Translate this blog to any language

திங்கள், 27 அக்டோபர், 2008

இருப்பதோ இல்லாமை!


குரு:: இருந்தது இல்லை...
இருப்பது இல்லாமை!
கொடுப்பதற்கு எதுவும்
இவ்விடம் இல்லை!

சீடன்: இல்லாமையை தாருங்கள்
என் அன்பு குருவே !

குரு: இல்லாமை சூன்யம்-
சூன்யம் வெறுமை!

தரப்பட முடியாதது....
உணரப்படக் கூடியது மட்டுமே!

-மோகன் பால்கி

அன்பை அன்பறியும்!


அன்பை அன்பே அறியும் !
அன்பை ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!

நீரை நீர் அறிந்து
கலக்கும் எளிதாக !

நீருக்குள் பாறை
யுகம் யுகமாய் இருந்தாலும்
பாறை கரைவதில்லை;
கரைந்து கலப்பதில்லை!

அம்மட்டோ ?
பாறையுடன் பாறையே
சேர்வதில்லை!
ஆணவமும் ஆணவமும்
அப்படித்தான்!

அன்பு
பெரும் சக்தி-
ஒருசக்தி !
ஆணவம்
தனி இயக்கம்
பிண முயக்கம்!

எளிய ஆணவமும்
புத்தப் பேரன்பை
ஒருக்காலும் அறியாது!

அன்பை
அன்பே அறியும்-
அன்பை
ஆணவம்
ஒருபோதும் அறிவதில்லை!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

இதுவே அதிகம் - இறைவா!


அய்யனே !

நீ என்
ஆழ்ந்த மையத்தில்
அமைதியாய் அமர்ந்தவன்!
என் மையம் உணர்ந்தவன் !
அது
ஒன்றே போதும்
எனக்கு!

நீ என்னில் இருந்து
என்னை ஆள்பவன் - எந்தன்
ஆண்டவன்!

என் உள்ளும்-புறமும்
யாவுமறிந்தவன் !
மையப் பகுதியில்
கோவில் கொண்டவன்!

போதும் இறைவா!
இதுவே அதிகம்!

இனி,
பிறவி-நூறையும்
பொறுமையாய்க் கடப்பேன்!

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Rolling Stocks ! இரயில் பெட்டிகள்



எந்தக் குழந்தையும்
தன் தாய் தந்தையை
"அம்மா" "அப்பா"
என்றழைக்கும் போது
எனக்கு ஏனோ
அந்த
நெடிதுயர்ந்த ஆலமரத்தின்
விழுதுகளே நினைவுக்கு வரும்!

அதுகளே
"மம்மி" "டாடி"
என்று கத்தும் போது
அந்த
ஐரோப்பிய
இரயில் பெட்டிகளே
நினைவுக்கு வருகின்றன;

எப்போது வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ள -
கழன்று செல்ல !

"இந்தக் கணத்தில்" ....1997
மணிமேகலைப் பிரசுரம்
-மோகன் பால்கி

Eternal Slaves ! நிரந்தர அடிமைகள் !


நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்....
நிரந்தர அடிமைகளாய் நாம்!

ஐந்து முப்பதுக்கு எழுந்து
ஆறேகாலுக்குள் ஆயத்தமாகி
ஆறு இருபத்தைந்து
பேருந்து பிடித்து-
ஏழு பத்து ரயிலைப் பிடித்து
எட்டு நாற்பது பேருந்தை
மீண்டும் ஓடிப் பிடித்து
தொங்கியவாறு பயணம் செய்து
ஒன்பது மணிக்குள்
அலுவலகப் பதிவேட்டில்
கையெழுத்திட வேண்டும்!

இதற்குள் எல்லாம்
சரியாக
நடக்க வேண்டும்!

மீண்டும் ஐந்து மணிக்கே
அலுவலகம் முடிந்தாலும்
மேலே இருப்பவனின்
மெச்சுதல் வேண்டி
ஆறுக்கோ ஏழுக்கோ கிளம்பி
ஒன்பதுக்கோ பத்துக்கோ
வீட்டைச் சேர்கையில்
புறநகர் முழுதும்
மொத்தமாய் தூங்கும் !

வீட்டுப் பாடங்களை
முடித்து விட்டு
அப்பாவின் முகத்தைக் காண
ஆவலாய் காத்திருந்த
குழந்தைகள்
அரைத் தூக்கத்தில்
அரை குறையாய்ப் பேசும்!

அவற்றிற்கும்
அதனதன் கவலை!

காலையில் எழுந்து
மிச்ச சொச்ச பாடங்களை
முடித்து விட்டு
பள்ளிக்கு கிளம்ப வேண்டுமே!

இப்படியாக ஒவ்வொரு நாளும்...

நேரத்தின்
கோரப் பற்களுக்கிடையில்
நிரந்தர
அடிமைகளாய் நாம்!

"இந்தக் கணத்தில்"..1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

தாமரை அழகில்லை!


சூரியன் எழுமுன்
எழுந்து போய்
தாமரை மலர்வதைக் காண
பேராவல் எனக்கு !

நகர வாழக்கையில்
அதற்கு எங்கே போவது?

இதோ!

அதை விடப் பேரழகாய்
என் குழந்தை
காலையில்
கண் மலர்ந்தாள்!

-"இந்தக் கணத்தில்".... - 1997
மணிமேகலைப் பிரசுரம்
- மோகன் பால்கி

Meditation "Happens" - தியானம் - "நிகழ்கிறது"!


நான் தியானம் செய்கிறேன்...

என்று எவராவது சொன்னால்
அது மிகவும் தவறான வார்த்தையாகும்!
நம்மை விட பிரம்மாண்டமானதை
நாம் எப்படி செய்ய முடியும்?

அது கிட்டத்தட்ட

"நான் காற்று செய்யப் போகிறேன்"
"நான் தூக்கம் செய்யப் போகிறேன்"
என்பதைப் போன்ற அபத்தமாகும்!

தூக்கத்தை நம்மால் செய்ய முடியாது;
அது நம் உழைப்பின் களைப்பினால்
பரிசாகக் கிடைப்பது!
அதனால்தான் உடல் உழைப்பற்றவர்களால்
சரிவரத் தூங்க முடிவதில்லை!

தூக்கம் என்பது செயல் அன்று!
அது
உழைப்பின் பயன் ஆகும்!

மரக் கன்றுகள் நடுவது நமது செயல்;
அதில் பழம் வருவதோ வராததோ
அதன் பயன் ஆகும்!

நாம் மரக் கன்றுகள் நடலாம் - அதில்
நம்மால் பழம் வரவழைக்க இயலாது!

நாம் தியானத்துக்காக அமரலாம் - ஆனால்
தியானத்தை நம்மால் செய்ய இயலாது!

உண்மை என்னவென்றால்,

அழுக்குகள் நீங்கியவிடத்து
சுத்தம் தெரிவதைப் போன்று
மன மாசுகள் நீங்கியவிடத்து
தியானம் நிகழ்கிறது!

-"வாழ்வும் தியானமும் ".... - 2004
யோஜென் பதிப்பகம்
-மோகன் பால்கி