Translate this blog to any language

திங்கள், 17 ஆகஸ்ட், 2026

செல்போன் : கை விரல்களில் ஏற்படும் வலிகள் பற்றி!

சமீப காலங்களில் அதீத செல்போன் பயன்பாட்டினால் இடது மற்றும் வலது கைகளின் கட்டைவிரல் மற்றும் சுண்டு விரலில் தான் அதிகப்படியான வலிகளும் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.


இதைப்பற்றி மருத்துவ அறிஞர்கள் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி, இந்த நவீன நோய்க்குறிகளுக்குப் பெயரிட்டுள்ளனர்.

வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு வலது கையிலும், இடது கை பழக்கம் உள்ளவர்களுக்கு இடது கையிலும் (அதாவது போனை அதிகம் இயக்கும் கை) இந்த பாதிப்புகள் தீவிரமாக இருக்கும்.

கைகளில் ஏற்படும் குறிப்பிட்ட வகை வலிகள் மற்றும் அறிஞர்களின் விளக்கங்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன:

1. கட்டைவிரல் வலி (Thumb Pain)

ஏற்படும் வலி: கட்டைவிரலின் அடிப்பகுதி, தசை மற்றும் மணிக்கட்டுப் பகுதியில் கடுமையான இழுப்பு, விறைப்புத்தன்மை மற்றும் கூர்மையான வலி ஏற்படும். கட்டைவிரலை மடக்கவோ, நீட்டவோ செய்யும்போது ஒருவித 'கிளிக்' (Clicking) சத்தம் கேட்கலாம்.

அறிவியல் பெயர்: ஸ்மார்ட்போன் தம்ப் (Smartphone Thumb) அல்லது டி குவெர்வைன் டெனோசினோவிடிஸ் (De Quervain's Tenosynovitis). 

காரணம்: நாம் ஒரே கையால் போனைப் பிடித்துக்கொண்டு, கட்டைவிரலால் தொடர்ந்து ஸ்க்ரோல் (Scroll) செய்யும்போதும், டைப் செய்யும்போதும் கட்டைவிரல் தசைநார்கள் (Tendons) அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி வீங்கிவிடுகின்றன.


 2. சுண்டு விரல் வலி (Pinky Finger Pain)

 ஏற்படும் வலி: சுண்டு விரலின் நடுப்பகுதியில் வலி, தசைப்பிடிப்பு மற்றும் விரல் லேசாக வளைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.

அறிவியல் பெயர்: ஸ்மார்ட்போன் பிங்கி (Smartphone Pinky) அல்லது டெக்ஸ்ட் கிளா (Text Claw).

காரணம்: பெரும்பாலான மக்கள் பெரிய திரையுள்ள போன்களைக் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க, தங்களது சுண்டு விரலை போனின் அடிப்பகுதியில் ஒரு 'ஸ்டாண்ட்' போல முட்டுக் கொடுத்துப் பயன்படுத்துகிறார்கள். போனின் முழு எடையும் நீண்ட நேரம் சுண்டு விரலின் மீது இறங்குவதால் இந்த வலி உண்டாகிறது.


3. மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் மரத்துப்போதல் (Numbness)

ஏற்படும் வலி: மோதிர விரலின் பாதிப் பகுதி மற்றும் சுண்டு விரல் முழுவதும் ஊசி குத்துவது போன்ற உணர்வு (Tingling) அல்லது முற்றிலும் உணர்ச்சியற்று மரத்துப்போதல் ஏற்படும். 

அறிவியல் பெயர்: கியூபிட்டல் டன்னல் சிண்ட்ரோம் (Cubital Tunnel Syndrome) அல்லது செல்போன் எல்போ (Cell Phone Elbow). 

காரணம்: போனைப் பிடித்துப் பேசும்போதோ அல்லது வீடியோ பார்க்கும்போதோ நம் முழங்கையை 90 டிகிரிக்கும் அதிகமாக மடித்து நீண்ட நேரம் வைத்திருக்கும்போது, முழங்கைப் பகுதியில் உள்ள 'அல்னார் நரம்பு' (Ulnar Nerve) அழுத்தப்பட்டு இந்த மரத்துப்போதல் விரல்களுக்குப் பரவுகிறது.


4. ஆள்காட்டி மற்றும் நடுவிரல் வலி (Index & Middle Finger Pain)

ஏற்படும் வலி: கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல்களில் வலி மற்றும் நரம்பு பலவீனம் அடைதல்.

அறிவியல் பெயர்: கார்பல் டன்னல் சிண்ட்ரோம் (Carpal Tunnel Syndrome).

காரணம்: மணிக்கட்டை வளைந்த நிலையில் வைத்து நீண்ட நேரம் போனைப் பயன்படுத்துவதால், நடு நரம்பு (Median Nerve) நசுக்கப்பட்டு இந்த விரல்களில் வலியை ஏற்படுத்துகிறது.

அறிஞர்கள் மற்றும் ஆய்வுகள் கூறுவது என்ன?

நேச்சர் (Nature) மற்றும் பிஎம்சி (PMC) மருத்துவ இதழ்களின் ஆய்வுகள்: 

2024-2026 ஆம் ஆண்டுகளில் வெளியான [பிஎம்சி பொது சுகாதாரம் (BMC Public Health)]

(https://www.nature.com/articles/s41598-025-29317-3) போன்ற புகழ்பெற்ற மருத்துவ இதழ்களின் ஆய்வுகளின்படி, 60% க்கும் அதிகமான ஸ்மார்ட்போன் பயனர்கள் தசைக்கூட்டு வலி (Musculoskeletal disorders) மற்றும் விரல் சிதைவுப் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.

அறிஞர்களின் எச்சரிக்கை

கை மற்றும் மணிக்கட்டு மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, மனித விரல்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான சிறிய மற்றும் அதிவேக அசைவுகளை (Repetitive Strain Injury) பல மணிநேரம் செய்வதற்கு ஏற்றவாறு இயற்கையாக வடிவமைக்கப்படவில்லை. 

தப்பிக்க எளிய தீர்வுகள்:

   1. இரு கைகளைப் பயன்படுத்துங்கள்:

ஒரு கையால் போனைப் பிடித்து, மற்றொரு கையின் ஆள்காட்டி விரலால் திரையை இயக்குங்கள். இது விரல்களின் அழுத்தத்தைப் பாதியாகக் குறைக்கும்.

   2. பாப்-சாக்கெட் (PopSocket) அல்லது ஸ்டாண்ட்: 

போனின் பின்புறம் ஒட்டும் வளையங்கள் (Rings) அல்லது ஹோல்டர்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுண்டு விரலுக்குத் தரும் அழுத்தத்தைத் தவிர்க்கலாம்.

   3. 20-20-20 விதி போன்ற இடைவெளி:

ஒவ்வொரு 20 நிமிட பயன்பாட்டிற்குப் பிறகும் போனை கீழே வைத்துவிட்டு, கைகளையும் விரல்களையும் மென்மையாக நீட்டி மடக்கி (Stretching) பயிற்சி செய்ய வேண்டும்.

-Yozen Balki 


வியாழன், 13 ஆகஸ்ட், 2026

சூழ்ச்சி வாழ்க்கையில் அவசியமா?

கேள்வி: வாழ்க்கையில் வெற்றி பெற சூழ்ச்சி மிக முக்கியமா.. சூழ்ச்சியில்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாதா.. நான் நல்லவன், தர்மம் தலை காக்கும் என்றிருந்தால் அது இழிவான விஷயமா..??


பாலகுமாரன் : இது முழுக்க முழுக்க ஒவ்வொரு தனி மனிதனின் ஆற்றலைப் பொறுத்த விஷயம். வலி தாங்கும் திறன், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று
கொக்கரிக்கும் திறன் போன்ற பல திமிர்களை உள்ளடக்கியது. 

சூழ்ச்சி இருந்தால் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பது இன்று நேற்றல்ல.. சகுனியின் காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் வாக்கியம். இல்லை என்று சகுனியின் காலத்திலேயே தரும புத்திரரால் மறுக்கப்பட்டும் வந்தது. “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்” என்பது பாரதியின் வரிகள். அதாவது சூது, சூழ்ச்சி என்பவை தற்காலிகமாக ஒரு வெற்றியின் தோற்றத்தை தரக்கூடியவை என்பது தான் இதற்குப் பொருள். புளகாங்கிதம் அடைந்து சூழ்ச்சியினால் ஜெயித்து விடலாம் என்று சிலர் மார் தட்டலாம். அடி வாங்கி உருளும் போது அவர் வார்த்தைகள் வேறு விதமாகவும் இருக்கலாம். அல்லது நான் மறுபடியும் சூழ்ச்சி செய்து வெற்றி பெறுவேன் என்று பாதிக்கப்பட்டவரே மார் தட்டவும் செய்யலாம். அதனால் தான் சொல்கிறேன். இது தனிப்பட்ட மனிதனுடைய உரம் பொறுத்த விஷயம்.

அவமானம் தாங்கும் சக்தியைப் பொறுத்த விஷயம். அவமானத்திற்கு துடித்துப் போகிறவர்கள் சூழ்ச்சியில் இறங்க முடியாது, அவமானத்திற்கு துடிப்பதும், துடிக்காததும் இளம் வயதில் நீங்கள் வளர்க்கப்படுவதைப் பொறுத்தது. இளம் வயதிலேயே மானப்பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடிக்கு அஞ்சாமல் இறங்கி அங்கேயே உரம் பெற்றால் தான் சூழ்ச்சி செய்கின்ற அல்லது சூழ்ச்சியை தேடிக் கண்டு பிடிக்கின்ற ஒரு மனோபாவம் வரும். சிறு வயதில் பொத்தி வளர்க்கப்பட்டு கிடைக்க வேண்டியவை கிடைத்து வெகுளியாக வளர்ந்தவருக்கு சூழ்ச்சி செய்ய முடியாது. சூழ்ச்சியை எதிர் கொள்ளவும் முடியாது.

இதற்கு அடுத்தபடியாக இடம் பெறுவது ஆசை. ஆசை என்பது பேராசையாகி விஸ்வருபம் எடுத்து உங்களைக் காட்டிலும் பிரம்மாண்டமாக வளர்ந்து, என்ன செய்தாவது வெற்றி அடைந்தாக வேண்டுமென்ற வெறி ஏற்படும். அது
சூழ்ச்சி செய்யும். சூழ்ச்சிகளை முறியடிக்கும். கத்திக்கு கத்தி, வெட்டுக்கு வெட்டு, களவுக்கு களவு என்று களமிறங்கும். ஆசை எப்போது பேராசையாகும், சிறுசிறு வெற்றிகள் கிடைப்பதின் மூலம் ஆரம்ப நாட்களில் கிடைக்கும் விருதுகளின் மூலம் மிகப்பெரிய ஆசை வளரும். அது மட்டுமல்லாது சுற்றியுள்ள ஒரு தோழர் வட்டம் உங்களை உசுப்பேற்றி உலுக்கி உயரக்கொண்டு போய் வைத்துவிடும்.

நீங்கள் கார் விட்டு கீழே இறங்குகிற போது, ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று உங்கள் காரைச் சுற்றிக் கொண்டு நூறு பேர் உரக்கக் கத்தினால் கிறுகிறுப்பு வரத்தான் செய்யும். மண்டையிலுள்ள கர்வச் செதில்கள் வளர்ந்து விஸ்வரூபமாகும். கொம்புகள் முளைக்கும், சந்தேகமின்றி ‘நான் வருங்கால தமிழக முதல்வர் தான்’ என்று உங்களுக்கேத் தோன்றும்.

வருங்கால முதல்வர் என்று யாரைச் சொல்வார்கள். கொஞ்சம் காசு இருக்கிறவரை, கொஞ்சம் கூட்டம் சுற்றுகிறவரை ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று கூட்டம் கூடி சொல்வார்கள். அப்படி யாரையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள், சினிமா டைரக்டரை, நடிகரை, கவிஞரை, ஒரு ஜோசியரைக் கூட ‘வருங்கால முதல்வர் வாழ்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

யார் சொல்கிறார்கள், இதே போல சூழ்ச்சித்திறன் பெற்றவர்கள் தான் சொல்கிறார்கள்.“அண்ணா,நீங்க முதல்வர்னா பொதுப்பணித்துறையை எங்ககிட்ட விட்ருங்கண்ணா”. “ஏண்டா...ஏன் பொதுப்பணித்துறையை கேட்கற..”. “அதுலதாண்ணா சம்பாதிக்கலாம். உங்களுக்காக நான் நிறைய செலவு பண்ணிட்டேண்ணா. அதை எடுக்க வேணாமாண்ணா” தம்பி சிரித்துச் சொல்ல, அண்ணனும் உரத்துச் சிரிக்க, அந்தச் சபையில் ஆனந்தப் பரவசம் கூத்தாடும். ஒருவர் தோளை ஒருவர் பற்றிக் கொண்டு மேலே
வந்துவிடலாம் என்ற பேராவல் எழும்பும்.

“அவன் நமக்கு வேணும்ப்பா, கட் பண்ற நேரத்துல கட் பண்ணி விட்டுவிடலாம். நீ கவலைப்படாதே...” என்று ஒருவனை மற்றவனுக்கு எதிரியாக நியமித்து இடையறாது.. இடையறாது தந்திரம் செய்வார்கள்.
அவர் தேவரு.. இவர் வன்னியரு.. அந்த ஏரியாவோ தேவரு ஏரியா, நான் யாரை பிரசிடெண்ட் ஆக்குவேன். உங்களுக்குத் தெரியாதா, இல்லைன்னா இவராண்ட துட்டு இருக்கு, துட்டு என்னப்பா துட்டு, துட்டு எப்போ வேணாலும் சம்பாதிச்சுக்கலாம், ஆளுங்க சம்பாதிக்கறது தான் கஷ்டம். இப்போதைக்கு நமக்குத் தேவை ஆள் படை, படைபலம். படைபலம் இருந்து பதவி கிடைச்சிடிச்சுன்னா துட்டை காலுக்குக் கீழ் கொட்டுவாங்க. அப்படியே மணல் ஒதுக்கறா மாதிரி காலாலயே துட்டு ஒதுக்கி எடுத்துட்டுப் போயிடலாம்”

கலையிலிருந்து அரசியலா அல்லது அரசியலே கலையா. இடையறாது நிமிடத்திற்கு நிமிடம் குணம் மாறும். சூழ்ச்சி வெற்றியை நோக்கி விறையும். அந்த சமுத்திரத்தில் இறங்கி நீந்தி நெஞ்சாழம் போய்விட்டால் போதும், பிறகு கரைக்கு மீளுவது கடினம். உங்களைத் தாண்டிப்போன அலைகள் திரும்ப வந்து உங்களை உள்ளுக்குள் தள்ளிக் கொண்டிருக்குமே தவிர, வெளியே சேர்க்காது.

சமுத்திரம் உங்களை எப்போது கரை சேர்க்கும் தெரியுமா, நீங்கள் செத்த பிறகு. செத்து மிதந்த பிறகு தான் உங்களை கரையில் ஓதுக்கும். அதனோடு இருந்து கைகால் அசைக்க அசைக்க நடு சமுத்திரத்திற்கு இழுத்துப் போகப்படுவீர்கள். சூழ்ச்சி வெகு நிச்சயம் வெற்றி தரும் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் எதற்காக சூழ்ச்சி? வெற்றி பெற, எதற்காக வெற்றி. அதுவொரு சந்தோஷம். ஆனால், வெற்றி பெற்ற பிறகு சந்தோஷமாய் இருக்க இயலுமா, நிம்மதியாய் சாப்பிட முடியுமா, அமைதியாய் தூங்க முடியுமா, நலமாய் புணர முடியுமா, யாரைக் கண்டாலும் கனிந்து கைகூப்ப முடியுமா, முடியாது. பெற்ற தாய் மீது சந்தேகம் வரும், மனைவியை வெறுக்கத் தோன்றும். மகனை ஆள் விட்டு கண்காணிக்கத் தோன்றும், பெண்களை விலைக்கு வாங்கத் தோன்றும். சூழ்ச்சி என்று ஆரம்பித்துவிட்டால் எல்லைகள் உண்டா, எல்லா நாகரிகமும் உடைத்து நாசமாக்கி, சூழ்ச்சி மட்டுமே சூழ்ந்து நிற்கும்.

பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே சாவான் என்பது வேதவாக்கு. சூழ்ச்சியை எடுத்தவன் சூழ்ச்சியாலேயே மரணமடைவான் என்பதைத் தான் அந்த வாக்கியம் சொல்கிறது. இதில்மோசமானது என்ன தெரியுமா, சூழ்ச்சியில் ஜெயித்து வெற்றிக் கொடி நாட்டி ஊர் வலம் வந்து பிறகு சூழ்ச்சியால் தாக்கப்பட்டு அலைக்கழிக்கப்பட்டு அடிபட்டு துவண்டு கீழே சரிந்து விழுந்த பிறகு ஊரும், உற்றாரும் பழிக்க வெற்றி பெற்ற நாட்களில் எப்படியெல்லாம் சிலிர்த்துக்கொண்டோம் என்று நினைத்து நினைத்து வெட்கப்பட்டு குலைந்து இறுதி நேரத்திற்காக காத்திருக்கிற நிலைதான்
கொடுமையானது. அப்போதும் சூழ்ச்சி எண்ணம் தோன்றும், அது இன்னமும்
கொடுமையானது.

சூழ்ச்சி ஓரு போதையான விஷயம். ஒருமுறை செய்து பழக்கப்பட்டு விட்டால் பிறகு திரும்ப திரும்ப செய்யத்தான் தோன்றும். சூழ்ச்சி வேண்டாம். தர்மம் தலைகாக்கும் என்று பலநூறு கதைகள் நம்மிடையே புழங்கி வருகின்றது. ஆனாலும் சூழ்ச்சி தான் உத்தமம் என்று சொல்லி வருபவர்கள் இன்னும் இருக்கத் தான் செய்வார்கள்.

- எழுத்துச்சித்தர் பாலகுமாரன்