🔹வரலாற்று உண்மையை ஒதுக்கித் தள்ளி புராண அகத்தியரை முன்னிறுத்துவது ‘‘ஆரியர் – திராவிடர்’’ கண்ணோட்டமே!
🔹திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!
தமிழர் வரலாறு - பண்பாட்டின் மீதான தனது வெறுப்பை மீண்டும் ஒரு முறை ஆளும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசு வெளிப்படுத்தியுள்ளது.
2,600 ஆண்டுகளுக்கும் முந்தைய தொன்மை வாய்ந்த கீழடி நகர நாகரிகம் அகழாய்வு மூலம் வெளிக்கொணரப்பட்டதன் காரணமாக ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எழும் காழ்ப்பும், கோபமும் கொஞ்சநஞ்சமல்ல; ஆரியத்துக்கு மூத்த திராவிட நாகரிகத்தின் அறிவியல் சார்ந்த நிரூபணம் அவர்களுக்குத் தரும் அளப்பரிய ஆற்றாமையும் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து வெளிப்பட்டுவருகிறது.
🔹கீழடி ஆய்வை நிறுத்திட ஒன்றிய அரசு மேற்கொண்ட முயற்சிகள்!
2014-2015 ஆம் ஆண்டில் (முதல் ஆண்டு) கீழடியில், இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தொன்மைக்கான சான்றுகள் வெளிப்படத் தொடங்கின. அடுத்த ஆண்டு ஆய்வுகள் (2015-2016) நடைபெற்ற பின், கீழடியின் காலம் குறித்தும், தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொல்லியல் ஆய்வில் முதல்முறையாக வாழ்விடப் பகுதி கிடைத்த நிலையிலும், கீழடி ஆய்வை நிறுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியது ஒன்றிய அரசு.
மூன்றாம் ஆண்டு ஆய்வு நிறுத்தப்பட்டது. அதற்கும் வழக்கு தொடர்ந்து, ஆய்வு தொடரப்பட வேண்டும் என்று போராட வேண்டியிருந்தது! ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா அசாமுக்கு மாற்றப்பட்டார். அவரிடமிருந்து அகழாய்வுப் பணி பறிக்கப்பட்டு சிறீராம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டது. அவர் இனிமேல் கீழடியில் எதுவும் இல்லை என்று கூறினார். அதன்பின், தமிழ்நாட்டில் எழுந்த தொடர் எதிர்ப்பின் காரணமாக அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வுப் பணி நடைபெற்றுவருகிறது. இப்போது பத்தாவது ஆண்டு ஆய்வு நடைபெற்றுவருகிறது.
🔹கோயில்களை ஆய்வதிலேயே கவனம்!
1939 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் வைகை நாகரிகமும், பொருநை நாகரிகமும் சிந்துவெளிக்கு இணையான தொன்மை படைத்தவையாக இருக்கக்கூடும் என்று அந்நாளைய இந்தியத் தொல்லியல் துறையின் தலைவர் கே.என்.தீட்சித் என்பவர் முன்னறிவித்திருந்தும், அது குறித்த தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேயில்லை. தமிழ்நாட்டில் கோயில்களை ஆராய்வதிலேயே தொல்லியல் துறை அதிகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திராவிடப் பண்பாட்டின் தொன்மையை நிறுவும் ஆதிச்சநல்லூர் ஆய்வுகளும் முடக்கி வைக்கப்பட்டே இருந்தன. இந்நிலையில் கீழடி ஆய்வுகள் தான் மிகப்பெரிய விழிப்புணர்வை உருவாக்கின. அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு ஆய்வுகளின் முடிவுகளின் மூலம், இந்தியாவில் இரும்புக் காலத்தின் தொடக்கமே தமிழ்நாட்டிலிருந்து தான் என்னும் அளவுக்கு தொன்மைத் தடயங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்று நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோரியது எத்தனை உண்மை என்பது தொடர்ந்து நிறுவப்பட்டுவருகிறது.
🔹புராணமும், வரலாறும் ஒன்றா?
காலம் காலமாக இந்திய வரலாற்றின் தொடக்கமே வேத கால நாகரிகம் தான் என்றும், புராணங்களும், இதிகாசங்களுமே இந்திய வரலாறு என்றும் அளந்துவிட்டுக் கொண்டிருந்தவர்களின் புளுகுகள் எல்லாம் சிந்துவெளி ஆய்வுகள் மூலம் அம்பலப்படத் தொடங்கின. தெற்கின் வரலாறு கீழடி ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியதும், மொத்தமாக அவர்களின் பொய்மூட்டைகள் அடியற்றுப் போயின. சிந்துவெளி ஹரப்பா-மொகஞ்சதாரோ நாகரிகத்தை, சரஸ்வதி நாகரிகம் என்று திரிக்க முயல்கிறார்கள். கிருஷ்ணனுக்கு ஆதாரம் துவாரகைக் கடலுக்குள் தேடுகிறோம் என்கிறார்கள். ஆனால், கிடைத்த ஆதாரங்களை அழிக்கவும், மொத்தமாக இழுத்துமூடவும் முயல்கிறார்கள்.
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தைக் கிடப்பில் போட, ‘ஆதாம் பாலம்’, ‘இராமர் பாலம்’ என்ற ‘புரூடா!’ வழக்கு விசாரணையின்போது பா.ஜ.க. ஆதாரம் தரவில்லை!
இந்நிலையில் பல்வேறு இடையூறுகளுக்குப் பின்னர் முதல் இரண்டு ஆண்டுகளுக்கான 982 பக்க ஆய்வு அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா. அதை வெளியிடாமல் இருப்பதைக் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்ட பிறகு, நாடாளுமன்றத்தில் அரசு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்று ஆராய்வதற்கான கூட்டம் வரும் 27 முதல் 29 ஆம் தேதி வரை ஊட்டியில் நடைபெறவுள்ள நிலையில், கீழடி அறிக்கை ஏன் இன்னும் வெளியிடப்படவில்லை என்னும் கேள்விக்குப் பதில் அளிக்காமல் தப்பிப்பதற்காக ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றொரு சதிச் செயலில் இறங்கியுள்ளது.
-ஆசிரியர் திரு. கி. வீரமணி
X பதிவில் இருந்து
இன்று...(Twitter)
🌿🌿🎊🎊