் திரு. நல்லத்தம்பி போன்ற பலரை சந்தித்து உரையாடும் வாய்ப்பும் அன்று கிடைத்தது. அந்த சந்திப்பே எனக்கு ஒரு தனியான மகிழ்ச்சியைத் தந்தது. 

என்னுடைய பள்ளித் தோழரும், நீண்டகால குடும்ப நண்பரும் இன்று வரை பெரியார் கொள்கையில் உறுதியை கடைப்பிடிப்பவருமான திரு சண்முகம் அவர்களுக்கு அலைபேசி வழியாக அந்த நிகழ்ச்சியை சிறிது காண்பித்தேன். அவருக்கு கூட்டத்துக்கு வர முடியாத ஒரு சூழ்நிலை. அவருக்கு பெரிய மகிழ்ச்சி.


புத்தகம் கைக்கு வந்தது முதல், என் மனதில் அப்போது ஒரே ஒரு ஆசைதான் இருந்தது.

நான் எழுதிய பெரியார் பற்றிய இந்தப் புத்தகத்தை முதலில் ஆசிரியர் திரு.
கி. வீரமணி அவர்களிடமே முதலில் வழங்க வேண்டும் என்பதே அது.

இந்த ஆசையை என் நண்பர் செம்பியம் இராமலிங்கத்திடம் தெரிவித்தேன். அவர் தற்போது பெரியார் திடலில் பணியாற்றி வருகிறார். அவரும் அதைப் புரிந்துகொண்டு, மேடையில் கூட்டத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த தோழர் ஒருவரிடம் இதைப் பற்றிக் கூறினார்.

சற்று நேரம் மேடையிலும் அமர்ந்திருந்தேன்.

ஆசிரியர் அவர்கள் கூட்டத்துக்கு அவரது வேன் வந்து நுழைந்த நேரம் மிகப்பெரிய உற்சாக வரவேற்பு தரப்பட்டது. கிட்டத்தட்ட 93 வயதை தொடப்போகின்ற அந்த இளைஞருக்கு, அவரது மன உறுதிக்கு கூட்டத்தினர் யாவரும் தலை வணங்கி பணிவுடன் நின்றோம். தந்தை பெரியார் போன்றே மிக நீண்ட சமுதாயத் தொண்டுக்கான பயணம் அவருடையது ஆகும். 
 
ஆசிரியர் அவர்கள் கூட்டத்திற்கு வந்து சேர்ந்ததும், வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் உரைக்குப் பிறகு, என்னையும் என் புத்தகத்தையும் அறிமுகப்படுத்தினார்.

அந்தக் கணம் எனக்கு மிகவும் நெகிழ்ச்சியானதாக இருந்தது.

நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் அந்தப் புத்தகத்தை ஆசிரியர் திருமிகு.  கி. வீரமணி அவர்களிடம் வழங்கினேன். அவரும் சிரித்த முகத்துடன் அதை பெற்றுக்கொண்டு என்னை வாழ்த்தினார்.

34 ஆண்டுகளாக உளவியல் துறையில் பணியாற்றி வரும் எனக்கு, பெரியார் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதி, பெரியார் பிறந்த நாளன்றே அதை ஆசிரியர் அவர்களிடம் நேரில் வழங்க முடிந்தது என்பது ஒரு தனியான பெரு மகிழ்ச்சி.

பின்னர் மேடையில் இருந்த பலருக்கும் என் புத்தகத்தை வழங்கினேன்.

அன்று இரவு நான் வீடு திரும்புவதற்குள், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் என் புத்தகத்தைப் பார்த்துவிட்டு, அலைபேசியில் அழைத்து, அது மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி மகிழ்ந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்.

ஒருவருடைய முயற்சியைப் பார்த்தவுடன், தயக்கமின்றி உடனடியாக பாராட்டுவது என்பது இன்றைய காலத்தில் எல்லோரிடமும் காணக்கூடிய ஒரு குணமன்று. அதனால், அந்தக் கனிவான பாராட்டு எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தந்தது.

இன்று காலை மீண்டும் நண்பர் செம்பியம் இராமலிங்கம் அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு என்னுடைய நன்றியை மீண்டும் கூறினேன்.

இந்தப் புத்தகம் ஏன்?

தந்தை பெரியார் பற்றிய இந்தப் புத்தகத்தில், என் மனதில் நீண்ட காலமாகப் பதிந்திருந்த சில நெகிழ்ச்சியான எண்ணங்களை ஒன்பது அத்தியாயங்களில் பதிவு செய்திருக்கிறேன்.

இது பெரியாரின் முழுமையான வரலாற்றை எழுத முயன்ற நூல் அல்ல.

அவருடைய நீண்டகாலப் பொது வாழ்க்கையையும், சமூகப் பணிகளையும், வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களையும் படித்தும் கேட்டும் அறிந்தபோது, நான் வியந்த தருணங்களையும், சில நேரங்களில் கண்களில் கண்ணீர் வரச் செய்த நிகழ்வுகளையும் அதிகமாகப் பதிவு செய்திருக்கிறேன்.

பெரியார் என்ற மாமனிதரைப் பற்றி நான் பதினைந்து வயதில் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து, அவரைப் பற்றிய என் வியப்பும் மரியாதையும் ஆண்டுகள் கடந்தும் குறையவில்லை.

அந்த உணர்விலிருந்து தான் இந்தச் சிறிய நூல் உருவானது.

இந்தப் புத்தகத்தை படித்துவிட்டு, ஒரு வாசகர்,

“பெரியார் யார் என்பதை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அவருடைய சொந்த எழுத்துக்களையும் நூல்களையும் படிக்க வேண்டும்”

என்ற ஆசையைப் பெற்றால், அதுவே இந்தப் புத்தகம் நான் எழுதியதன் மிகப்பெரிய பயனாக இருக்கும்.

பெரியாரைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதை மட்டும் சொல்லிவிடுவது என் நோக்கம் அல்ல.

பெரியாரைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஒருவருடைய மனதில் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.

அந்தச் சிறிய ஆசையோடு இந்தப் புத்தகம் இப்போது என் கைகளிலிருந்து வாசகர்களை நோக்கிப் பயணிக்கிறது.

தந்தை பெரியார் பிறந்த நாளில்,
பெரியாரை பற்றிய என் புத்தகம் முதன் முதலாக, அவருடைய கொள்கைப் பயணத்தில் நீண்ட காலம் பயணித்து வரும் ஆசிரியர் அய்யா திரு. கி. வீரமணி அவர்களின் கைகளில் சேர்ந்தது மறக்க முடியாத நிகழ்வு ஆகும்.

அந்த நினைவு மட்டும்…

என் எழுத்துப் பயணத்தில் என்றும் அழியாத ஒரு பக்கமாக இருக்கும்.

வாழ்க பெரியார்!!🙏🙏

- Yozen Balki 💢 

உங்கள் செல்போனின் ஃபிரண்ட் கேமரா மற்றும் மைக் உங்களை கண்காணிக்கிறது!


நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக்கியுள்ளனவோ, அவ்வளவு தூரம் நமது தனிப்பட்ட ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்திக் கொண்டும் இருக்கின்றன. 


நீங்கள் சாதாரணமாக உங்கள் குடும்பத்தினரிடமோ அல்லது நண்பர்களிடமோ ஒரு பொருளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பீர்கள். அடுத்த சில நிமிடங்களில், உங்கள் பேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் திறந்தால், அதே பொருள் தொடர்பான விளம்பரங்கள் உங்கள் கண் முன்னே வந்து நிற்கும்.
இது பலருக்கும் ஒரு மந்திரம் போலத் தோன்றலாம், ஆனால் இதன் பின்னணியில் இருப்பது அப்பட்டமான டிஜிட்டல் கண்காணிப்பு. விளம்பர நோக்கத்துக்காக பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் நீங்கள் பேசுவதையும், நீங்கள் செய்வதையும் ஒட்டுக் கேட்கின்றன என்பதுதான் தற்போதைய கசப்பான உண்மை.

 1. முன்புற கேமராவும் மைக்கும் நம்மை எப்படி உளவு பார்க்கின்றன?

நமது ஸ்மார்ட்போன்களில் உள்ள முன்புற கேமராவும் (Front Camera), மைக்ரோஃபோனும் (Microphone) நாம் பயன்படுத்தாத போது சும்மா இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால், ஆப்கள் மூலமாக அவை தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்க வாய்ப்புகள் அதிகம்.

கவனக் கண்காணிப்பு (Attention Tracking): 

நீங்கள் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோல் செய்யும்போது, எந்த ஒரு குறிப்பிட்ட விளம்பரம் வரும்போது உங்கள் கண்கள் அதை எத்தனை விநாடிகள் உற்றுப் பார்க்கின்றன என்பதை முன்புற கேமராக்கள் கவனிக்க முடியும். இதன் மூலம் உங்கள் ரசனையை நிறுவனங்கள் துல்லியமாகக் கணிக்கின்றன.

முக்கிய வார்த்தைகளைத் தேடுதல் (Keyword Listening): 

நமது போன்களில் உள்ள வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதிக்காக மைக்ரோஃபோன் எப்போதும் லேசான விழிப்பு நிலையிலேயே இருக்கும். நாம் பேசும் சில முக்கிய வார்த்தைகளை (உதாரணமாக: கார், நகை, டூர், லோன்) இந்த மைக்ரோஃபோன் பிடித்துக் கொண்டு, அது தொடர்பான விளம்பரங்களை நமக்குக் காட்டுகிறது.

டிஜிட்டல் டெலிபதி (Predictive Tracking): 

உங்களுடன் இருக்கும் உங்கள் நண்பரோ அல்லது மனைவியோ இணையத்தில் ஒரு பொருளைத் தேடியிருந்தால், உங்களது போனின் ஜிபிஎஸ் மற்றும் வைஃபை நெட்வொர்க்கை வைத்து நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை கூகுள் அல்லது பேஸ்புக் நிறுவனங்களின் செயற்கை நுண்ணறிவு (AI) கண்டறியும். "இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கிறார்கள், எனவே அவருக்கும் இது தேவைப்படலாம்" என்று கணித்து, உங்களுக்கும் அதே விளம்பரத்தைக் காட்டும்.


 2. நுகர்வோர் நடத்தையும் விளம்பர சந்தையும்:

இன்றைய டிஜிட்டல் உலகில் நமது தரவுகள் (Data) தான் மிகப்பெரிய சொத்து. கூகுள், ஆப்பிள் மற்றும் மெட்டா போன்ற பெருநிறுவனங்கள் தங்களது இயங்குதளங்கள் (OS) மூலம் வாடிக்கையாளர்களின் வாங்கு திறனை (Purchasing Power) மற்றும் நுகர்வோர் நடத்தையை (Consumer Behaviour) அணு அணுவாகக் கண்காணிக்கிறார்கள்.
உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எப்போது தூங்குவீர்கள், எங்கு செல்வீர்கள், எவ்வளவு பணம் செலவழிப்பீர்கள் என்ற ஒட்டுமொத்த ஜாதகமும் இந்த நிறுவனங்களிடம் உள்ளது. இந்தத் தகவல்களை அவர்கள் மற்ற விளம்பர நிறுவனங்களுக்குப் பகிர்ந்து, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான கோடிகளை லாபமாக ஈட்டுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், நாம் காசு கொடுத்து வாங்கிய ஒரு கருவி, நமக்கே தெரியாமல் நம்மையே உளவு பார்த்து நம்மை ஒரு நுகர்வோர் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறது.

 3. இதிலிருந்து தப்பிப்பது எப்படி? (தீர்வும் நமது உரிமைகளும்)

இந்த டிஜிட்டல் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க நாம் நமது போனில் சில முக்கியமான செட்டிங்ஸ் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உங்களுடைய போனைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உங்களுக்கு முழு உரிமை உண்டு. அந்த உரிமையை கூகுள் போன்ற நிறுவனங்கள் தடுக்கவில்லை. இதற்கான செட்டிங்ஸ் வசதிகளை அவர்களே சட்ட விதிமுறைகளுக்குப் பயந்து வழங்கியுள்ளனர்.

விளம்பர ஐடியை நீக்குதல் (Delete Advertising ID): 

உங்கள் போனின் Settings > Google > Ads பக்கத்திற்குச் சென்று Delete advertising ID என்பதைத் தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். இதனால் உங்களுக்கென்று ஒரு தனிப்பயனாக்கப்பட்ட விளம்பர சுயவிவரத்தை கூகுள் உருவாக்குவது தடுக்கப்படும்.

மைக்ரோஃபோன் அனுமதியைக் கட்டுப்படுத்துதல்: 

Settings > Apps பகுதிக்குச் சென்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக ஆப்களுக்கு வழங்கப்பட்டுள்ள மைக் மற்றும் கேமரா அனுமதிகளை "Don't Allow" (அனுமதிக்காதே) என்று மாற்றி வையுங்கள்.

தேவைப்படும்போது மட்டும் அனுமதி

நீங்கள் எப்போதாவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போதோ அல்லது வீடியோ கால் பேசும்போதோ மட்டும், அந்த ஆப் கேட்கும் அனுமதியை "Only while using the app" (ஆப்பைப் பயன்படுத்தும் போது மட்டும்) என்று கொடுத்துப் பேசிக்கொள்ளலாம். பேசி முடித்ததும் அது தானாகவே லாக் ஆகிவிடும்.

 4. மாற்று தொழில்நுட்பங்களின் எழுச்சி (லினக்ஸ் போன்கள்)

கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இந்த அதீத டிராக்கிங்கில் இருந்து முற்றிலும் விடுபடத்தான், தற்போது லினக்ஸ் (Linux) தொழில்நுட்பத்தில் இயங்கும் பாதுகாப்பான மொபைல் போன்கள் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பிரபலமாகி வருகின்றன. ஜோலா (Jolla) மற்றும் பியூரிசம் (Purism) போன்ற நிறுவனங்கள் வன்பொருள் அளவிலேயே (Hardware Level) கேமரா மற்றும் மைக்கை ஒரு பட்டன் மூலம் அணைக்கக்கூடிய தனித்துவமான பிரைவசி ஸ்விட்சுகளைத் தங்களது போன்களில் வழங்குகின்றன. வருங்காலத்தில் இந்த போன்கள் இந்தியாவிற்கும் வரும்போது சாதாரண மனிதர்களின் தனியுரிமை இன்னும் பலப்படுத்தப்படும்.

தொழில்நுட்பம் வளர வளர நமது எச்சரிக்கையுணர்வும் வளர வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள கருவிகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுபவர்கள் மட்டுமே தங்களது டிஜிட்டல் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். புத்தியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்!

-Yozen Balki 💢