Translate this blog to any language

வெள்ளி, 7 செப்டம்பர், 2012

Are Tamils the migrating species & Homeless? தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!


சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம் 

சின்னேரம்  மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்!
சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி
சிருங்கார பட்டாசு உலகமெலாம் ஏற்றுமதி 
ஆயிரம் கோடிகளில் புரளுகின்ற செலவாணி 
அத்தனையும் உள்ளத்தில் சட்டென்று நினைவுவரும்!
நேற்றொரு நாள் மதியத்தில் மனமொடிந்தேன்
முதலிப் பட்டென்னும் ஊரொன்றில் வெடிவிபத்தாம்!

ஆறெட்டு அறைமுழுதும் நாலாறு ஆள்வீதம் 
முன்னூறோ நானூறோ தொழிலாளர் பணிபுரிய 
ஓரறையில் தவறுதலாய் தீப்பற்றி வியாபித்து 
ஒவ்வொன்றாய் வெடிவெடித்து சிதறிப் புகைசூழ 
பட்டாசுத் தொழிற்சாலை மண்மூடிப் போனதம்மா!
பெருஞ்சப்தம் தொடர்ந்துவர ஊர்மக்கள் சிலநூறும்
அருமைச் சொந்தங்கள் உறவுகளை காப்பாற்ற 
முன்னேறிச் செல்கையிலே பெருஞ்சோகம் இன்னொன்றாம்!

பட்டாசுக் கிட்டங்கி வெடித்துச் சிதறியதால் 
உள்ளிருந்த தொழிலாளர் காப்பாற்றப் போனவரும் 
செல்லரித்த புத்தகமாய் சிதறிச் செத்தொழிந்தார்!
அம்மவோ! ஆற்றாமை உள்ளமெலாம் எரியுதம்மா 
விம்மி அழுவதற்கோ இருபத்து கோடிவிழி?
படித்தவர் படிப்பெதற்கோ காப்பதவர் கடனிலையோ?
அரசும் அறிஞர்களும் இம்மட்டும் செய்ததென?
வறியவரை காப்பதற்கு வகுத்தாண்ட முறைகளென?

வருமுன்னர் காவாதான் கதைகள் அறியேமோ ?
எண்ணிக்கை சொல்வதெலாம் உண்மை எனலாமோ? 
உளர்-இலர் மெய்க்கதைகள் கணக்கும் சரிதானோ ? 
உழைத்துப் பிழைக்கின்ற தமிழ்மக்கள் கதிஇதுவோ 
உலகமெலாம் நீர்-நெருப்பால் அழிவதே நம்விதியோ?
தமிழ்உயிர்க்கு மதிப்பிலையோ வெறும் மயிரோ? 
அமிழ்கடல்சூழ் நிலமெங்கும் இப்பேதை போலெவரோ?
வெறும்தூசு கண்பட்டால் சினந்தெழுஊம் இனமுண்டே! 

பெருஞ்சாவு இனமொத்தம் எரித்தொழிப்பு நிகழ்ந்தாலும் 
வெறும்பேச்சு கடுதாசி கால்நக்க வடக்கேகும் 
தெருவோரத் திருத்தலைமை உணர்வற்ற தலைமுறைகள் 
ஆண்டவன் பேர்சொல்லி தப்பிக்கும் ஆளுமைகள்!
ஆளுமையை குறைசொல்லும் முன்னாள் ஆண்டவர்கள் 
வேலைமட்டும் நடக்காமல் வீணாய்நாம் போனவராம்!
ஈழம் என்றாலும் இடிந்தகரை என்றாலும் 
தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றானே!

உலகெங்கும் உதைவாங்கி உளம்நோகவோ-தமிழன்!
தலையொன்று சரிஇருந்தால் நலம்பலவும் கிடைத்திருக்கும்! 
விலைபோன கதையால்தான் வில்லங்கம் வந்ததம்மா!
பின்னொருநாள் நம்நிலத்தில் நன்மை பெருகுமெனும்
விண்மீன்கள் தென்படலை நம்பிக்கை அழிந்ததம்மா!
ஊரடித்து உலையிலிடும் உன்மத்தம் வளருதிங்கு!
சாதியினால் சமயத்தால் பிட்டுவைத்தக் கட்சிகளால்  
திரையுலக மாயை யினால் தீமை நிலைத்ததம்மா!

இலஞ்சப் பேய்களினால் இரக்கமற்ற இராட்சதரால் 
பொய்யையே விதைக்கின்ற அரசப் புன்மையரால் 
ஆள்பவர்க்கு அடிவருடும் உயர்ந்த பதவியரால் 
ஏழை படும்பாடு எள்ளளவும் உணராமல் 
உள்ளவர்கள் படித்தவர்கள் நாட்டை நடத்துகிறார்!
வெட்கப்பட வேண்டும் வெறும்சின்ன தேசங்கள் 
ஒற்றுமையால் தியாகத்தால் ஓங்கி வளர்ந்ததம்மா
இவர்மட்டும் தேய்கின்றார் நாடிலி ஆனாரே! 

இனி ஊழிஒன்று  வேண்டுகிறேன் வேண்டுகிறேன் யானே!
தமிழ்ச்சங்கம் அழிந்தது போல் ஊரழிக அழிக ! 
இங்கு ஆழிசூழ்  நிலமெல்லாம்  தீப்பற்றி எரிக! 
நிலம்பிளந்து மனிதமெலாம் மண்ணுக்குள் மறைக! 
பொய்மை பொசுங்கிடவே புதுக்குலமது தோன்றிடுக!  
முதுகுடி ஒன்றதுவும் முடிவதுமே நன்றாம்!
தனியொரு தமிழர்க்கு வாழ்வில்லையென்றால்
தரணியம் எதற்கோ மொத்தமுமே மறைக!  

-யோஜென் பால்கி 
www.yozenmind.com





சனி, 11 ஆகஸ்ட், 2012

Law & Dharma ? சட்டமும் தர்மமும்:

              
ஒரு நாட்டை நிர்வகிக்க பற்பல சட்டங்கள் இயற்றப்படுகின்றன. வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு சட்டங்கள் உண்டு. ஒரு நாட்டுக்குப் பொருந்தும் சட்டங்கள் இன்னொரு நாட்டுக்குப் பொருந்தாது. நாடுகளுக்கு உள்ளேயே கூட ஒரு சமயத்தை பின்பற்றும் ஒருவனுக்குப் பொருந்தும் சட்டம் இன்னொரு சமயனுக்குப் பொருந்துவதில்லை. ஆணே உயர்ந்தவன் என்னும் ஆதிக்க நாடுகளில்/ஆணாதிக்கக் காலங்களில், பெண்ணுக்குப் பொருந்திய சட்டங்கள் ஆணுக்குப் பொருந்தியதில்லை. உழைக்கும் வர்க்கங்களுக்கு ஒரு சட்டமும், பெருமுதலாளிகளுக்கு என்று ஒரு சட்டமும், உலகெங்கும் எல்லாக் காலங்களிலும் உண்டுதான். 

ஆக, சட்டத்தின் சாரம்சம் இதுதான்: ஆளும் வர்க்கம், பெருமுதலாளிகள், சமயத் தரகர்கள் ( இங்கு ஆ,பெ, ச என்று நாம் குறிப்பிடுவோம்), இம்மூவரையும் காப்பாற்றும்படிதான் உலகில் எக்காலங்களிலும் சட்டங்கள் வகுக்கப்பட்டு இருக்கின்றன-இருக்கும்! அப்படிப் பட்ட மறைமுக சட்ட முறைமையை உடையாமல் பராமரிக்கும் பணியை பூடகமாய் செய்ய, தெரிந்தும் தெரியாமலும் நிர்ப்பந்திக்கப் படுபவர்கள்தான் இராணுவம், நீதித்துறை மற்றும் காவல் துறையினர் ஆவர். ஏன் எனில், இந்த மூன்று துறையினருக்கும் சம்பளம், பதவி உயர்வு, சலுகைகள், ஒய்வு ஊதியம், பணிக்குப் பின் பாதுகாப்பு  இன்னபிற நன்மைகளை மேற்படி ஆ,பெ, ச எனும் மூவரே  செய்து தரவேண்டிய கையறு நிலை உலகில் உள்ளது. இந்த நடைமுறை எந்தக் காலத்திலும் எந்தவொரு நாட்டிலும் மாறியது கிடையாது-மாற வழியும் இல்லை. மேற்படி மூவருக்கு-மேற்படி மூவர் ஒத்தாசையாகவும் உறுதுணையாகவும் இருக்கும் காட்சிகளை நாம் நுட்பமாய்ப் பார்த்தால் நன்கு உணர முடியும்! 

சுருக்கமாய் சொன்னால், சட்டம் என்பது, ஒரு நாட்டில் உள்ள ஒரு கிராமத்தின் அடித்தட்டு சாமான்ய மனிதன் ஒருவனுக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு சாமான்ய மனிதனுக்கும்  ஏதோ ஒரு சண்டை வந்து, காவல் நிலையம் செல்லும் போது, சட்டம் அங்கே தன் கடமையை சரிவர செய்யும். நீதிமன்றமும் தன் கடமையை சரிவர செய்து அங்கு பாரபட்சமின்றி நீதியை நிலை நாட்டும் என்று நாம் நம்பலாம் ! ஆனால், அதுவே அந்த கிராமத்தின் ஓர் சாமானியனுக்கும் மேற்படி ஏதோ ஒரு ஆ,பெ, ச வுக்கும் சச்சரவு வந்து காவல் மற்றும் நீதித் துறையை அணுகும் போது, நிலைமை எவ்வாறு இருக்கும்? சற்று யோசித்துப் பாருங்கள்! 

அந்த சாமான்யனின் பக்கம் 100% நியாயம் இருந்தாலும், ஒரு காவல் துறை உயர்அதிகாரி மற்றும், நீதிஅரசர் ஒருவர், மேற்படி வானளாவிய அதிகாரம் கொண்ட ஆ,பெ, ச க்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி சட்டத்தை நிலை நிறுத்துவார் என்று நாம் சிறுபிள்ளைத்தனமாக நம்ப இயலுமா? உலகில் அது போல எங்காவது நடந்துள்ளதா? அட! எப்போதாவது நூறு முறைக்கு ஒரு முறை, அவ்வாறு விதிவிலக்காக சில நிகழ்வுகள் நடந்து இருக்கலாம்-ஆனால், விதிவிலக்குகள் என்றுமே விதிகள் ஆகாவே!

உங்களில் ஒருவர் இங்கு, ஆ,பெ, ச க்களுக்கு இடையில் சச்சரவு வந்தால் நிலைமை எப்படி போகும் என்று கேட்பது எனக்குக் கேட்கிறது. சமயத் தரகர்களுக்கு சிற்சில நாடுகளில் செல்வாக்கு இருந்தாலும், பொதுவாகவே முடிவில் ஆளும் அரசியல் வர்க்கங்களே, காவல்துறை மற்றும் இராணுவ பலத்தைப் பிரயோகம் செய்து தம்வெற்றியைத் தற்காலிகமாகத் தக்கவைத்துக் கொள்வர். அடுத்தவன் ஒருவன் வந்து அந்தத் தலைமையையும் அழித்துவிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து அதிகார சுகம் தேடுவான்-அவனும் மறைவான், இது என்றும் தொடர்கதை! 

அது ஒரு புறம் கிடக்க, உள்நாட்டுச் சட்டங்கள் என்றுதான்  இல்லை, பன்னாட்டுச் சட்டங்கள் என்று வரும்போதும், அமெரிக்கா செய்கிற அதே 'சட்டாம்பிள்ளைத் தனமான' காரியத்தை உலகில் வேறு எந்த நாடுகளும் இன்னொரு நாட்டின் மீது செய்ய இயலுமா? சொத்தைக் காரணங்கள் சொல்லி ஒருவனைத் தூக்கில் போடுவது, இன்னொருவன் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது போல, இன்னொருவன் நாட்டுக்குள் அத்துமீறிப் புகுந்து கொள்வது, வேவு பார்ப்பது, கைது செய்வது, கொலை செய்வது இன்ன பிற காரியங்கள்??

"தடி எடுத்தவன் தண்டல் காரன்", "பேட்டை-ரவுடி", "பசை-உள்ளவன்", "ஏழை சொல் அம்பலம் ஏறாது", "செல்வாக்கு-உள்ளவன்", இது போன்ற சொற்றொடர்கள் நமக்குப் போதிப்பவை என்ன?
"சட்டம்" என்பது, வலுத்தவன் கையில் கிடைத்த ஒரு நுட்பமான 'அறிவாயுதம்' என்பதே! அறிவு என்பதோ, எப்போதுமே தன்னை பிறரிடம் இருந்து தற்காத்துக் கொள்ள சட்டம் (வழி) ஒன்றை வகுத்து வைத்துவிட்டு,  அந்தத் தவறை தான் செய்யும்போது தப்பித்துக் கொள்ள அங்கு ஒரு ஓட்டையையும் முன்கூட்டியே போட்டு, மறைத்து வைக்கும் இயல்புடையது. 

அதனால்தான், பெருமன்னர்களும், பெரும் பணக்காரர்களும், அறிவாளிகளும் சட்டத்தின் சந்து பொந்துகளில் இருந்து மிக எளிதாகத் தப்பித்து விடுகிறார்கள். மிஞ்சி மிஞ்சி, இந்த உலகில் பார்த்தால், சிறையில்/தண்டனையில் மாட்டிக் கொண்ட வெகு சிலரும், பெரிய நாட்டை பகைத்துக் கொண்ட சிறிய நாட்டினர், பெரிய கட்சியைப் பகைத்துக் கொண்ட சிறிய கட்சியினர், பின்புலம் அற்ற சின்னஞ்சிறு பணக்காரர்கள், சிறிய கூட்டத்தை வைத்திருக்கும் சமயவாதிகள் இப்படித்தான் இருப்பர்!

எனவே, சட்டத்தின் வீச்சம், பயன்பாடு  இதுதான்.


ஆனால், "தருமம்" என்பது வேறு ஆகும்! 

தர்மம் என்பது நம்மிரு கண்கள் என்று நாம் கொண்டால், அதன் மீது நம் விருப்பப்படி அணியும், வண்ணவண்ணக்  'கண்ணாடி'க்கு பெயர்தான் சட்டம் ஆகும்! சட்டங்கள் காலத்துக்குக் காலம், நாட்டுக்கு நாடு மாறும். ஆனால், தருமம் என்பது (அறன் என்பர்), மூவுலகங்களுக்கும், மூன்று காலங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் பொருந்துவதாகும்!

உதாரணமாக, சாலையில் அடிபட்டு உயிர் துடித்துக் கொண்டு இருக்கும், ஒரு மனிதனை/ ஒரு விலங்கை நீங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று எந்தவொரு சட்டமும் இல்லை. அதனால்,  நீங்கள் சட்டத்தின் "மூக்குக் கண்ணாடி" வழியாகப் பார்த்தால் அங்கு குற்றவாளி இல்லை. ஆனால், தர்மத்தின் "கண்கள்" வழியாக  நீங்கள் அங்கு ஒரு குற்றவாளி ஆவீர்கள்!

இன்னொரு உதாரணம், நீங்கள் உங்கள் மனைவி, ஒரு குழந்தை கொண்ட மூன்று பேர் குடும்பத்துக்கு மூன்று கிரவுண்டு நிலம் வாங்குகிறீர்கள், அங்குள்ள முப்பது மரங்கள், முன்னூறு செடிகொடிகள், அவற்றை சார்ந்து வாழும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து, மூன்று மாடியில் ஒரு மாளிகை கட்டுகிறீர்கள். இதில் சட்டப்படி எதுவும் தவறில்லை. ஆனால், தர்மத்தின் படி நீங்கள் ஒரு பெரும் பாவி! தேவையை மீறாமல், இயற்கையை நீங்கள் மரியாதை செலுத்தி பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே 'ஹிந்து-தர்மமாகும்"

இதனையே நமது ஹிந்து-மதம் மென்மையாய் சுட்டிக் காட்டுகிறது! வாழும் வழி முறைகளை அது நமக்கு இதமாய் போதிக்கிறது! ஹிந்து-மதம் வெறும் சட்டங்களை வாய் கிழியப் பேசுவதில்லை. உயிர்களை நேசிக்கவும், பூஜிக்கவும் அது நமக்குச் சொல்லி தருகிறது! இங்குள்ள மண், மரம், செடி-கொடிகள், விலங்குகள், பறவைகள், நதிகள், கடல், காற்று என்று இந்த பூமியில் வாழும் அனைத்து உயிர்களையும், உயிரற்றவற்றையும்  வணங்கச் சொல்லி, மதிப்பு தரச் சொல்லி கற்றுத் தருவதும் அதனால்தான். 

அப்படிப்பட்ட "தர்மம்" பற்றி வேறொரு சமயத்தில் நான் விரிவாய் எழுதுவேன்! 

"அன்பும் அறனும் (தர்மமும்) உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது!  -குறள்