Translate this blog to any language

செவ்வாய், 2 மார்ச், 2010

சாமியார்களுக்கு இது கெட்ட காலம்!

சாமியார்களுக்கு மட்டும் கலி காலம் துவங்கி இருக்கிறது என்று எண்ணுகிறேன். நேற்று (1.3.2010)ஆந்திராவில் சித்தூர் பகுதியில் உள்ள நம்ம ஊர் நேமம் கல்கி ஆசிரமம் சாமியார் பற்றி அந்த வூர் T9 TV-யில் கிழி கிழி என்று கிழித்து விட்டனர்.
இன்றோ (2.3.2010), சன் நியூஸ் டிவி-யில் நித்தியானந்த சுவாமிகள் என்னும் திருவண்ணா மலை இளம் வயது சாமியாரின் படுக்கை அறை கட்சிகளைப் போட்டு நாற அடித்து விட்டனர்.
எனது முந்தைய Blog-ல்
காலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் ! அதில் "சமீபத்தில் பிரபலம் அடைந்த ஒரு சிறு வயது சாமியார்" என்று எனது நண்பர் மனம் புண்பட வேண்டாம் என்று அதே சாமியாரின் பெயரை நான் பகிரங்கமாக குறிப்பிடவில்லை. ஆனால், நான் மனம் வெதும்பி எழுதி (21th Feb 2010) பத்து நாட்களுக்குள் மேற்படி சாமியார்/சாமியார்களின் வேஷங்கள் கலைந்து விட்டது ஆச்சர்யம் தான்.
உண்மைக்கும் என்னமோ கொஞ்சம் நல்ல காலம் இருப்பது போல் உள்ளது.
எனினும் மக்கள் இன்னும் தெளிய வேண்டி உள்ளது.

சாமியார்கள் தான் என்று இல்லை; இன்னும் அரசியல் தலைவர்கள் பற்றிய நமது மக்களின் பார்வையும் மாற வேண்டும். அவர்களையும் ஒரு குறு நில மன்னர்கள் போன்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது, காலில் விழுவது, கடவுள் போல எண்ணுவது இவை எல்லம்கூட மாற வேண்டும்.

பார்க்கலாம்!
நடக்கும் இவையெல்லாம் என்றைக்காவது ஒரு நாள், என்று நம்புவோம்!

நம்பிக்கைதானே வாழ்க்கை!

-மோகன் பால்கி

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

காலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் !

                                          Just wigs and hair pieces 
நேற்று முன் தினம் ஒருவர் எனது பக்கத்து அலுவலகத்தில் ( நண்பர்கள் திரு. மீனாக்ஷி சுந்தரம் & திரு. நம்பி ) உள்ள ஒரு வழக்குரைஞரைப் பார்க்க வந்திருந்தார். அப்படியே எனது "யோ-ஜென்" மனோ தத்துவ மையத்தைப் (YozenMind Psychology & Counseling Centre) பார்த்து விட்டு என்னிடம் பேச முற்பட்டார்.

அவருடைய கையில் சமீபத்தில் பிரபலம் அடைந்த ஒரு சிறு வயது சாமியாரின் புத்தகம் கையில் இருந்தது. எனது மனோ தத்துவ வழி முறைகள் மற்றும் குணப்படுத்தப் படும் உளவியல் பிரச்சினைகள் பற்றி மேம்போக்காக கேட்டு விட்டு அதன் பின் அந்த சாமியாரின் புத்தகத்தை என்னிடம் காட்டி இவரை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா, பார்த்து இருக்கிறீர்களா என்றெல்லாம் ஆர்வத்துடன் ஒரு "கிறிஸ்துவ மிசனரியைப்" (Christian Missionary) போல பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று மென்மையாக மறுத்தேன். "என்னங்க! பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் அவருக்கு சீடர் ஆகி வராங்க. நீங்க என்னமோ! உங்களுக்குத் தெரியுமா, பிரபல எழுத்தாளர் CN இப்ப அவரை எத்துகிட்டார். அவரே யாரையும் நம்பமாட்டார். அவரைப் பாத்தே எவ்வளவோ பேரு சேந்து இருக்காங்க. இன்னும் எவ்வளவோ நடிகர் நடிகைகள், பிரபலங்கள் சேந்துகிட்டே இருக்காங்க! நீங்க ஒரு தரம் அங்க வாங்க சார்!" என்று வலுக் கட்டாயம் செய்தார்.

விட்டால் என்னைக் கைப் பிடித்து உடனே கொண்டு போய் அங்கு அந்த சாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தான் மறு வேலை பார்ப்பார் போலிருந்தது. நான் எப்படியோ எனது சக்தியை வீண் விவாதத்தில் (Argument) விரயம் செய்யாமலும், அதே சமயம் அவரது மனதை, மற்றும் நம்பிக்கையை கேலி செய்யாமலும் ஒருவாறாக பேசிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அலுவலக நண்பர் வழக்குரைஞர் திரு.நம்பி வந்து என்னைக் காப்பாற்றினார் எனலாம். (பழைய பகுத்தறிவு இயக்க பாலுவாக இருந்தால் இது போன்ற வாதப் பிரதி வாதங்கள் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! பத்து பேர் சுற்றி நின்று வாள் வீசினாலும் தூசு எனக்கு அது! அது ஒரு காலம்! இப்போதெல்லாம் மவுனம் பிடித்திருக்கிறது. சும்மா இருக்கப் பிடிக்கிறது! பேச்சு-வெறும் பேச்சு என்றே படுகிறது; அது எவ்வளவு சிறந்த நல்ல பேச்சென்றாலும். எனவே அதை தவிர்க்கவே விரும்புகிறது மனம் !)

பல சமயம் இப்படித்தான் ஆகி விடுகிறது.
என்ன செய்வது என்று தெரியாமல் சிலரிடம் மாட்டிக் கொண்டு இப்படி முழிக்க வேண்டியதாகி விடுகிறது. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.
இப்படி "மந்திரித்து விட்ட கோழி" மாதிரி சிலர்-பலர் இந்த சாமியார்களிடம் ஈர்ப்புடன் இருப்பதற்கும், தெருவில் நின்று ஆள் பிடிக்காத குறையாய் மாய்ந்து மாய்ந்து அப்படி புகழ் பாடுவதற்கும் என்ன காரணம்?

அதாவது அதற்க்கான மனோதத்துவ காரணம் (Psychological Reason) என்ன என்று, எனக்கு தெளிவாக தெரியும். ஆனால் அதைச் சொன்னால் தெளிவாக எல்லோர்க்கும் புரியும் என்று நான் நம்பவில்லை. ஏன் என்றால், நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் இப்படிதான் ஏதோ ஒரு தலைமை, ஏதோ ஒரு புத்தகம் அல்லது தத்துவத்துக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். நானும் அப்படி ஒரு காலத்தில் இருந்தவன் தானே! தலைவர்கள்-சாமியார்கள் என்று! அதன் பின் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த "வசிய" (Mesmerized World) உலகங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றை இன்று சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதிருக்கும் நிலை எந்த புத்தர் வந்து எதிரில் நின்றாலும் ஆச்சர்யப்படுகிற அல்லது பூமியில் இருந்து ஆகாயத்துக்கு நான் எம்பிக் குதிக்கிற நிலை அல்ல என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.

அது சரி! மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை!
குறைந்தது அவர்கள் சராசரிக்கு பத்து இருபது சதவிகிதம் மேற்பட்டவர்கள் என்பதாக மட்டும் நம்மால் ஏன் கருத முடிவதில்லை?

மாறாக அவர்களை ஒரு தேவ தூதர்கள் அல்லது இறைவனின் அவதாரம் போன்று எது நினைக்க வைக்கிறது?

1. அவர்கள் புத்தகங்கள் பலவும் படித்து நன்றாக (Articulation) பேசுகிறார்கள்.
2. நிறைய "அரைத்த மாவுக்" கதைகள் சொல்கிறார்கள்.
3. தேர்ந்தெடுத்த நடை உடை பாவனைகள் கொண்டு வித்தியாசமான உடைகள் அணிந்து ஒரு சராசரிக்கு மேற்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
4. இவ்வுலக பிரச்சினைகள் மற்றும் "அவ்வுலக பேறு" பற்றி அரை குறையாக பேசுகிறார்கள்.
5. எல்லாவற்றிற்கும் ஒரு "சர்வ ரோக வலி நிவாரணி" மாதிரி ஒரு சில
மந்திரங்களை, வார்த்தைகளை, வசனங்களை கை வசம்
வைத்திருக்கிறார்கள். அவை வேலை செய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
6. பெருங்கூட்டம் கூடுகிறது-எனவே அங்கு உண்மை இருக்கவீண்டும் என்ற தவறான கருத்து மக்களிடம் மலிந்து கிடக்கிறது.

ஆனால், ஒன்றை மட்டும் எல்லா மனிதர்களும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இதே போன்று நிறைய ஊர்களில் நிறைய நாடுகளில், நிறைய சாமியார்களுக்கும், மத போதகர்களுக்கும், இவ்வாறு பெரும் கூட்டம் கூடுகிறது. அவர்களும் மற்ற அமைப்புகளை நேரடியாக அல்லது மறை முகமாக கேலி கிண்டல் செய்கிறார்களே சண்டைகள் வருகிறதே-அப்படியாயின் அதில் எது உண்மையான அமைப்பு? உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சாஸ்வதமான மத அமைப்பு உண்டா?

என்னிடம் உள்ளதே உண்மையான கோஹினூர் வைரம் என்று ஒவ்வொரு வியாபாரியும் சொன்னால் பிறகு எது தான் உன்மை கோஹினூர் வைரம் சொல்லுங்கள் ?

அது சரி! வியாபாரியாவது தன் பொருளை போற்றி புகழ்ந்து விற்பனை செய்வது நியாயம் என்று கொள்வோம். ஆனால், "இறைமை" பற்றி பேசுகிற ஒரு அமைப்பு, அதன் அங்கங்களான பிற மனிதர்கள், ஏன் ஆள் பிடிக்க அப்படி அலையோ அலை என்று அலைகிறார்கள்?

அதன் காரணம், இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்!

1. தன்னைச் சார்ந்தவர்களையும் தான் சேர்ந்திருக்கும் ஒரு அமைப்பில் இணைத்துவிட்டால் தன்னைப் பிறகு அவர்கள் கின்டல்கேலி செய்ய மாட்டார்கள் ; தனது 'தன்முனைப்பும்' கெடாது என்ற எண்ணமாய் இருக்கலாம்.
2. பொருள் வரவு அல்லது ஆள் சேர்த்ததால் அந்த அமைப்பில் கிடைக்கும் புகழ் வரவு காரணமாய் இருக்கலாம்.

இதைத் தவிர நான் கேட்கும் கேள்வி என்னவென்றால்,
மேற்படி ஏதோ ஒரு தெய்வீக அமைப்பில் சேர்ந்ததால் மட்டுமே ஒரு மனிதர் 150 வருடம் நோய் இன்றியும் நிம்மதியாகவும் வாழ்ந்தார். அவரது சாமியாரும் அதே போல 200 வருடங்கள் நரை, திரை, பிணி, மூப்பு இன்றி வாழ்ந்தார் என்ற செய்தி இது வரை உலகில் காணக் கிடைக்கவில்லை. மாறாக, யாரோ ஒரு முனிவர்.....எங்கேயோ.... எப்போதோ....பல நூறு வருடங்களுக்கு முன்பு...வாழ்ந்தார் என்று கடந்த காலங்களை சொல்லியே நமக்கு "காது குத்துவதை" நாம் தான் அடிக்கடி பார்க்கிறோமே!

(உம்! இலட்சக் கணக்கான சாமியார்கள்..கோடிக் கணக்காக நீண்ட அந்த கடந்த காலம்! இன்னும் வர இருக்கும் பல கோடி சாமியார்கள்- மற்றும் அவர்களின் புகழ் பாடிகள்! நினைத்துப் பார்க்கிறேன்!)

நிகழ் காலத்தில் மேற்படி சாமியார்கள் ஏன் அங்ஙனம் தெய்வீக செயல்கள் புரிவதில்லை-அதாவது செத்தவர்களை எழுப்புவது, வானில் பறப்பது, கூடு விட்டு கூடு பாய்வது....இத்யாதி என்று எவரும் எந்த சாமியாரையும் பார்த்து கேள்வி கேட்பதில்லை! ( ஆனால் மேற்படி வாழ்கிற இன்றைய சாமியார்கள் பற்றிய, அவர்களது பிற்கால சரித்திரத்தில், செத்தவர்களை அவர்கள் எழுப்பியதாகவும், வானத்தில் அவர்கள் பறந்ததாகவும் கதைகள் எழுதி-பிற்கால மக்களால் அது இக்காலம் போலவே நம்பப்படும்!)

இதெல்லாம் நான் எத்தனைதான் விவரமாக உங்களிடம் சொன்னாலும் உங்களின் "வசிய" மனம், எதையாவது நம்பச் சொல்லி உங்களை நிர்பந்திக்கும் என்றும் எனக்குத் தெரியும்.

ஒன்று
, சாமியார்கள் வாய்ப்பேச்சை நம்புவது, அல்லது 
"கடவுள்
இல்லை" என்று  சொல்லுபவர்கள் வாதத்தை அப்படியே நம்புவது,
அல்லது சுயமுன்னேற்ற (Self Development Bookish Knowledge Orators) கதைகளைப்  பேசும் 'வசீகர வாய்ப் பேச்சாளர்களை' நம்புவது...
என்று
எதையாவது நம்ப வேண்டும் உங்களுக்கு!
ஆராய்கிற
மனம் உங்களிடம் அடியோடு கிடையாது!
உண்மையை கண்டு கொள்ளும் சக்தியும் உங்களிடம் அறவே இல்லை!

ஆராய பயம் என்று கூட நான் சொல்ல மாட்டேன்!

இறந்து போன உங்கள் அன்பு பாட்டியை ( நான் 'அப' வார்த்தை சொல்ல விரும்பாமல் பாட்டியோடு விட்டு விட்டேன்) ஒரு சாமியார் எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் கெடுத்துக் கொள்ள விரும்புவீர்களா என்ன ?
மேலும், உங்கள் வாழ்க்கையை ஒரு சின்ன மந்திரம், "குண்டலினி சக்தி" நல்ல படியாக மாற்றி விடும் என்ற நம்பிக்கையை விட்டு விட உங்கள் மனம் இடம் தருமா?
நீங்கள் நல்லவர் என்றும், உங்களுக்காக அவ்வுலகத்தில் ஒரு இருக்கை காத்திருக்கிறது என்று உங்கள் சாமியார் சொல்வதை நம்புவது உங்களுக்கு கசப்பாகவா இருக்கும்?

உங்கள் நம்பிக்கையை, உங்களின் எதிர் பார்ப்பை போட்டு வைத்திருக்கும் கல்லாப்பெட்டி அல்லவா உங்களின் சாமியார் மற்றும் அதன் அமைப்பு சார் பொருள்கள்/மத-அரசியல் மற்றும் சுயமுன்னேற்ற உள-வசிய சிந்தனைகளை சுமந்த சொற்கள்
அட! அவை யாவுமே பிறர் வாயிலிருந்து வருகின்ற நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட சொற்கள், எழுத்துகள் தாமே? 
பிறகு அந்த அலங்கரிக்கப்பட்ட சொற்கள் சுமந்து வரும் நம்பிக்கைகள் பொய் வாக்குறுதிகள், அவற்றை விட்டு விட நீங்கள் எப்படி மனம் வந்து சம்மதிப்பீர்கள்?
அதாவது 'உங்கள்' (நம்பிக்) "கையை" நீங்களே... 'உங்களது கையால்' வெட்டிவிட எப்படி 'உங்களால்' முடியும்?

அதனால் தான் இங்கே இப்பூவுலகில், போற்றி பாதுகாக்கப் படும் நிறைய பிரிவுகள் ; அதனால் ஏற்படும் மதப் பூசல்கள் அரசியல் பகை-சண்டைகள் உட்பட!
உம்! என்ன சொல்லி என்ன பயன்?
இயற்கையை நாம் நம்பாத வரை- "நடு நிலைப் பார்வை" என்ற ஒன்று
நம்மிடம் இல்லாத வரை !

சரி போகட்டும்!
எனக்கொன்றும் அதில் வருத்தம் இல்லை!
அது அப்படியே பல ஆயிரம் வருடங்கள் இருந்து தொலைத்திருக்கிறது.
மக்களிடம், முக்கியமாக படித்தவர்களிடமாவது ஒரு நல்ல
மாற்றம், தெளிவு, சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும். அது வரை நிறைய போலிச் சாமியார்கள்-போலி அரசியல்
வாதிகள், சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் உங்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று வந்து கொண்டே இருப்பார்கள்!

அதாவது இந்தக் காலக்கடற்கரை யில்
அந்த நல்ல நாள் வரும் வரை
புதுப் புதுச் சாமியாரகள் / புதுப் புது போதனையாளர்கள்
புதுப் புது வேடங்களில்
வரவே செய்வர்-
நமக்குப் பிடிக்கிறது என்பதால்!

-மோகன் பால்கி

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

நீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தீர்களா ? Have You seen any Sparrow?



நீங்கள் யாராவது சிட்டுக் குருவிகளைப் பார்த்தால்
எனக்கு சொல்லுங்களேன்

நமது
நவீன அறிவியல்,
முக்கியமாக செல் போன் கோபுரங்கள்
வெளியிடும் கதிர் வீச்சு,
நாம் எப்போதும் பார்த்து ரசிக்கும்
அந்தச் சின்னஞ் சிறு குருவிகளைக்
அடியோடு நிர்மூலம் செய்து விட்டதாக தகவல்!

இன்னும் நிறைய பறவை இனங்கள் அழிந்து
விட்டதாகவும் மேலும் மேலும் பல சிறு பறவை இனங்கள் அழிந்து
வருவதாகவும் பறவை ஆர்வலர்கள் சொல்கிறார்கள்.

மனிதன் மட்டுமே இங்கு வாழ வேண்டும் என்ற குருரம்!

அடுத்து
, இயற்கை மனிதனுக்கு வேட்டு வைக்கும் நாள்
வெகு தொலைவில் இல்லை!

-மோகன் பால்கி

_______________________________________________________________________________
சிட்டுக் குருவிகள் பற்றி மேலும் சில செய்திகள்!

               நம் நாட்டில் மொத்தம் 8 வகையான குருவிகள் காணப்படுகின்றன.​ நம் நாட்டைப் பொருத்தவரை குருவிகளை நாம் எல்லா காலகட்டங்களிலும் நேசித்து வந்துள்ளோம்.​ சாப்பாட்டிற்கு வழியில்லாத காலத்தில் கூட மனைவி அடுத்த வீட்டில் இருந்து வாங்கி வந்த அரிசியை குருவிகளுக்குப் போட்டு அதன் அழகில் மயங்கினான் பாரதி.​ இப்படி நம்முடன் பின்னிப் பிணைந்த குருவிகள் நம்மை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டன.​ நகரப்பகுதிகளில் சிட்டுக் குருவிகளைப் பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது.

            சிட்டுக் குருவிகளைப் போன்றே மற்றொரு குருவி வகையான முனியா குருவிகளும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.​ காரணம் இவற்றைப் பிடித்து சாயம் அடித்து விற்பது அதிகரித்து வருகிறது.​ முனியா குருவி தமிழகத்தில் நெல் குருவி,​​ அல்லது தினைக்குருவி என்று அழைக்கப்படுகிறது.​ இதற்கு "சில்லை' என்ற பெயரும் உள்ளதாக,​​ பறவை ஆர்வலர் சலீம்அலி தனது பறவை உலகம் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

                     வடஇந்தியர்கள் இந்த வகை பெண் குருவிகளை பிரியமாக முனியா என்றும் புத்ரிகா என்றும் அழைக்கின்றனர்.​ இதற்கு மகளே என்று அர்த்தம்.​ ஆண் குருவிகளை லால் என அழைக்கின்றனர்.​ ​ எம்.ஏ.பாஷா என்ற தமிழ்நாட்டு வன உயரதிகாரி,​​ அவரது பறவைப் பட்டியலில் தோட்டக்காரன்,​​ ராட்டினம்,​​ வயலாட்டா,​​ இப்படியாக பல பெயர்களில் இப்பறவை அழைக்கப்படுவதாக குறிப்பிடுகிறார்.நம் நாட்டில் 8 வகையான முனியாக்கள் உள்ளன.​ அவை ரெட் முனியா,​​ வைட் துரோடட் முனியா,​​ வைட் ரம்ப்டு முனியா,​​ பிளாக் திரோடட் முனியா,​​ பிளாக் ஹெடட் முனியா,​​ ஸ்பாட்டட் முனியா,​​ கிரீன் முனியா,​​ ஜாவன் முனியா.இவற்றில் கிரீன் முனியா இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.​ ஜாவன் முனியா வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு,​​ காடுகளில் விடப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ நாட்டின் பல பகுதிகளுக்குப் பறந்து திரிந்து அதுவே தன் இனத்தைப் பெருக்கியுள்ளது.இருப்பிடம்:​ உயரமான புல்வெளிகள்,​​ தானியம் முற்றிய விளைநிலங்களிலும் கூட்டமாக இவை காணப்படும்.​ 

                சில சமயங்களில் 200-க்கும் மேற்பட்ட பறவைகள் ஒன்றாகக் காணப்படும்.​ அச்சுத்துறுத்தல் ஏற்படும் சூழலில் ஒன்றாக வானில் கூட்டமாகப் பறக்கும்.​ சொல்லிவைத்தாற்போல ஒரு கூட்டத்தில் உள்ள அனைத்துப் பறவைகளும் ஒரே சமயத்தில் மேலே செல்லும்;​ திடீரென கீழ் நோக்கி வரும்;​ பக்கவாட்டில் திரும்பும்.​ ​உணவு:​​ சிறிய தானியங்களைக்கூட பொறுக்கி உண்ண இதன் அலகு ஏதுவாக அமைந்துள்ளது.​ தானியங்களை மட்டுமன்றி,​​ சில சமயம் பூக்களில் உள்ள தேன்,​​ சிறிய ஈசல் போன்ற சிறு பூச்சிகளையும் உண்ணும்.வாழ்விடம்:​ ஆணும் பெண்ணும் சேர்ந்து கூடுகட்டி அடைகாக்கும்.​ நீள்வடிவில் பை போன்ற அமைப்பில் காய்ந்த புல்லை வைத்து வெளிப்புறக் கூட்டை கட்டும்.​ மென்மையான புல்லை வைத்து உள்பகுதியை கட்டுகிறது.​ சில முனியாக்கள் கூட்டை மேலும் மென்மைப்படுத்த,​​ பஞ்சு,​​ மலர்கள் மற்றும் இறகுகளை கூட்டிற்குள் வைத்துக்கொள்ளும்.​ ​பிளாக் திரோடட் முனியா,​​ வேளாண் பூமிக்கு அருகில் உள்ள விவசாயிகளின் வீட்டுச் சுவற்றில் உள்ள சிறு ஓட்டை மற்றும் மரப்பொந்துகளில் முட்டைகளை வைக்கிறது.​ ​வைட் துரோடட் முனியா,​​ தூக்கணாங் குருவிகள் விட்டுச்சென்ற கூடுகளை ​ முட்டையிடப் பயன்படுத்துகின்றன.​ ஸ்பாட்டட் முனியா,​​ முட்புதர் மற்றும் சிறிய மலர்பூக்கும் மரங்களில் கூடுகட்டி முட்டையிடுகின்றன.​ 4 முதல் 8 முட்டைகள் வரை இடும்.​ முனியாவின் வகைகளுக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை மாறும்.​ ​

                        ஒரு இடத்தில் உள்ள தானிய விதைகள் மற்றும் புல் விதைகள் மற்றொரு இடத்தில் விழுந்து முளைக்கவும்,​​ விதைப்பரவலுக்கு முனியா குருவிகள் உதவுகின்றன.​ மேலும் பூக்களில் தேன் உண்ணும் போது அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது.​ ​அழிவின் காரணங்கள்:​ நகரமயமாக்கல்,​​ நம் வாழ்வியல் முறை மாற்றம்,​​ விளை நிலங்கள் கட்டடங்களாக மாறுவது.​ மேலும் முனியாக்கள் செல்லப் பறவையாக வளர்க்க பிடிக்கப்படுவது போன்ற காரணங்களால் முனியாக்கள் குறைந்து வருகின்றன.​ இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டப்படி இந்தப் பறவையை பிடிப்பதோ,​​ வளர்ப்பதோ,​​ கொல்வதோ தண்டனைக்குரிய குற்றம்.​ ​காணப்படும் இடங்கள்:​ ரெட் முனியா,​​ இமயம் முதல் குமரி வரை காணப்படுகிறது.​ கிரீன் முனியா,​​ தமிழ்நாட்டில் காணப்படுவதில்லை.​ வைட் துரோடட் முனியா,​​ இமயமலைச் சாரலிலும்,​​ இலங்கை,​​ பாகிஸ்தானில் வறண்ட பகுதியிலும் காணப்படுகின்றன.வைட் ரம்ப்டு முனியா,​​ இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறன.​ ​பிளாக் துரோடட் முனியா,​​ மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளில் காணப்படுகிறது.​ ஸ்பாட்டட் முனியா,​​ ராஜஸ்தான்,​​ பஞ்சாப்பை தவிர அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.​ பிளாக் ஹெட்டட் முனியா,​​ இந்தியா முழுவதும் காணப்படுகிறது!
தகவல்: http://www.dinamani.com/edition 

திங்கள், 8 பிப்ரவரி, 2010

BT கத்திரிக்காயின் வண்டவாளம்!


பெங்களூருவில் நேற்று நம் சுற்று சூழல் அமைச்சர் ஜெயராம் ரமேஷ் மரபணு மாற்றம் செய்யப்பட்ட Bt (Bacillus Thuringenesis) கத்திரிக்காய் பற்றிய கருத்தரங்கில் ரொம்பதான் கோபப் பட்டாராம். அதாவது BT கத்திரிக்காய் எதிர்ப்பாளர்களை மனநலம் இல்லாதவர்கள் என்று தாக்கும் அளவுக்கு அவர் ரொம்பவே உணர்ச்சி வசப் பட்டு பேசியிருக்கிறார்.

இந்தியாவில் அனைத்து விவசாய அமைப்புகளும், சமுக ஆர்வலர்களும் , மற்றும் பல்வேறு விஞ்ஞானிகளும் BT கத்திரிக்காய்க்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . மேலும் மேற்கு வங்கம், பீகார், ஒரிசா கேரளா கர்நாடகா, மத்ய பிரதேஷ் போன்ற மாநிலங்கள் அதற்க்கு அனுமதி மறுத்துள்ளன. இந்நிலையில் அமைச்சருக்கு மட்டும் ஏன் இந்த பதைப்பு- ஆத்திரம் என்று விஷயம் தெரிந்தவர்களுக்கு தெளிவாகவே புரிந்திருக்கும்.

என்ன செய்வது ? அதிகாரம் படுத்தும் பாடு என்பதோடு காலகாலமாக மண்ணில் உழுது பாடுபடும் விவசாயிகளுக்கு ஆங்கிலம் பேசும் முழுக் கால் சட்டை அமைச்சர்கள் ..விரல் நுனியில் மண்ணு படாமல் விவசாயம் சொல்லிக்கொடுக்கிற காலமாகப் போய்விட்டது! எல்லாம் கலியின் கொடுமை!
BT கத்திரிக்காயின் வண்டவாளத்தை நீங்கள் இங்கு கிளிக் செய்து பார்க்கவும்:

" Bt Brinjal is being developed in India by M/s Mahyco [Maharashtra Hybrid Seeds Company]. Now, the company wants to take up large scale field trials with the permission of the GEAC in 2006-07.......
http://www.csa-india.org/downloads/GE/bt_brinjal_briefing_paper.படப்
http://business.rediff.com/interview/2010/feb/08/inter-introducing-bt-brinjal-in-india-will-be-disastrous.ஹதம்

-மோகன் பால்கி

வியாழன், 21 ஜனவரி, 2010

Be ready to Transform my Friends! மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

BSNL-Broad Band அய்யோ வேண்டவே வேண்டாம்!
போதுண்டா சாமி!

நாமும் Air Tel, Reliance, Tata என்று மூன்று Service Provider-களை மாற்றி
நம்ம அரசு நடத்தும் BSNL நல்லா இருக்கும்னு எல்லாரும் சொல்றதை நம்ம்பி.....
ஆறு மாசமா படற பாடு கொஞ்சம் நஞ்சம் இல்ல!

எப்பவும்
1. No connectivity.
2. Disturbed Connection.
3. No Phone connection-No dial tone in the phone.
4. No speed...that is less than 50 Kbps (they boast uppp...to 10 Mbps speed)
5. No service...No one will pick your complaint phone.

கடந்த ரெண்டு நாளா நானும் விடாம காலை மதியம் இரவு என்று, இவங்க இலட்சணம் தெரியட்டும்னு, அவங்க சொல்லியிருக்குற, அதாவது Telephone-பில்லில் போட்டு இருக்கிற மற்றும் எனக்கு சொல்லப்பட்ட எல்லா நம்பர்களுக்கும் போன் போட்டு வெறுத்துப் போனதுதான் மிச்சம். Grievances complaints GM (Central) GM(North) GM(South) GM(West) GM(O,BD & BB) இந்த மாதிரி 15 விதமான நம்பர். எல்லாம் ரிங் ஆவுது. ஆனா ஒருத்தர் போனை எடுக்கனுமே? இதையெல்லாம் monitor பண்ண இந்தியாவுல யார் இருக்காங்க சொல்லுங்க.
அதனால நான் என்ன முடிவுக்கு வந்தேன் என்றால்... அரசு நடத்தும் எல்லாம் இப்படித்தான் இருக்கும். ஏன் என்றால் அரசு ஊழியர்களுக்கு கொஞ்சம் கூட பதவி பறிப்பு பயமோ, தண்டனை பற்றிய அச்சமோ கிடையாது.
(There is no Reward and Punishment System)

மேலும் எந்த அரசும் ஒரு தனியார் நிறுவன முதலாளியைப் போல "உன்னால் எனக்கு என்ன லாபம்" என்று தொழிலாளியை பார்த்து எந்த விதமான கேள்வியும் கேட்பதில்லை. Customer Care Unit - என்ற ஒரு விஷயமும் அங்கு இல்லவே இல்லையே! எனவே அரசுத் தொழிலாளிகள் பெரும்பாலும் எந்தக் கேள்வி முறைகளும் இன்றி பாதி நாள் கூட ஒழுங்காக வேலை பார்க்காமல் பொது மக்களுக்கு துன்பம் விளைவித்து வருவது கண்கூடு. (சில அரசுத் துறைகள் சில நல்ல மனிதர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு)
எனவே நண்பர்களே!
தயவு செய்து BSNL பக்கம் தலை காட்டாதீர்கள்!
முடிந்தால் மாற்றிவிடுங்கள்!
நானும் மாற்றப் போகிறேன்!
எப்படியோ இந்த அரசுத் துறைகள் நாசமாக போகட்டும்!
இது எல்லாம் அழகாக மாறும், சிறப்பாக செயல் படும் என்ற நம்பிக்கை எனை விட்டுப் போய்விட்டது.
நீங்களும் பாருங்களேன்!

அரசு பேருந்துகள் - தனியார் பேருந்துகள்..
அரசு கட்டிடங்கள் - தனியார் கட்டிடங்கள்..
அரசின் சாலைகள் - தனியார் சாலைகள் ..
அரசுப் பணியாளர்கள் - தனியார் நிறுவன பணியாளர்கள்..
நீங்களே ஒப்பிட்டு பாருங்கள்.

இன்னும்,
சிதைந்து அழுக்கடைந்து துர் நாற்றம் அடிக்கும் நமது அரசாங்க ரயில்கள் உலகப் பிரசித்தம்!
எனவே, மாற்றத்துக்கு நாம் தயார் ஆவோம் நண்பர்களே!

-மோகன் பால்கி

வெள்ளி, 1 ஜனவரி, 2010

2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

புத்தாண்டு பிறந்து விட்டது நண்பர்களே !
எப்போதும் போல இந்த 2010 ஆம் ஆண்டு நமக்கு நன்மைகள் பலவும் கொண்டு வரும் என்று நன்றாக நம்புவோம். என்ன செய்வது நம்பிக்கை தானே வாழ்க்கை. 2009 ஆம் ஆனது நமக்கு பல சோகங்களை கொணர்ந்து தந்து விட்டு சென்று உள்ளது. ஆறாத ரணங்களையும் வரலாற்றில் அவப்பெயரையும் தான். ஆம் ! என்னதான் போராடினாலும் சில சமயம் உண்மை தற்காலிகமாக தோற்று அதர்மம் ஜெயித்து விடுகிறதே. அதைதான் விதி என்றார்களோ?
ஈழத் தமிழர்களின் முடிவற்ற துன்பம், முத்துக் குமாரின் தியாகம் வீண் போனது, இந்திய இலங்கை அரசுகளின் துரொகம் மத்திய மாநில அரசுகளின் நாடகம், இன்னும் உலக நாடுகளின் பாரபட்ச-பாராமுகம் போன்ற அதிர்ச்சியான காட்சிகள் கண்டேன். எனினும் உலகம் தன்னை தொடர்ந்து செப்பனிட்டே வந்துள்ளது உண்மை. எனவே, நம்புவோம்! கதி இழந்த நல்லவர்களுக்கு நன்மைகள் வந்து சேரும் என்றும் "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் பின்னொரு நாள் தர்மம் வெல்லும்" என்றும்!
சரி! நீங்கள், உங்கள் குடும்பம், தெரு, ஊர் யாவும் நன்றாக இருக்க வாழ்த்துக்கள்!
-மோகன் பால்கி

வெள்ளி, 17 ஜூலை, 2009

தமிழின் சிறப்பு இயல்புகள் !



நண்பர்களே!
நான் ஏதோ ஒரு செய்திக்காக விக்கி பீடியாவை பார்க்க நேர்ந்த போது

தமிழ் பற்றி
நிறைய செய்திகள் இருந்தது. நீங்களும் பாருங்களேன். உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள்!




http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D#.E0.AE.A4.E0.AE.AE.E0.AE.BF.E0.AE.B4.E0.AF.8D_.E0.AE.AA.E0.AE.B1.E0.AF.8D.E0.AE.B1.E0.AE.BF.E0.AE.AF_.E0.AE.A8.E0.AF.82.E0.AE.B2.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B3.E0.AF.8D

அன்புடன்
மோகன் பாலு.
சென்னை.

திங்கள், 13 ஜூலை, 2009

எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம்


எனது மூத்த மகள் வேலன்டினாவின் திருமணம் 9.07.2009 வியாழன் அன்று காலை சென்னை புரசைவாக்கத்தில் உள்ள "மகேஷ் மஹால்" திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடை பெற்றது.

முன்தினம் புதன் கிழமை 8.07.2009 அன்று மாலை வரவேற்பு விழாவின் போது எடுத்த மணமக்களின் ஒளிப்படத்தை இத்துடன் தற்சமயம் இணைத்துள்ளேன். பிறகு மேலும் படங்களை இங்கு சேர்ப்பேன்.
உங்கள் நல்வாழ்த்துக்களை மானசீகமாக இங்கிருந்தே அனுப்பி வையுங்கள்!

மணமகள்: M.B.Valentina
மணமகன்: D.Vijay

வெள்ளி, 12 ஜூன், 2009

நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!


நண்பர்களே! என் நலம் விரும்பிகளே!

எனது இளைய மகள் .பா.வானவி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ் வழியில் படித்து 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் ஆயிரம் மாணவ, மாணவியருக்கு ஊக்கப் பரிசாக மடிக் கணினிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் இரண்டாவது மாணவியாக வந்தமைக்கு தமிழக அரசின் சார்பில் 8.6.2009 திங்கட் கிழமை அன்று "மடிக் கணினி" (Lap top - Acer-Travel Mate 5730 ) வழங்கப் பெற்றது.

அவ்வமயம், தமிழக முதல் அமைச்சர் திரு.மு.கருணாநிதி அவர்கள், தமிழ் நாடு அரசு "தலைமை செயலகத்தில்" வைத்து எனது மகளுக்கும் மற்றும் ஒன்பது பேருக்கும் பரிசு வழங்கி சிறப்பித்ததை அனைத்து செய்தி ஊடகங்களும், தொலைக் காட்சிகளும் அன்று மாலையிலும் மற்றும் மறு நாளும்
வெளியிட்டு /ஒளிபரப்பின.
நிகழ்ச்சியின் போது, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, செயலர் குற்றாலிங்கம், இயக்குனர் பெருமாள்சாமி, தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தராதேவி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி ஆகியோர் உடனிருந்தனர்.

( ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூன்று மூன்று பரிசுகள் வீதம் சென்னை மாவட்டம், திருவள்ளுவர் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டத்துக்கு மட்டும் மேற்படி நாளில் முதல் அமைச்சர் கையால் பரிசு வழங்கப் பெற்றது. சென்னையில் மட்டும் மூன்றாம் பரிசு மற்றும் நான்காம் பரிசு பெற்ற இரண்டு மாணவர்களின் மொத்த மதிப்பெண்கள் ஒரே மாதிரி இருந்ததால் சென்னைக்கு நான்கு பரிசுகள் கிடைத்தன. மற்ற பிற மாவட்டங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பிறிதொரு நாளில் பரிசு தருவார்கள் என்று அறியப்படுகிறது)

அது மட்டுமின்றி சென்னை-பெரம்பூர் லூர்து பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், பள்ளியின் முதல் மாணவியாக தேறியமைக்கும் பள்ளியின் சார்பில் விரைவில் பரிசு வழங்கப் பெற உள்ளது.

இந்த நல்ல சேதிகளை நான் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மடிக்-கணினி பெறும் செய்தித் தாள் புகைப் படங்கள் சிலவற்றை இங்கு இணைத்து உள்ளேன். ( நடுவில் ரோஜா நிற சுடிதார் அணிந்து இருப்பது என் இளைய மகள் வானவி )

(With Pink colour Churidhar-standing with the Laptop at the centre, is my daughter)

Also click here to visit the URLs:http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=11498
தினமலர் மற்றும் மக்கள் முரசு (இது இரண்டும்தான் ஈ-செய்தியாக எனக்குகிடைத்தது, மற்ற செய்தி தாள்கள் Hard-copy யாக என்னிடம் உள்ளன)


என்றும் அன்புடன்,
மோகன் பாலகிருஷ்ணா.

வெள்ளி, 29 மே, 2009

இந்தியா உதவியால் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் ஐ.நா.வில் தோற்கடிப்பு !



ஜெனீவா, வியாழன், 28 மே 2009( 12:38 IST )





சிறிலங்க படையினர் நடத்திய தமிழினப் படுகொலை உள்ளிட்ட மனித
உரிமை மீறல்கள் குறித்து
விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித
உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக
இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் வாக்களித்ததால்,
அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.


ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை
ஆணைக்குழுவில் கடந்த 2
நாட்களாக நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்க அரசாங்கம் நடத்திய
மனித உரிமை மீறுல்கள்
குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐரோப்பிய
நாடுகளின் ஆதரவுடன் சுவிட்சர்லாந்து முன்வைத்தது.


இந்த தீர்மானத்திற்கு எதிராக அதாவது ஈழத் தமிழர்களுக்கு
எதிராகவும் ராஜபக்ஷே-வை
ஆதரித்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள்
செயல்பட்டு வந்தன.

இதனால
், இந்த தீர்மானம் குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள்
எழுந்ததால் தீர்மானத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர்
அது நேற்று மாலை (இந்திய நேரப்படி நேற்றிரவு)
வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அதாவது எஆழத் தமிழர்களின்
நியாயமான உரிமைகளை
ஆதரித்து மேற்குலக நாடுகள், குறிப்பாக சுவிட்சர்லாந்த
, ஜெர்மனி,
இங்கிலாந்த
, பிரான்ஸ, இத்தாலி, கனட, சிலி, மெக்ஸிகோ
உள்ளிட்ட
நாடுகள் வாக்களித்தன.


ஆனால் இந்த நல்லதொரு தீர்மானத்திற்கு எதிராக இந்திய,
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய, கியூப,
ரஷ்யா,
ஆப்ரிக்க உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வாக்களித்தன
.
(இதில் தமிழர்கள் நாம் ஆழமாக கவனிக்க வேண்டிய விஷயம்
பாகிஸ்தான
, சீன, மலேசிய, இந்தோனேசிய
போன்ற நாடுகள்
இந்தியாவின் பகை நாடுகள்-மற்றும் போட்டி நாடுகள்...இந்தோனசியாவில்
சமீபத்தில் தமிழர்கள் தாக்கப் பட்டது சிறைக் கூடங்களுக்கு அனுப்பப்
பட்டதும் நினைவிருக்கலாம்)

மற்ற 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 நாடுகளும்
எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்க அரசாங்கத்திற்கு
எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல்
போனது.


அதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்க அரசாங்கமும்
தனது ஆதரவு நாடுகளின்
ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் தீர்மானம்
ஒன்றை முன்வைத்தது.
இந்த தீர்மானம் மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.


சிறிலங்க அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த
தீர்மானத்திற்கும் இந்தியா
உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக
வாக்களித்தன.


ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.


எனினும் வாக்கெடுப்பின் முடிவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும்
தீர்மானத்திற்கு ஆதரவாக
27 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள்
வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
ராஜபக்சேவுக்கு நிதியுதவி வழங்குவது என முடிவு செய்யப்பட்ட
து.


இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 தற்காலிக பிளாஸ்டிக்
முகாம்களில்
3 லட்சம் மக்கள் வசிப்பதால் அங்கு கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக
ஐ.நா.வின் மனித
உரிமைகள் சபை பிரதிநிதி கவலை தெரிவித்துள்ளார்.

இதுதான் தமிழர்களின் தற்போதைய தலை விதி!

நமக்கு பதவிகள் முக்கியம்; வெறும்-தமிழ் மொழி முக்கியம்.
அதை பேசும் மனிதர்கள் எங்கு செத்தாலும் நமக்கு என்ன?


நம் தமிழ் தலைவர்களுக்கு என்ன அக்கறை அங்கே இருக்கப் போகிறது.
அவர்கள்
குடும்பம் ஹிந்தி, ஆங்கிலம் பேசி "ஹிந்திக் காரர்கள்"
காலடியில்
உட்கார்ந்துபிழைத்துக் கொள்ளும்.

ஆனால் உலகம் முழுதும் பரவி வாழும் புலம்-பெயர்ந்த தமிழர்களுக்கு
யார்
இனிகாவல் இருக்கப் போகிறார்கள்?

ஆறு கோடி தமிழ் நாட்டுத் தமிழர்களுக்கே - அதிலும் அவர்களுக்கு
வழிகாட்டியாக
நாம் நம்பும் இங்குள்ள தலை சிறந்த தமிழ் தலைவர்களுக்கே,
இலங்கையில்
நடக்கும் இனப் படுகொலையை பார்த்து மனம் பதறி
இதயம்
வெடித்து 'சதை ஆடாத போது" மற்ற நாடுகளிலும் தமிழர்களுக்கு
இதே
நிலை- (இதை விட மோசமான வரப் போவதில்லை) வந்தால், என்ன செய்து நாம் கிழித்துவிடப் போகிறோம்?

விதியே விதியே தமிழச் சாதியை என் செய நினைத்துலாயோ?

திங்கள், 25 மே, 2009

இட்லர்-ராஜ-பக்ஷி ஒரு போர்க் குற்றவாளி!

இலங்கைப் பிரச்சனையை ஐக்கிய நாடுகளின் சபை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டுள்ளது.
இது உலகம் முழுதும் வாழும் தமிழர்களுக்கு சற்று ஆறுதல் தரும் நிகழ்வாகும். 17 நாடுகளின் ஆதரவுடன் நாளை அதாவது 26.5.2009 அன்று இன்றைய இட்லர் 'ராசபக்ஷி' (Raja'butcher) இன் கொடுங்கோல் செயல்களை இனப் படுகொலைகளை வன்மையாக கண்டனம் செய்து 'போர்-குற்றவாளியாக' அவனை அறிவிக்க தீர்மானம் செய்து இருக்கிறார்கள்.
ஆனால், அந்தக் கொடியவனுக்கு ஆதரவாக களமிறங்கி ஈழ தமிழர்களுக்கு துரோகம் செய்யப் போவது யார் தெரியுமா? கம்யூனிசம் பேசும் சீனா, ரஷ்யா ...அப்புறம் என்ன "சோனியாவின்- ஹிந்தியா" இவர்களுக்கு ஜால்ரா போடும் வேறு சில சில்லறை நாடுகள்.
தமிழன் என்றால் அவ்வளவு இளக்காரம் இந்த ஹிந்தியர்களுக்கு?
வெள்ளைக்காரன் நல்லவன் ஆகிவிட்டான்.
பிரிட்டன் தனது வரலாற்றுக் கரையை துடைத்துக்கொள்ள தயார் ஆகிவிட்டது. மேற்கு உலக நாடுகள் தமிழர்களின் உரிமைகள் தொடர்ந்து சிங்களர்களால் நசுக்கப் படுவதை அறிந்து கொண்டு விட்டன. தமிழர்களின் மனித உரிமைகளை இலங்கையின் ஆளும் வர்க்கம் எந்த நாளிலும் மதித்து நடந்தது கிடையாது. இனியும் அது தமிழர்களை மதிக்கப் போவதில்லை.
இனிமேல் அங்கு
என்ன நடக்கப் போகிறது என்பதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
அமெரிக்க-அய்ரோப்ப்பியா நாடுகளின் தலையீட்டில் ஐ-நா மூலம் அங்கு ஒரு
சுதந்திர தனி நாடு அல்லது சம-உரிமை படைத்த சுயநிர்ணய தனி-மாநிலம் ஒரு சில மாதங்களில் அமைத்து தரப் படும்.
உலகத்தமிழர்களை நெகிழ்ச்சி கொள்ளத் தக்க அந்த நிகழ்வு மேற்கு நாட்டு மக்களுக்கும் அங்கு வாழும் புலம் பெயர்ந்த தமிழர்களுக்குமான பாசப் பிணைப்பை மேலும் அதிகரிக்கும். மேலும் தமிழகத்தில் வாழும் தமிழர்கள் உட்பட உலகில் வாழும் பத்து கோடி தமிழர்களுக்கும் ஒரு பெரும் உள்ளக் கிளர்ச்சியை அது ஏற்படுத்தும்.
தமிழர்களின் நியாயமான அந்த உரிமைகளை பெற்றுத் தந்த நாடுகளின் மீது அன்பும், அதற்க்கு எதிராக செயல் பட்ட நாடுகள் மீது வெறுப்பும், குறிப்பாக "ஹிந்தியா" மீது....வெறுப்பும் கோபமும் ஏற்படப் போவது காலத்தின் கட்டாயம்!

புதன், 4 பிப்ரவரி, 2009

முத்துக் குமரன் - தீயை தின்றொரு தீபமானவன்!



முத்துக் குமரன்
எங்கள் - தமிழின
சொந்தங்கள் யாவர்க்கும்
சொத்துக் குமரன் !

ஈழ விடுதலைப்
போரின் எழுச்சியை
தீவிரப் படுத்திய
சித்துக் குமரன் !

உலகத் தமிழரை
ஒன்றாய் ஆக்கி
நெருப்பாய் மாற்றிய
வித்துக் குமரன்!

தமிழர் உளமெலாம்
தமிழுள நாள்வரை
தங்கி நிலைபெறும்
காவல் மதில்-அரண் ! 

-மோகன் பால்கி

செவ்வாய், 13 ஜனவரி, 2009

உதவியா பொழுது போக்கா ?

"உதவி" என்பது
நம்முடைய ஒரு பகுதி நேரத்தையோ
அல்லது பணத்தையோ மற்றவர்களுக்காக செலவிடுவதாகும்!

அது
நிறைய நேரம் இருக்கும் போது
பொழுது போக்குக்காக மற்றவர்களுக்கு அதில் செலவிடுவதோ,
அல்லது நிறைய பணம் இருக்கும் போது புகழுக்காக
அதில் ஒரு பகுதியை செலவிடுவதோ அல்ல!
மாறாக,
நமக்கு நேரமே இல்லாத போதும், உதவி கேட்பவர்களுக்காக
நமது நேரத்தை ஒதுக்கி தருவதும்,
நம்மிடம் பணமே இல்லாத போதும்
உதவி என்று நம்மை அண்டி வருபவர்களுக்கு எப்படியேனும்
தன்னால் முடிந்த பொருளுதவி செய்வதுமே ஆகும்!

சுருக்கமாக சொல்வதானால், ஒரு கோடீஸ்வரன்
தன்னைப் பிறர் மெச்சிப் புகழ வேண்டும் என்று
திட்டமிட்டு செய்யும் பணிகள் உதவியன்று!
அது "தானம்" எனப்படும்!

அதே போன்று, ஒரு ஓய்வு பெற்ற அதிகாரி தனக்கு நேரம் போவதற்காக ஏதோ ஒரு சில சமூகப் பணிகளில் ஈடுபட்டு தனது நேரத்தை செலவிடுவதும் சமுதாய உதவி ஆகாது!
அது "பொழுது போக்கு" என்க!

-மோகன் பால்கி

31st Jan 2004


ஞாயிறு, 11 ஜனவரி, 2009

கலியுகத்தின் குற்றம்!


வசந்த காலத்தில் பூத்துக் குலுங்குகிற மரங்கள் யாவும்
இலையுதிர் காலத்தில் பட்டுப் போகின்றன!
அதற்காக தோட்டக்காரனை யாரும் குற்றம் சொல்லஇயலாது.
வேண்டுமானால் அது காலத்தின் குற்றம் என்றுசொல்லலாம் !

அதே போன்று,
தர்ம யுகத்தில் தேவைக்கு மேல்
செழிப்பும், செல்வமும் இருந்தது!
அதனால், பேராசைக்கும், பொறாமைக்கும்
அங்கு வேலையே இல்லாதிருந்தது!

இன்றோ கலியுகம்!
எல்லாமே வற்றிப் போய் இயற்கையாகவே
எங்கும் வறுமை படர்ந்து வருகிறது!
இங்கு மனிதர்களும் அதிகம்
செயற்கையான நவீன தேவைகளும் மிக மிக அதிகம்-
ஆனால் கையிருப்போ அதி சொற்பம்!
அதனால் தீமைகள் இங்கே தலை விரித்து ஆடுகின்றன!

இது மனிதர்களின் குற்றம் என்று எப்படி சொல்லமுடியும்?
இது கலியுகத்தின் குற்றம் என்றே சொல்ல வேண்டும்!

-மோகன் பால்கி
22nd Jan 2004


இறைவா நீயும் வெளியேறு!




நான் இருந்த "வீட்டில்" கூட்டம் கூட்டமாய்
இன்று
யார் யாரோ!

நானும்
பெயருக்கு ஏதோ
ஓரமாய்...!

எனது தந்தை
"இவ்வீட்டைத்" தருகையில்
இந்தக் கும்பல்கள்
அன்றைக்கில்லை!

இன்றோ..
அரசியல் அண்ணன்கள்
மதம் முதிர்ந்த கிழடுகள்
கிரிக்கெட் மைத்துனர்
என்று
ஒரு ஊரே கிடந்து
என் "அறைகளில்"
சப்தமிடும்!

அது போதாதென்று
மூலைக்கு மூலை அமர்ந்து


சினிமா சீரியல்
அடுத்த வீட்டு கதை என்று
சிரித்தும் அழுதும்
அமைதி கெடுக்கும்
அக்காள் தங்கைகள்!

அதோடு நிற்காமல்
இவர்களைப் பார்க்க
எவர் எவர்களோ வந்து
அவர்களும் "உள்-நின்று"
ஓயாமல்
சப்தமிடுகிறார்கள் !

இடையிடையே
என் தந்தையும்
வந்து தங்கி
சப்தமிட்டுச் செல்கிறார்!

எப்படியோ!
சதா சப்தமிடும்
ஒரு
இயந்திரமாகிப் போனது-
என் "வீடு"!

என் தந்தையோடு
நான் மட்டுமே இருந்த நாளில்
கொஞ்சம் அமைதியும்
ஏகாந்தமும்
இருந்ததாய்
ஒரு ஞாபகம் !

ஒரு நாள்!
நான்
பெரும் சங்கல்பம் செய்து கொண்டேன்;
அவரவர்களை
"அவரவர்களின்-சொந்த வீட்டிற்கு"
துரத்தியடிப்பது என்று!

ஒரு
சிம்ம கர்ஜனையில்
அவர்கள்
சிதறியோடினார்கள்!

அப்பா!
என்ன ஒரு ஆனந்தம்..
என்னவொரு ஏகாந்தம்!

இனி என் வீட்டில்
எனது "உள்-வீட்டில்"
அரசியல் மதம்
சினிமா கிரிக்கெட்
என்று
எதற்கும் இடம் இல்லை!
வெறேது பற்றியும்
உள்-வெளி
கூச்சல்கள் இல்லை!

இனி
எனது தலையும்
ஒரு
பஜனை மடம் அல்ல!
அது
சப்தமற்ற ஆகாயம்-
அலை நின்ற சமுத்திரம்!

ஆம்!
நான் இனி
என்னுடன் மட்டுமே
இருக்கப் போகிறேன்!

எனக்குள் இருந்து
என்னில் கரைந்து
அந்த ஏகாந்தத்தில் நான்
காணாமல் போவேன்!

எனவே - இறைவா !

என் - தந்தையே - நீயும்
வெளியேறு!

-மோகன் பால்கி
12th April 2004


வெற்று சிந்தனையை நிறுத்தி செயல் புரிவாயாக!


அறிவானது செயலை அண்டியே பிழைப்பு நடத்துகிறது.
எவ்வளவுதான் மிகச்சிறந்த அறிவானாலும்
அது
செயல்படும் மனிதனிடமே சிறப்படைகிறது!

மேலும்,
"அறிவு" செயல் படுவதற்கான சக்தியையும்
ஏதோ ஒரு "செயலே" தருகிறது!

அதாவது,
அமைச்சர்களுக்கும்,
"அறிஞர்களுக்கும் "
எந்தப் பெருமையும் அற்ற
ஏதோ ஒரு "அரசன்" சம்பளம் தருவது போல!

-மோகன் பால்கி

சனி, 3 ஜனவரி, 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்! 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனிய நண்பர்களே!

image00154.gif 2009

வியாழன், 1 ஜனவரி, 2009

"பனி மலர்கள்" காத்துநிற்போம்!



ஒரு விரல் குறைந்துவிடில் குற்றமிலை
பத்துவிரல் கொண்டவர்கள் கோனும் இலர்!

புலனைந்தில் ஒன்றிரண்டு மறைந் திருந்தால்
புண்ணியர்கள் செய்த தவம் என்றுரைப்பேன்!

புவனமிதில் கட்செவியும் வாய்ப்பேச்சும் விட்டவர்கள்
புண்ணியர்தாம் ஒருவகையில் முனிவர் இவர் !

தீயவற்றைக் காணுவதும் தீஞ்சொற்கள் பேசுவதும்
ஓயாத பெரும்சப்தம் அனுமதிக்கும் கதவுகளை

ஒருவழியாய் மூடிவிட முற்பிறவி முடிவெடுத்தார்
இன்றிவர்கள் அசைந்தாலும் ஆற்றுவதோ மவுனதவம்!

உயர்மாந்தர் உள்ளொளியால் உயிர்ப்பர் இவர்
இறையவனின் தோட்டத்தில் முன்வாசல் மென்மலர்கள்!

மறவாமல் 'அவன்'படைத்து அவனிக்குத் தந்துவிட்டான்
தருவோம் நம்இதயத்தை "பனி மலர்கள்" காத்துநிற்போம்!

-மோகன் பால்கி