Translate this blog to any language

புதன், 15 அக்டோபர், 2008

Anger - A creative State! கோபம் - ஒரு ஆக்க நிலை!


கோபம்....

நமது இயலாமையின் வெளிப்பாடு
நம் மீது நாம் கொள்ளும் ஆத்திரம்!

கொசுவின் மீது யாரும்
ஆத்திரம் கொள்வது கிடையாது!

கொசு
தொல்லையே செய்கிறது !

புயல் காற்றின் மீதும்
யாரும் கோபம் கொள்வது இல்லை !

ஆனால்

நம்மால் இயலுமா இயலாதா
என்னும் கையறு நிலைகளில் தான்
கோபம் ஏற்படுகிறது!

அதாவது
கொசுத் தொல்லைக்கும்
புயல் காற்றிற்கும்
இடையிலான நமது சக்திக்குட்பட்ட
சந்தேகப் பிரதேசங்களில் தான்
ஆத்திரமானது
ஒரு அழையா விருந்தாளியாக வந்து
நம் தலைக்குள் அமர்கிறது!

கோபம் ஒரு தேக்கம் -
ஆத்திரம் ஒரு அவஸ்தை !
விழுங்கவும் இயலாமல்
துப்பவும் முடியாமல்
தவிக்கும் ஒரு தவிப்பு!

எந்தவொரு முயற்சியும்
இந்தத் தவிப்பில் இருந்தே
ஆரம்பம் ஆகி இருக்கிறது!

ஆம்!
தவிப்பு இல்லையேல்
முயற்சியும் இல்லை !

முயற்சியில் அவஸ்தை உண்டு
முயற்சியில் துன்பம் உண்டு!

உடல் பயிற்சியின் பொது கூட
நாம் பார்த்திருக்கிறோமே !

வலியும் வேதனையும்
தசைகளில் இருக்கும்;

மறுநாள் பயிற்சி தொடர
மனம் மறுக்கும் !

மனதை ஒதுக்கி வலியை பொறுத்தால்
விடாப் பயிற்சியில் வீரனாகலாம் !

வலியில்லாமல் வடிவம் உண்டா?
முயற்சியிலாத பரிசுதான் உண்டா?

ஒவ்வொரு வலியும் நீள நீட்சியே ;
துன்பம் யாவுமே மெய் வளர்ச்சியே !

எங்கே வலி இருக்கின்றதோ
அங்கே மௌனமாய் ஒரு
வளர்ச்சி நடைபெறுகின்றது
என்றே பொருள் !

ஆக
நம் சக்திக்குட்பட்ட கோபம்
நம் சாத்தியத்துக்கு உட்பட்ட வளர்ச்சி!

வளர்ச்சி - வலி!
தாங்கியே தீரவேண்டும்!

ஆயினும்
கோபம் தன்-வளர்ச்சி சார்ந்தது!
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க நினையாதது!

கோபம்
தேக்கி வைக்கப்பட்ட
அணைக்கட்டு-நீர்!

ஆக்க வேலைகள் பலவும்
அவனுக்கு
காத்துக் கிடக்கின்றன!

மாறாக
அடுத்தவன் வளர்ச்சியை
அழிக்க எண்ணும் கோபம்
'பொறாமை' ஆகிறது !

பொறாமைத் தீ - ஒரு பூமராங் போல!
புறப்பட்ட இடத்தையே வந்தடைந்து
அனுப்பியவனையே
அது அழித்து விடுகிறது!

கோபம் ஒரு ஆக்க நிலை!
பொறமையோ வெறும்
தேக்க நிலை மட்டுமே!

கோபத்துக்கு
ஒரு நதியின் குணம் உண்டு!

குட்டையின் குணமே பொறாமைக்கு!

மலையில் இருந்து
தலைக் குப்புற விழுந்த கோபத்தில்
புறப்படும் நதி
பாலை வனங்களில் பசுமை பரப்பி
நாடுகள் தாண்டி கடலைச் சேரும்!

நதியின் கோபமே-பூமியின் பூரிப்பு!

பசுமையின் அடர்த்தி என்பது
நதித்தலை படர்ந்த
கோபத்தின் அடர்த்தியே!

அடர்ந்த கோபம்-தொடர்ந்த பசுமை!

சீறிப் பாயும் நதி-சீரிய வளமை!

ஒரு காந்தியின் கோபமே
சுதந்திர பாரதம் !

கோபத்துக்குள் விகித முரண்கள்
ஆயிரம் இருக்கலாம்!

அகிம்சை கோபம்-அறிவுக் கோபம் !
ஆத்திரக் கோபம்-அவசரக் கோபம் !
வறுமை கோபம்-வாலிபக் கோபம் !
பொறுத்துப் பொங்கிய தீவிரக் கோபம் !
இப்படியாக எண்ணிலாக் கோபம்!

ஓடுகள் உடைத்து மண்ணைக் கிழித்து
வானம் பார்க்கும்
கோப விதையே விருட்சம்-சுபிட்சம் !

எழுச்சி இல்லையேல்
கருவிதை-கல்லைறை!

கதகதப்பூட்டி அடைகாக்கும் போதும்
குஞ்சுப் பறவையின்
சின்ன அலகே
முட்டைத் தடைகளை
முட்டி உடைக்கும்!

மனிதக் குழந்தையும் அவ்வாறே !
இருகால் முயற்சி
தாய்க்கென்றாலும்
மறுகால் தலைமை
சிசுவின் பணியே !

இயக்கம் என்பதே
இருகை கூட்டு!
நதியின் விரிவும்-பூமியின் சரிவும் போல்!

தலைக் குப்புற
மலை மீதிருந்து விழுந்த
கோப-நதி' போல்
வீரியத்தோடு
புறப்பட்டு போங்கள் !

சுற்றுப் புறங்களைப்
பசுமை ஆக்குங்கள் !

உங்கள் கோபம்
ஆக்க சக்தியின்
அற்புத வடிவம்!

அணைந்து விடாமல்
ஒளி பரவட்டும்!

- மோகன் பால்கி

செவ்வாய், 14 அக்டோபர், 2008

உட் குழிந்த குறைகள் !


குறை காணும் கண்கள்.....

உனது பார்வையில் நானும்
எனது பார்வையில் நீயுமாய்...!

அட !
குறை என்பதுதான் என்ன?

எனது இயலாமையை

உனது 'இயலுமையால்'
நிரவும் முயற்சியின்
பதட்டம் தானே !

உண்மையில்
என் குறை என்பதும்
உன் குறை என்பதும்
பார்வை கோண மாறுபாட்டில்
ஒளிரும்
'ஒரு-பரிமாண'
உரு வெளி பிம்பமே!

மேலும்
நீ காணும் எனது
'உட் குழிந்த' குறைகள்
'வெளிக் குவிந்த' நிறைகளாக
வேறொரு கோணத்தில்
வேற்றாரால் உணரப்படும் !

உனதும் அவ்வாறே !

ஆம்!
அறிவு காணும் குறைகள் என்பன
"ஒரு-பரிமாண"
தோற்ற மாயையே !

அன்பில் உணரும்
உச்ச உண்மையே
"பல்-பரிமாண"
வாழ்வின் இரகசியம் !

-மோகன் பால்கி

Me - A fragment of Nature! நான் இயற்கையின் கூறு!


நான் என்னில் வேர் விட்டு
இறுக்கமாய் எனைப் பற்றி
என்னிலிருந்து
என் மேல் உயர்ந்தவன் !

எனது கிளைகளில்
பூத்துக் கனிபவன் !

என்னை
எந்த மனித சக்தியும்
திசை திருப்பி
வீழ்த்தி விட முடியாது!

சேற்றிலே பிறந்தாலும்
செந்தாமரை எப்படி
சேற்றில் ஒட்டாமல்
நீர் பரப்புக்கு மேலே உயர்ந்து
கம்பீரமாய் மலர்கிறதோ
அவ்வாறே
மனிதர்களுக்கு மத்தியில்
பிறந்தாலும்
நான்
மனிதனல்லன் !

நான்
பஞ்ச பூதங்களின் கலவை

இயற்கையின் அடையாளம்

ஆதியந்தமற்ற
இப்பிரபஞ்சத்தின்
ஓர் உன்னதக் கூறு!

-மோகன் பால்கி

Life - The Great Master ! வாழ்வு ஒரு ஞானாசிரியன் !

வாழ்வு ஒரு ஞானாசிரியன்!

அது
நூலகங்களில்
அடுக்கி வைக்கப் பட்டிருக்கிற
ஏராளமான புத்தகங்கள்
கற்றுத் தருவதைக் காட்டிலும்
அதிகமானதை
நமக்குக் கற்றுத் தருகிறது!

ஆயினும்
வாழ்வின் படிப்பினைகளை
நாம் நம்பத் தயாரில்லை!

மேலும்
உண்மைகளை விட
நாம் பொய்களையே
அதிகம் நேசிக்கிறோம் !

ஏனெனில்
பொய்மை எப்போதுமே
அழகு மிக்கது போன்றும்
நம்பிக்கையூட்டுவது போன்றும்
தோற்றம் அளிக்கிறது !

- மோகன் பால்கி

ஞாயிறு, 12 அக்டோபர், 2008

முதலில் சரியான வாழ்வு!

என்னைக் கேட்டால்
கடவுள் தியானம் வாழ்வு
என்கிற வரிசையில்
நான்
வாழ்வுக்கே முன்னுரிமை தருவேன்!

ஏன் எனில்
சரியான வாழ்வு
வாழ்ந்தவொரு மனிதனுக்கே
சரியான தியானம் கை கூடுகிறது!
சரியான தியானம் கை கூடிய பின்னர்
அவனே 'சத்-சித்-ஆனந்த' இறைவனை
சதா சர்வ காலமும்
உணர்கிறான்!

ஆக
முதலில் சரியான வாழ்வு
இரண்டாவதாக சரியான தியானம்

மூன்றாவதாகவே
'கடவுளை உணர்தல்'
நிகழ்கிறது!

- மோகன் பால்கி

வெறும் சப்தம் !

எனது சில நூறு சொற்கள்
ஏதோ ஒரு மனிதனை
உள்ளும் புறமும் மாற்றி

அவனை மகிழ்வித்து
அடுத்தவர்களையும்
மகிழ்விக்கும் எனில்

அதற்காக நான்
ஆயிரம் சொற்களைப்
பேச தயார்!

அல்லாமல்

மனித மனங்களைப்
பண்படுத்தாத
எந்த ஒரு ஆடம்பரப் பேச்சும்

வெறும் சப்தமும்
சுய தம்பட்டமுமே ஆகும்!

- மோகன் பால்கி

Me - A son of this Soil ! நான் பூமியில் பிறந்த மனிதன்!

வானத்தில் இருப்பதாக
கருதப் படுகிற
தேவர்களைப் பற்றி
பேசுவதைக் காட்டிலும்
நான்
பூமியில் வாழ்கிற
மனிதர்களைப் பற்றி பேசுவதையே
பெரிதும் விரும்புகிறேன்!

ஏன் என்றால்
நான்
பூமியில் பிறந்த
மனிதன்!

- மோகன் பால்கி