Translate this blog to any language

வியாழன், 25 மார்ச், 2021

கருங்காலிகள் திரண்டு நிற்கும் போர்க்களம்: தமிழக தேர்தல் 2021.

உடைப்பெடுக்கும் மதவெறி சாக்கடை..!

தேர்தல் என்னும் பெயரில் மீண்டும் ஒரு இனப்போர் தமிழ்நாட்டில் மூளப் போகிறது. தன்மானமும் தமிழ்மானமும் உள்ளவர்கள் ஒரு பக்கமும், மான மில்லாதவர்களும், காட்டிக் கொடுக்கும் கருங்காலிகள் மறுபக்கமாகவும் திரண்டு நிற்கும் போர்க்களம் இந்தத் தேர்தல்.

ஊடகங்கள் அனைத்தும் எச்சில் கஞ்சிக்கும், எலும்புத்துண்டுக்கும் விலை போய் கிடக்கும் இந்த வேளையில் நடக்கும் ஒரு வரலாற்றுப்போர்.

மதவாதம் தனது ஆகச்சிறந்த வித்தையை எல்லாம் அவிழ்த்து விடும் காலம். இரண்டாயிரம் ஆண்டு காலம் தொடர்ந்து நடை பெறும் போர்.

காலம் மாறியிருக்கலாம்.. தலைமை மாறியிருக்கலாம்... ஆனால் கருத்து மாறாதப்போர். விபிசணனை தத்தெடுத்து இராவணனை வீழ்த்திய கூட்டம்., சூழ்ச்சியை முன்னிருத்தி மண்ணைப் பிடுங்கிக் கொண்டு மாவலியை நாட்டை விட்டுத் துரத்தியக் கூட்டம்.

கடவுளை சொல்லி நம் கல்வியை, கலையை, பொருளாதாரத்தை திருடிய கூட்டம். பொய்யையும் புரட்டையும் வைத்து காலம் முழுக்க புறவாசல் அரசியல் செய்யும், இப்படி அடிமைக் கூட்டத்தோடு நம் அம்புக் கூட்டிலிருந்து அம்பை எடுத்தே நம்மை எதிர்க்கும் நயவஞ்சகக் கூட்டம். வரலாறு நெடுக நாம் நம் இன துரோகிகளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறோம்.

இந்தத் தேர்தல் களத்தில் நம் மக்கள் இவர்களை சரியாக இனம் காண வேண்டும். இனம் காண தவறினால் திருவள்ளுவர், பெரியாரால், காமராஜர் போன்ற நமது தலைவர்களால் பெற்ற பேறு எல்லாவற்றையும் நாம் இழக்க நேரிடும். பின்பு அதை மீட்க மீண்டும் பலநூறு ஆண்டுகள் ஆகலாம்.  அதற்குள் நாம் இந்தியாவில் சிந்தி சிதறிப் போய்விடுவோம்.

தமிழ்நாட்டில் வடநாட்டவர்கள் கோலோச்சுவார்கள்.
நாம் நம் சூல் தளத்திலேயே ஏதிலியாய் ஆக்கப்படுவோம். இதை மிகை என்று எண்ணிவிடாதீர்கள். இந்திய பரப்பளவு முழுக்க பரவி வாழ்ந்த நாம் இன்று தமிழ்நாடு அளவு குறுகி விட்டோம்.

இந்தத் தேர்தல் போரில் தவறிழைத்தால் இருக்கும் இந்த நிலமும் பறிபோகும். பின்பு நம் வாழ்க்கை நாடோடி வாழ்க்கைதான். இதில் எந்த மாற்றமும் இல்லை எழுதி வைத்துக் கொள்ளலாம். நூற்றாண்டு கால வட இந்தியர்களின் திட்டத்தை இந்த தேர்தலில் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

ஊழல், ஊழல் என்று ஒப்பாரி வைக்கும் இந்த மதவெறி கூட்டம் மக்கள் பணத்தை எல்லாம் பிடுங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வடநாட்டு வகையறா களுக்கும் கொடுப்பதால் உலக நாடுகளில் நடப்பதைப்போல் இதை முதலாளித்துவ அரசு என்று எண்ணி விடாதீர்கள். 

உலக முதலாளித்துவம் என்பது வேறு.
இந்திய முதலாளித்துவம் என்பது வேறு. இரண்டுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.

வெளிநாடுகளில் உள்ள முதலாளித்துவம் பரவலாக நிறைய முதலாளிகளை உருவாக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி அல்ல. இங்கு ஜி.எஸ்.டி. வரியாக கொள்ளை அடிக்கும் பணம், விலையேற்றத்தால் கம்பெனிகள் மூலமாக கொள்ளையடிக்கும் பணம் அனைத்தும் மத வெறியர்களின் பினாமியான இரண்டு மூன்று முதலாளிகளிடம் மட்டுமே முடங்கிக் கிடக்கும்.

அம்பானியும் அதானியும் உலகு அறியாத மத வெறியர்களின் கருவூலம்.
 இது அவர்கள் கொள்கைப்படி வட இந்தியர்கள் கைவசமே இருக்கும்.
 இதை எந்தக் காலத்திலும் மக்கள் போராடி பொதுவுடமை ஆக்கிவிட முடியாது. இந்தியாவில் முடியாது. தமிழ் நாடாயிருந்தாலும் சரி கேரளாவாக இருந்தாலும் சரி இவர்களை விடவும் வட ஹிந்தியர்களுக்கே முன்னுரிமையும் முழுவுரிமையும் கொடுக்கப்படும்.


இந்த நகர்வு, ஆதிகால மத ஆலோசகர்கள் ஆலோசனைபடி நடந்த பழைய மன்னராட்சிக்கே நம்மை கொண்டு செல்லும். இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன.

இதில் எவ்வளவு பேர் தங்கள் பணத்தை இழந்திருப்பார்கள்? ஆனால் நாட்டில் எந்த போராட்டமோ வேறுவகையான எதிர்வினையோ எழுந்ததாக செய்தி இல்லை. அந்த அளவுக்கு மக்களை மதத்தின் பெயரால் மழுங்கடிக்கிறார்கள்.

ஒருநாள் இந்த வங்கிகளை இணைத்து ஒற்றை வங்கியின் கீழ் நாட்டைக் கொண்டுவரக்கூட வாய்ப்பு உள்ளது. அதன் பெயர் "வட ஹிந்தியர்கள் வங்கி” என்று கூட இருக்கலாம்.

உலக முதலாளிகளின் நடுவிலாவது போராட்டத்திற்கான வழியும் இருக்கும் திசையும் இருக்கும்.

இங்கோ, வட இந்தியர்கள் ஓங்க, ஓங்க திராவிட மக்கள் செம்மறி ஆட்டு மந்தைகள் ஆக்கப்படுவார்கள்!

நம் இனம் மறுபடியும் அடிமையாய், கூலியாய் மானமிழந்து நாயினும் கீழாய் வாழும் நிலை வரும்.

வட இந்தியர்களின் சூழ்ச்சியினை பெரியாரின் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் தெரியும். குறைந்தது 100 ஆண்டு திட்டம் வைத்தே அவர்கள் தங்கள் சூழ்ச்சியினை வடிவமைக்கிறார்கள்.

வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்டபோது இந்தியாவாக இருந்த நம்நாடு ஏன் ‘பாரதம்’ என்று பெயர் சூட்டப்பட்டது? பாரதம் என்பது அவர்களின் அரசியல் பெயர். சுதந்திரம் வாங்கும் முன்பே மதவெறியர்கள் இந்தியாவை பாரதம் என்றே அறிவித்துக் கொண்டார்கள்.

பாரதி கூட பாரத தேசமென்றே எழுதி வந்தார். பாரதம் என்பது வட இந்தியர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என்பதே பொருளாகும்

 இதை சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

நம் சங்கிக் கூட்டங்கள்தான் பாரத தேசம் உன்னதமான தேசம் என்று மக்களாட்சி கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் வட இந்தியர்களுக்குப் பின்னால் எலும்புத் துண்டுக்கும் எச்சில் சோத்துக்கும் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள்.

ஓரளவு தன்னிறைவு அடைந்தவர்கள் நாட்டைப் பற்றியோ நாட்டை ஆள்வோர் பற்றியோ சிந்திப்பதில்லை.. கஞ்சிக்கு வழியில்லாதவனுக்கு நாம் ஏன் துன்பப்படுகிறோம் என்று அவர்கள் அறிவுக்குத் தட்டுப்படுவதே இல்லை. படித்தவர்களும் பட்டம் பெற்றவர்களும் ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள்.

இங்கே ஞானபீட விருதுக்கும், சாகித்ய அகதாமி விருதுக்கும் ஏங்கிக் கிடக்கும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறிகள் தங்கள் எழுது கோல்களை கோவணத்தின் பின்புறத்துக்குள் ஒளித்து வைத்துக் கொண்டார்கள்.

வட இந்தியர்கள் ஆதிக்கத்திற்கு நாடு கொள்ளைப் போகப் போகிறது; இருந்தும் தங்கள் எழுது கோலில் வானத்தை நிரப்பி நவீனத்தை வருடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு வட இந்தியர்கள் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கும் சாடுவதற்கும் மை இல்லை.

நூற்றாண்டு கால திராவிடத்தின் உழைப்பில் விளைந்து கிடக்கும் சூரிய கருவூலங்களை ஆன்மீகச் சாக்கடை வந்து மூழ்கடித்து விடுமோ என்று மூச்சுத் திணருகிறது.

 ஜெயலலிதா இறந்ததிலிருந்தே அ.தி.மு.க.வை கைப்பற்றி விட்டார்கள்.


தாய் வேடமிட்டு பூதகி தன் மார்பில் விசம் தாங்கி வருகிறாள்! அதை அறியாமல் வாய் வைக்கும் குழந்தைகள் மரணத்தால் முத்தமிடப்படுவார்கள்!!

 எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..

2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றிப் பெற்றால் தமிழ்நாடு என்ற ஒரு மாநிலம் இல்லை என்ற நிலையைக் கூட உருவாக்குவார்கள்..
அந்த அளவுக்கு வடநாட்டவர் கை ஓங்கும். நாம் ஓரங்கட்டப் படுவோம். இதை நினைத்தால் இரவு பகல் தூக்கம் வராது யாருக்கும் ...

மாணவர்களே..சமூக அக்கறைக் கொண்ட நல்லுள்ளங்களே விரைந்து செயலாற்றுவோம்.
நமது கருத்தியலை தாங்கி நிற்கும் கட்சிகளுக்கே வாக்களிப்போம்.

உடைப்பெத்து வரும் போலி ஆன்மீகச் சாக்கடையைத் தடுத்து நிறுத்த அது ஒன்றே சிறந்த வழி.

நன்றி....


(இது வாட்ஸ் அப்பில் எனது குழுவில் ஒரு நண்பர் ஃபார்வார்டு செய்திருந்தார்! யார் எழுதியது என்று தெரியவில்லை! ஆனால், 100% எனக்கு உடன்பாடான எச்சரிக்கையுடன், மிக அழகான கட்டுரை! முகம் தெரியாத அந்த தோழருக்கு தமிழினத்தின் சார்பாக எனது அன்பினிய வாழ்த்துக்கள்!!)

🌸🌸🙏🙏🌸🌸

ஞாயிறு, 7 மார்ச், 2021

தந்தை பெரியார் அவ்ளோ பெரிய அப்பா-டாக்கரா?


தந்தை பெரியார் யார்?
அவர் என்ன அவ்வளவு பெரிய அப்பா..டாக்கரா? என நக்கலாய் பேசுபவர்களுக்காகவும், வெறும் கடவுள் மறுப்பு மட்டுமே பெரியாரின் கொள்கை என்று நினைப்பவர்களுக்கும் சில பயனுள்ள தகவல்கள்:

1. பெரியார்: தான் ஏற்கனவே வகித்த 29 பதவிகளை சிறு வயதிலேயே துறந்து பதவிகள் ஏதுமின்றி 60 ஆண்டுகளுக்கு மேலாய், தனது 94 ஆம் வயதுவரை மக்கள் பணியில் மட்டுமே ஓயாது ஈடுபட்டவர்.

2. பெரியார்: செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் 1900 ஆம் ஆண்டுகளிலேயே சுமார் 25 கோடிகளுக்கு பெரியார் அதிபதி! 

சமூகத்தின் அடித்தட்டு மக்களின் துயரங்களை சிந்தித்து அதற்காய் தன் ஆயுளை செலவிட்டு இறுதியில் தன் சொத்துக்களை பொது மக்களுக்கு மட்டுமே விட்டுச் சென்றவர். 

3. மக்கள் செல்வாக்கு இருந்தும் தன் இயக்கத்தை *அரசியல் கட்சியாய் மாற்றாதவர்*, ஓட்டு அரசியலில் இல்லாமலேயே மக்கள் சமுதாயப் பணி செய்தவர். தனது வாழ்நாளில் ஏறக்குறைய 8200 நாட்கள் சுற்றுபயணம் செய்து சுமார் 11,000 நிகழ்ச்சி/கூட்டங்களில் கலந்துகொண்டு பேசியவர். முதிர்ந்த வயதிலும், சிறுநீரக பாதிப்பால், மூத்திர வாளியை கையோடு பிடித்துகொண்டு சுற்றுபயணம் செய்து கூட்டங்களில் பேசியவர். 

4. அக்காலத்திலேயே விதவை மறுமணத்தை ஆதரித்தவர், பெண் கல்வியை வலியுறுத்தியவர், பெண்களுக்கு சொத்துரிமை அளிக்கவேண்டும் என்று சொன்னவர்; செயல்முறையில் மேடை தோறும் செய்து காண்பித்தவர்!

5. மனிதர்கள் அனைவரும் சமம் அவர்களுக்குள் *மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பிரிவினை இருக்கக் கூடாது* என ஜாதியத்தை கடுமையாய் எதிர்த்தவர்.

6. ஜாதிகள் மதத்தினால் தான் தோன்றுகின்றன என்றாராய்ந்து உணர்ந்து மதத்தை தூக்கி எறிந்தவர். *அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்* என்று முரசறைந்து சொன்னவர்.

7. இல்லாத கடவுளையும் சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் சொல்லி, மதங்கள் மனிதர்களை மூடனாக்குகிறது என்பதை உரக்கச் சொன்னவர். அவர் வாழ்ந்த அந்த காலத்தில், மதத்தின் பெயரால், குறிப்பிட்ட சமூக மக்கள், பிற சமூக மக்களின் மீது செலுத்திய ஆதிக்கத்தை, மதத்தின் பெயரை சொல்லிக்கொண்டு அவர்கள் மட்டுமே அனுபவித்த சலுகைகளை, கண்டு கொதித்துதான் பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை தீவிரமாக பேசினார்.. 

8. ஆடம்பரங்கள் இல்லாத எளிமையான பகுத்தறிவுவாதி, பல பத்திரிகைகளையும் இதழ்களையும் நடத்தியவர்.

9. மக்களுக்கு பிடித்தமான மதத்தை எதிர்த்து மக்களின் விரோதத்தை சம்பாதித்தவர், மக்களோடு ஒத்து ஊதி அரசியல் பண்ணத் தெரியாதவர். மக்களுக்கு பிடித்ததை செய்வதை விட தேவையானதை செய்ய முனைந்தவர்.

10. *பெரியார், புதிய உலகின் தொலை நோக்காளர், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்க வழக்கங்கள் மற்றும் கீழான நடவடிக்கைகளுக்கு கடும் எதிரி..." என்று ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால்* பாராட்டப்பட்டவர்... 

11. *மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என கர்ஜித்தவர்*. பக்தி வந்தால் புத்தி போய் விடும், புத்தி வந்தால் பக்தி போய் விடும் என தத்துவம் பேசியவர்.

12. *தம் இயக்கத் தோழர்களை சாதி மறுப்பு - மத மறுப்பு - விதவை மறுமணம் செய்து கொள்ள ஆதரவளித்தவர்*.

13. *பெண்ணுரிமைப் போராளி, கணவனுக்கு இல்லாமல் மனைவிக்கு மட்டும் ஏன் தாலி எனக் கேட்டு ஆண் சமூகத்தை அதிரச் செய்தவர். பெண்களை அடிமைபடுத்தும் தேவதாசி முறையை ஒழிக்க அரும்பாடுபட்டவர். *பெண் ஏன் அடிமையானாள்?" என்ற புத்தகத்தை எழுதியவர் பெரியார்*

14. பெரியாரிடம் பலர் உங்கள் எல்லாக் கொள்கையும் பிடித்திருக்கிறது கடவுள் மறுப்பைத் தவிர என சொல்லிய போது, கை நல்லா இருக்கு கால் நல்லா இருக்கு மூக்கு முழி எல்லாமே நல்லா இருக்கு உயிர் மட்டும் தான் பிடிக்க வில்லை எனச் சொல்வது போல் இருக்கிறது நீங்கள் சொல்வது என பதிலளித்து அவர்களின் வாயை அடைத்தவர்.

15. நீ உணரும் பசியை நானும் உணர்கிறேன், அதனால் பசி இருக்கிறது என ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் நீ உணரும் கடவுளை என்னால் உணர முடியவில்லை அதனால் கடவுளை மறுக்கிறேன் என கடவுள் மறுப்புக்கு விளக்கம் சொன்னவர்.

16. தமிழ் எழுத்து சீர்திருத்தம் கொண்டுவந்தவர், பரணில் போடப்பட்டு, மறைக்கப்பட்டு இருந்த திருக்குறளை தொடர்ச்சியாக "திருக்குறள் மாநாடுகள்" நடத்தி, பொதுமக்களிடம் திருக்குறளை கொண்டு போய் சேர்த்தவர் தந்தை பெரியார். கர்நாடக இசை என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு & சம்ஸ்கிருத சங்கீதத்துக்கு எதிராக தமிழிசைக்கு மேடை அமைத்து ஆதரவளித்தவர் தந்தை பெரியார்.  

17. ஹிந்தி மொழி திணிப்பை கடுமையாக எதிர்த்தவர்.. 1937 ஆம் ஆண்டில் அதற்காக பல போராட்டங்களை செய்து, சிறைக்கு சென்றவர். *தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தை பெரியார்*

18. மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தனது சொந்த தோட்டத்தில், ஏக்கர் கணக்கில் இருந்த தென்னை மரங்களை வெட்டிசாய்த்தவர்.

19. வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தியவர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன், *இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட ரீதியில் தடை வந்தபோது, கடுமையான போராட்டங்களை நடத்தி, இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தில், முதல் திருத்தமாக, இடஒதுக்கீட்டிற்கு ஆதரவான சட்டத்தை கொண்டுவர வழிவகுத்தவர். அந்த சட்ட திருத்தத்தால் தான், இப்போது நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & OBCக்கான இடஒதுக்கீடு சட்டப்படி செல்லுபடியாகிறது! (இப்போது அதில் கையை வைத்து அழித்து வருகின்றனர்)

20. இந்தியாவில் வெறும் 5% சதவீதம் மட்டும் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள், நாட்டின் 90% அரசு வேலைகளையும், படிப்புகளையும் ஆக்கிரமித்திருந்ததை மாற்ற, சமூக, கல்வி, வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட பெரும்பான்மையான, பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட & தலித் மக்கள் தங்களின் உரிமையான இடஒதுக்கீட்டை சட்டப்படி பெற வழிவகுத்தவர் தந்தை பெரியார்..   

*தந்தை பெரியாரின் பொன்மொழிகள் சில*

1. மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

2. பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி

3. மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.

4. விதியை நம்பி மதியை இழக்காதே.

5. மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.

6. மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.

7. பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.

8. பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.

9. பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.

10. தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்

11. கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.

12. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.

13. ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக இருத்தல் அவசியம்.

14. ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.

15. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.

16. என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.

17. எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் "பகுத்தறிவை கொண்டு ஆராய்ச்சி செய்து, சரியென்று பட்டபடி நட" என்பதேயாகும்.

18. மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான் 

19. வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.

-- தந்தை பெரியார்

நன்றி 
மோகன் பாலகிருஷ்ணா