Translate this blog to any language

சனி, 15 ஜனவரி, 2011

"முள்ளிவாய்க்கால்" மறக்க முடியுமா? We Tamils diaspora will ever forget Mullivaikkal ??




ஏனிந்த மவுனம் ஏமாளித் தமிழா

எதற்காம் நமக்கு அரசியல் பேச்சு !


வாழ்நிலம் கொள்ளை போவதும் அறியாய்

வாழ்ந்த சரித்திரப் பெருமையும் தெரியாய்


அடிமைகள் ஆர்ப்பதும் ஆட்ட பாட்டமும்

குடிமை வழக்கம் உலகினில் இல்லையாம்!


கொத்துக் கொத்தாய் என்குலமது சாகையில்

செத்தவன் போலொரு சித்தம் மறந்தே


சிரித்துக் கிடந்து கவலை மறந்து

மரித்த பிணத்தை கொறிக்கும் கழுகாய்


தேறும் சில்லறை கடைக்கண் வைக்கும்

'தேராத்' தலைவர்கள் மரத்த உலகினர்!


கழுவாக் குறையாய் காலை நக்கி

பிழைப்பார் அறியார் உழைப்பார் நோவு!


ஆண்ட இனத்தவர் பூமிப் பந்தில்

அகதிகளாய் இன்றலையும் இழி நிலை!


வெளுத்தது நம்பி அன்னியப் பதர்களை

உள்ளே விட்டு உறங்கிய தீமை!


சிங்களக் காடையர் 'ஹிந்திய' வஞ்சகர்

சேர்ந்து வகுத்த தமிழினத் துடைப்பு!


துரோகிகள் காட்டில் பெய்த பெருமழை;

பெருகி ஓடிய 'முப்பது வெள்ளிகள்'!


'முள்ளி வாய்க்கால்' மறக்க முடியுமா?

உள்ளில் பழியாய் உறங்காச் சின-நதி!


எமது மழலைகள் அன்னை தந்தையர்

மகளிர் இளைஞர்கள் ஆநிரை மரங்கள்!


அடியோடு எரித்த அதிகார நிலைகள்

அந்நியன் செய்த பாலியல் வினைகள்!


நெஞ்சில் நெருப்பாய் என்றும் கிடக்கும்!

வினைக்கு எதிர்வினை அறிவியல் பாடம்!


பகைவனுக்கருளவும் தொழுத தமிழர் யாம்

சிங்கள பவுத்தமோ 'கருப்பை' கிழித்தது!


ஒன்றே குலமென உலகைப் பார்த்தவர்

எங்கள் தமிழர் உயர்ந்த பண்பினர்!


கீழைத் திசைகளில் புலிக்கொடி பறவா

தேயமில்லையாம் இமயமும் வென்றோம்!


இற்றை நாளில் வஞ்சக நெஞ்சினர்

விரித்த வலைகளில் சிக்கிக் கிடக்கிறோம்!


ஒருநாள் தங்க சிங்களன் வந்தான்

'சென்னையில் இன்று வடவர்கள்' போன்றே!


நம்பிக் கிடந்தோம் நமது நாடென

ஒட்டக மூக்கின்று ஆமையின் வீடு!


வந்தவன் வளர இருந்தவன் தேய

பிச்சைக்கு வந்தவன் பெருமான் ஆனான்!


உலக சரித்திரம் அப்படித் தானே!

நம்பிக் கிடந்தார் தாய்நாடு இழந்தார்!


பிழைக்க வருபவர் திண்ணையில் படுத்து

திரும்பித் தன்னூர் விரைதல் இயற்கை !


நாடு பிடிக்கும் சிங்கள வஞ்சமோ

தம்மினம் சேர்த்து தமிழரைச் சாய்த்தது!


திரைகடல் ஓடி திரவியம் செய்தவன்

திரும்பி வருகையில் சிங்கள பூமி!


தமிழினி இல்லை எங்கும் சிங்களம்

முக்கியத் துறைகள் சிங்களர் கென்றார்!


வருத்தம் - கோபம் - கூட்டம் - 'செல்வா' ;

அமைதிப் பேச்சுகள் தோல்வியில் முடிந்தன!


சிங்களக் காடையர் பவுத்த வெறியர்கள்

எங்கணும் ஆடிய கோரத் தாண்டவம்;


எந்த மொழியிலும் சொல்வதற் கில்லை!

சொந்த மண்ணிலே அகதிகள் ஆயினர்!


இழவு விழாத வீடுகள் இல்லை

இழிவு படாத பெண்டிரும் சொற்பமே!


இனியும் பொறுத்திட இயலா நிலையில்

பிறப்பவை தாமே விடுதலை போர்கள்?


கோழைகள் மட்டுமே 'கொண்டவள்' தந்து

கொடிய பகைவனை சமரசம் செய்வார்!


குலுக்கும் நட்பை வெட்டும் கைகளை

'யுத்த பூமியில்' முத்தம் தருவமோ ?


எமது தளிர்களை கருக்கிய தருக்கரை

நொடியும் மறவோம் திருப்பித் தருவோம்!


உலகெலாம் பரந்த எந்தமிழ் மாந்தர்

உள்ளம் பதிக்க ஒன்று சொல்வேன்!


தீமைகள் தொடர்ந்த சரித்திரம் இல்லை!

எல்லா இரவும் ஒருநாள் விடியும்!


-மோகன் பால்கி








_____________________________________

எல்லா இரவும் ஒருநாள் விடியும்!



யோஜென் பால்கி

yozenbalki

வெள்ளி, 7 ஜனவரி, 2011

The 'Wheel' Will Rotate On!! குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!






















சிறியதை பெரிதும் பெரியதை சிறிதும்
செய்பவன் ஒருவன் அவன்பேர் இறைவன்!

"மாற்றமுடிந்தவை முடியாதன"  என
மாநிலம் உள்ளதை மறந்தவர் பலபேர்!

பெரியதும் அவனால் சிறியதும் ஆகும்-
சிறியதும் அதுபோல் மலையென மாறும்!

தினந்தினம் வேகம் வேறு திசைகளில் 
மனமது அடங்காதோடி விரைகையில்

சிறிதினில் மறைபொருள் ஒளிந்த தறிவரோ?
அறிவினில் புதைந்த அறிவதும் அழுக்காம்!

'நாணான்' என்னும்  நாணமற்றதை
வண்ணான் ஆவியில் வெளுப்பது போலும்

வாழ்வின் இறைமை வெளுத்தே துவைக்கும்
ஆன்ம விளக்கம் 'அடங்கையில்' உணர்த்தும்!

இதுவும் அதுவும் உயர்ந்தவை யாவும்
பொதுவினில் வைத்தால் வெறுமையே மிஞ்சும்!

நிமிர்ந்த மலைகளை சாய்த்தோ சமநிலை?
தாழ்வறு பூமி தரணியில் உண்டோ?

உயர்ந்தவை அறுத்துப் பரப்பிய சிறுமை
சின்ன மனிதர்கள் செயற்கை அன்றோ?

உலகம் அதுவாய் அழகாய் இருக்கையில்
உள்ளம் நம்முள் எரிந்தே கிடக்கும்!

சிறிது பெரிதென-பெரிது சிறிதென
செப்புதல் மனமே- மனமே நோயாம்!

இன்றைய இரவு நாளை விடிந்து
விடியல் இரவாய் மாறுதல் இயற்கை!

போனது திரும்பி - வந்தது போகும்
நாடுகள் அழிந்து பாலையும் ஆகும்!

பாலையும் ஒருநாள் நாடுகள் ஆயின;
"இருமை" இறைவன் லீலையே அன்றோ?

பொறுத்தவர் புண்ணியர் வழிதோறும் வாழ்வர்
தேதி குறிப்பவர் சேதிகள் அறியார்!

இருப்பது கொண்டு நலமுடன் வாழும்
திருப்பதம் பற்றிய அடியவன் துறவி!

கடமை செய்திடும் கண்ணியர் உயர்வர்
சோம்பிக் கிடக்கும் கயவர் அழிவர்!

இருப்பினும் இறைவனை குத்திக் குடைதல்
பிறந்த ஒர்சிசு 'இணையக்' கேட்பதாம்!

அறிவறியாத குழவிகள் போன்றே
அழிவது யாவும் தனக்கென வேண்டும்;

அழுது புலம்பியே வாணாள் தேய்க்கும்;
குரங்குப் புண்ணாம் அறிவினை என்செய?

பிறவிக் குற்றமோ பெருமான் விதியோ? 
உறுத்து வந்த ஊழ்வினைப் பயனோ?

"அவனருளால்தான்" அவன் தாள் வேண்டி
அவனியில் அமைதி பெற்றிடலாகுமாம்!

ஆன்ம ஞானிகள் அன்றே அருளினார்!
அகத்துள் அண்டம் மறையும்-திரியும்!

அடங்கா மனதை அடக்கும் ஞானியின்
அன்பில் அடங்குதல் அதுவுமே அறியார்!

எல்லாம் 'இங்கே' 'இக்கணம்' இருக்க
ஏங்கித் திரியுமாம் சின்னப் பறவை!

கோடி வார்த்தைகள் கூறியும் என்ன?
குறிப்பறியாதோர் 'சக்கரம்' சுழலும்!

yozenbalki