கடவுள் நம்பிக்கை பற்றி கொஞ்சம் பேசலாம்!
அது இருக்கிறதா இல்லையா என்ற நாத்திக - ஆத்திக கருத்து பற்றி இங்கு பேசவில்லை!
கடவுள் நம்பிக்கை கொண்ட ஆத்திக வாழ்வில் கடும் முயற்சி பக்தி என்ற இரண்டு கூறுகளை பற்றி நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்வோம்!
ஒரு கடவுள் நம்பிக்கை சுமாராகக் கொண்ட ஆத்திகன்!
ஆனால் 99% தனது
முயற்சி
கடும் உழைப்பு
அறிவுத்திறன்
இந்த மூன்றைக் கொண்டு ஒரு ஏக்கர் உள்ள தன்னுடைய விவசாய நிலத்தில் பயிரிடுகிறான்!
நேரம் கிடைக்கும் போது கோயிலுக்கு போகிறான் மனதுக்குள் வணங்குகிறான் அதன் அளவு 1% -10% மட்டுமே!
இன்னொருவன் கடும் பக்தன்
அவனும் அதே போல விவசாயி ஒரு ஏக்கர் நிலம்!
ஆனால்,
கிட்டத்தட்ட 90% -99% இறைவன் மீது நம்பிக்கை வைத்து எப்போதும் கோயில் குளம் ஆன்மீக புத்தகங்கள் உபன்யாசங்கள் சங்கீதம் தியானம் என்று தன்னுடைய வாழ்வில் விழித்திருக்கும் நேரத்தில் 90% இறை வழிபாட்டிலும் 1%-10% மட்டுமே தன்னுடைய விவசாயத்தின் மீதும் கருத்து செலுத்துகிறான்!
அறுவடை காலம் வரும் பொழுது இந்த இருவரில் யாருடைய நிலத்தில் அதிக விளைச்சல் இருக்கும்; உலகப் பயன் இருக்கும்?
யாருடைய குடும்பம், ஊர், நாடு மேன்மையாக இருக்கும்? யாருடைய நிலத்திலிருந்து வரி வசூல் அதிகம் கிடைத்து கோயிலை பராமரிக்கும், ஆன்மீகத்தை வளர்க்கும், சமூகத்திற்கான நற்செயல்கள் யாவும் நிகழும்?
முன்னவர் உழைப்பால் கோயில்களும் ஆன்மீகமும் கூட சேர்ந்தே வளர்கிறதே!
பின்னவரின் அதீத ஆன்மீகத்தால் சமூகத்துக்கு பயன் தராத கற்பனை வாழ்க்கையால் கோயில்களுக்கும் ஆன்மீகப் பெரியோர்களுக்கும் கூட பெரிதாக தான தர்மம் செய்ய முடியாத அளவுக்கு அவனது வாழ்க்கை சுருங்கிப் போகிறதே!
சோற்றுக்கு உப்பு அவசியம்; உப்பே சோறு அல்ல!
வாழ்க்கைக்கு ஆன்மீகம் அவசியம்! ஆனால் ஆன்மீகமே வாழ்க்கை அல்ல!
ஆன்மீக வாழ்க்கை, அதையே பிறருக்கு நடத்தித் தருகின்ற லௌகீக வாழ்க்கை இரண்டையும் ஒப்பிடும் பொழுது மேற்கண்ட இரு விவசாயிகளின் பயனுள்ள வாழ்க்கை முறையை உற்று நோக்குங்கால் கடும் உழைப்பு, தொடர் முயற்சி, அறிவுத்திறம் எவ்வளவு அவசியம் என்று நமக்கு விளங்கும்!
கர்ம யோகமே நனி சிறந்ததல்லவா?
பக்தி/ஞான யோகிகளுக்கும் எது சத்தாகத் திகழ்கிறதாம்?
அதனால்தான்
"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்!"
என்றார் திருவள்ளுவர்!
இறை நம்பிக்கை இருப்பவர்களுக்கும் லவ்கீக வாழ்க்கையில் இருக்கிற குடும்பஸ்தர்கள் தான் உலகம் முழுதும் இருக்கும் கோயில்களை கட்டி இன்றும் அதை தங்கள் உழைப்பினால் அது தந்த பொருளினால் காப்பாற்றி வருகிறார்கள் என்றுணர வேண்டும்!
பெரிய பெரிய ஞானிகள் என்று தன்னை கருதிக் கொண்ட அல்லது மக்கள் நம்பிய பலருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் தந்தது, அவர்களுக்கு தேவையான புகழைத் தந்தது மேற்படி 99% மக்களின் உழைப்பே, போற்றுதலே ஆகும் என்று உணர்க!
ஆதலால், ஆன்மீகம் வளர வேண்டும் என்றாலும் கூட
மேற்படி சொல்லப்பட்ட இரண்டாம் நிலை
விவசாய-ஆன்மீகவாதிகளுக்கும் முதலில் தேவைப்படுவது,
1. முயற்சி
2. கடும் உழைப்பு
3. அறிவுத்திறன்
என்றுணர்தல் உலக
நலம் பயக்கும்!
-யோஜென் பால்கி
Yozen Balki
Senior Psychologist
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
You can give here your comments: