Translate this blog to any language

வியாழன், 11 மார்ச், 2010

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?


ந்த நண்பரைப் பார்த்த உடன் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும்.
அது 1980-85 களுக்கு இடைப்பட்ட காலம்.
அவர் பெயர் செழியன். (சில காரணத்துக்காக இங்கு பெயரை மாற்றி உள்ளேன்). ஒவ்வொருவரிடமும் பேசுவதற்கு என்று அவர் ஒவ்வொரு விஷயம் வைத்திருப்பார். அவரைப் பார்த்த உடன் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சி பிறக்கும். இத்தனைக்கும் அவரது உடைகள் சற்று கிழிந்தும், நல்ல காலணிகள் இன்றியும், கலைந்த தலைமுடி , மழிக்கப் படாத முகம் என்று சாதாரண தோற்றத்தோடு தான் இருப்பார்.

எனக்கு மனோ தத்துவத்தில் ஆர்வம் இருந்ததால், மனித உறவுகள், கோபம், பிரிவு அதற்கான காரணங்கள் என்று எதையும் ஆய்வுக் கண்ணோடு பார்க்கும் பழக்கம் சிறு வயது முதலே இருந்தது. அதனால், அவரை உற்றுப் பார்க்க ஆரம்பித்தேன். அதாவது, எதனால் அவரிடம்  மற்றவர்கள் நெருங்கிப் பழகுகிறார்கள். ஆசை ஆசையாகப் பேசுகிறார்கள் என்று. சிரிக்கவே தெரியாத சில ஜடங்கள் கூட அவரைக் கண்டால் சிரித்துப் பேசி சகஜமாக பழகுவார்கள். என்ன மாயம் இது! அவர்களிடம் மைய இழையாக ஓடும் பொதுவான பேச்சு எதைப் பற்றியதாக இருக்கிறது? அதை ஆராயத் தீர்மானித்தேன்.

அவருக்கும் எனக்குமான உறவு அவரும் நானும் அந்நாட்களில் திராவிடர் கழக இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பதே. எனவே, எங்கு கூட்டம் நடந்தாலும் நிச்சயம் அவரைக் காண இயலும். அவரைப் பின்தொடர்ந்த படியே சில பல நாட்கள் ஆய்வு செய்ததில் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் புலப் பட்டது.

அவரது பேச்சு எப்போதுமே மற்றவர்களுக்கு உதவும் பேச்சாக, நலம் விசாரிக்கும் பேச்சாக, தகவல் அளிக்கும் பேச்சாக, பாராட்டும் பேச்சாக, நன்றி கூறும் பேச்சாக, உற்சாகம் தரும் பேச்சாக, கள்ளம் கபடம் அற்ற பேச்சாக மட்டுமே இருப்பதைக் கண்டு வியந்தேன்!

அவரது பேச்சு கிட்ட தட்ட இப்படி இருக்கும்:

"நான் காலையிலே உங்க வீட்டுக்கு வர்றேன். அந்த லெட்டர்-ஐ கொடுங்க. நான் அங்க தான் போகப் போறேன் - தந்துடறேன்"
" அய்யா! அந்த பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் தர ஆரம்பிச்சாச்சி- உங்க பையனுக்காக ஒரு நாள் சரவணன் கிட்டே கேட்டிருந்தீங்களே!"
" ஆமா! அன்னக்கி அந்த மழைல, பாவம் எப்படி போனீங்க - எத்தனை மணிக்கு வீட்டுக்குப் போய் சேர்ந்தீங்க"?
" தம்பி! நேத்து மீட்டிங்குல கலக்கிட்டீங்க. ரொம்ப நல்லா இருந்தது உங்க பேச்சு. வாழ்த்துக்கள்!"
இப்படிதான் இருக்கும் அவரது உரையாடல்!
பிறரிடம் அவர் உதவி கேட்பதாய் இருந்தாலும், " எனக்கு ஒரு சின்ன உதவி..முடிஞ்சா பாருங்க...ஒன்னும் நிர்பந்தம் இல்ல.."ன்னு சொல்லி விட்டு இயல்பாக கேட்பார். நிறைய நண்பர்கள் இருந்ததால் அவருடைய வேலைகள் வெகு எளிதாகவும் விரைவாகவும் முடிந்துவிடும்.

இப்போது எனக்குப் புரிந்துவிட்டது! சிலரை நமக்கு அதிகம் பிடிப்பதும் - சிலரை ஏதோ காரணத்தினால் நம் மனம் தவிர்ப்பதும்!

மேற்கண்ட பேச்சையே இப்போது வேறு விதமாக மாற்றிப் பார்ப்போமா?

"நீங்க காலையிலே போற வழியிலே என் வீட்டுக்கு வந்துட்டு போக முடியுமா-ஒரு லெட்டர் இருக்கு-அவர் கிட்ட தந்துடுங்க "

உங்க வீட்டுப் பக்கத்துல அந்த பள்ளியிலே விண்ணப்பம் தர்றாங்க...வாங்கி வைக்க முடியுமா?

அன்னக்கி மழையிலே நிக்கறப்போ ஒரு பிளாட் பத்தி சொன்னீங்களே- விசாரிச்சுட்டீங்களா?

நேத்து மீட்டிங்குக்கு என்னால வர முடியலே....எனக்கு ஆபீஸ்-ல ஒரே டென்ஷன். இப்பக்கூட எப்பிடியோ அடிச்சி பிடிச்சி வந்தேன்"

மேற்கண்ட இரண்டு விதமான பேச்சும் பேச்சுதான்!

ஆனால், நம் உள் மனதில், முதல் விதப் பேச்சு ஒரு வித உற்சாகத்தையும்
இரண்டாம் விதப் பேச்சு ஒரு வித மனச் சோர்வையும் தருகிறது!

காரணம் வெளிப்படையானது தான் !
முதல் பேச்சில் பொது நலம், உள்நோக்கம் இன்மை, அன்பு, பிறர் மீது கரிசனம் வெளிப்படத் தெரிகிறது!
இரண்டாம் பேச்சில் தன்னை மட்டும் முன்னிறுத்திய தன்மை மறைந்து கிடக்கிறது!

அதாவது, சுயநலம், மற்றவர்கள் மீது வெறுப்பு உமிழ்தல், பரபரப்பு, இறுக்கமான மன நிலை, உழைப்பின் மீது நம்பிக்கை இன்மை, அடுத்தவர்களை குறை கூறுதல், நேரம் தவறுதல்-அதற்கு சாக்கு போக்கு கூறுதல், தனது மதம்/கட்சி அது சார்ந்த கொள்கைகளே உயர்ந்தது என்று விதண்டா வாதம் பண்ணி நேரக் கொலை செய்வது, துடுக்காகப் பேசி அடுத்தவர் மனதைப் புண்படுத்துவது, எப்போதும் தன்னைச் சுற்றியே இந்த உலகம் இயங்க வேண்டும் என்று, ஒரு வித
"தன் முனைப்போடு" (Egoful activities) செயல் படுவது, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற தவறான நினைப்பு, மூடிய மன நிலை, ஆராயாமல் உடனடியாக
முடிவுக்கு வரும் குணம் (Jumping in to conclusions) இவை யாவும் கொண்ட ஒரு மனிதரை அல்லது இதில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடுகிறது. திடீரென்று இது நடக்கும்!

மேல் மனதுக்கு ஏன் எதற்கு இப்படி பிடிக்காமல் போகிறது என்று காரணங்கள் புரியா விட்டாலும், ஒருவரைப் பிடிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான காரணம் என்னவென்று ஆழ் மனதுக்கு மட்டும் எப்படியோ 'பளிச்' என்று தெரிந்து விடுகிறது!

உங்களுக்கு அந்தப் 'பளிச்' பளிச்சிடுகிறதா?

-மோகன் பால்கி
( நட்பு எப்படி இருக்க வேண்டும்? இங்கே சொடுக்குக! )

இது நம் நீரிழிவு (Diabetes) நோயின் அளவு!



00:00



KanneKaniyamuthe Movie contd
Movies
01:30 Song Sequence Music based
04:30 News (இது மட்டும் தான் சினிமா இல்லை) News based
05:00 Song Sequence Music based
07:00 Movie - Avathara Purushan Movies
09:30 Kodambakkam Movies
10:00 Movie - Vesham Movies
13:00 Movie - Doctor Amma Movies
16:00 Vanna Thirai Movies
16:30 Movie - Kizhakkum Merkkum Movies
19:00 Sirikalam Vaanga Film based
19:30 Thirai Minnalgal பிலிம்
20:00 Movie - Nilakkaalam Movies
23:00 Movie - Kanne Kaniyamuthe Movies

00:00 KanneKaniyamuthe Movie contd Movies

http://www.sunnetwork.org/tvschedules/schedule.asp?tv=ktv
மேற்கண்ட இந்த அட்டவணை. K-டிவி யின் ஒரு நாள் பொழுது (K TV Schedule for 11-Mar-2010) எப்படிக் கழிகிறது என்பதாகும். ஜீரோ ஜீரோ முதல் இருபத்து நான்கு மணி வரை ஒரே ஒரு அரை மணி நேரம் தவிர மீதம் யாவும் திரைப் படங்கள், மற்றும் திரைப் பாடல்கள். இந்த டிவி-என்று அல்ல-கிட்ட தட்ட எல்லா டிவி-களிலும் இது போல் திரைப் படங்கள்-சின்னத் திரைத் தொடர்கள்! மக்கள் பாவம் என்னதான் செய்வார்கள்!

வேறு சில காரணங்கள் இருப்பினும் இது போன்று திரைப் படம் உட்கார்ந்து பார்த்துப் பார்த்து உழைப்பு கொஞ்சம் கூட இல்லாமல் சாப்பிட்டு சாப்பிட்டு, நீரிழிவு நோய் பெண்கள் பலருக்கும் இப்போது வர ஆரம்பித்து விட்டது. முன்பெல்லாம் ஆண்களுக்குதான், அதுவும் ஒய்வு பெற்றவர்களுக்கு வரும். இப்போது, இளைஞர்களும், தான் விளையாடுவதை விட்டு விட்டு பிறர் ஆடும் கிரிக்கெட்டை மணிக் கணக்கில் பார்த்துப் பார்த்து உழைப்பற்ற சோம்பேறிகள் ஆகி நீரிழிவுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஓடி ஆட வேண்டிய சிறுவர் சிறுமிகளும் இதில் அடக்கம். இப்போதெல்லாம் தெருவில், வீட்டு வாசல்களில், கோவில்களில், மக்கட் கூட்டத்தைக் காண முடிவதேயில்லை. மயானம் போல் இருக்கிறது. எல்லோரும் டிவி, வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் என்று அந்த முட்டாள் பெட்டிகளிடமே (Idiot-Boxes) தஞ்சம் அடைந்து ஒரு "நடமாடாப் பிணங்களாக" மாறி வருகிறர்கள். கை-காலை ஆட்டுவது கூட இல்லை! இதற்கு இடையில், வேளை தவறாமல் சாப்பிட்ட உணவு மட்டும், சக்தி செலவில்லாமல் மீதம் உள்ள உடலின் சக்தி (Excess Glucose) அதிக க்ளுகோஸ்-ஆக சேர்த்து வைக்கப் பட்டு நீரிழிவு நோய் ஆரம்பம் ஆகிறது!

வரும் காலத்தில், அதாவது இன்னும் பத்து வருடங்களில் தமிழகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நீரிழிவு நோயாளிகளாக இருப்பார்கள் என்பது என் யூகம்!

-மோகன் பால்கி
(What is diabetes? What causes diabetes?மேலும் தகவலறிய இங்கே சொடுக்குக!)