Translate this blog to any language

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

காலக் கடற்கரை..புதுப் புது சாமியார்கள் !

                                          Just wigs and hair pieces 
நேற்று முன் தினம் ஒருவர் எனது பக்கத்து அலுவலகத்தில் ( நண்பர்கள் திரு. மீனாக்ஷி சுந்தரம் & திரு. நம்பி ) உள்ள ஒரு வழக்குரைஞரைப் பார்க்க வந்திருந்தார். அப்படியே எனது "யோ-ஜென்" மனோ தத்துவ மையத்தைப் (YozenMind Psychology & Counseling Centre) பார்த்து விட்டு என்னிடம் பேச முற்பட்டார்.

அவருடைய கையில் சமீபத்தில் பிரபலம் அடைந்த ஒரு சிறு வயது சாமியாரின் புத்தகம் கையில் இருந்தது. எனது மனோ தத்துவ வழி முறைகள் மற்றும் குணப்படுத்தப் படும் உளவியல் பிரச்சினைகள் பற்றி மேம்போக்காக கேட்டு விட்டு அதன் பின் அந்த சாமியாரின் புத்தகத்தை என்னிடம் காட்டி இவரை பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா, பார்த்து இருக்கிறீர்களா என்றெல்லாம் ஆர்வத்துடன் ஒரு "கிறிஸ்துவ மிசனரியைப்" (Christian Missionary) போல பேச ஆரம்பித்து விட்டார். எனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று மென்மையாக மறுத்தேன். "என்னங்க! பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் அவருக்கு சீடர் ஆகி வராங்க. நீங்க என்னமோ! உங்களுக்குத் தெரியுமா, பிரபல எழுத்தாளர் CN இப்ப அவரை எத்துகிட்டார். அவரே யாரையும் நம்பமாட்டார். அவரைப் பாத்தே எவ்வளவோ பேரு சேந்து இருக்காங்க. இன்னும் எவ்வளவோ நடிகர் நடிகைகள், பிரபலங்கள் சேந்துகிட்டே இருக்காங்க! நீங்க ஒரு தரம் அங்க வாங்க சார்!" என்று வலுக் கட்டாயம் செய்தார்.

விட்டால் என்னைக் கைப் பிடித்து உடனே கொண்டு போய் அங்கு அந்த சாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தான் மறு வேலை பார்ப்பார் போலிருந்தது. நான் எப்படியோ எனது சக்தியை வீண் விவாதத்தில் (Argument) விரயம் செய்யாமலும், அதே சமயம் அவரது மனதை, மற்றும் நம்பிக்கையை கேலி செய்யாமலும் ஒருவாறாக பேசிக் கொண்டிருக்கும் போதே பக்கத்து அலுவலக நண்பர் வழக்குரைஞர் திரு.நம்பி வந்து என்னைக் காப்பாற்றினார் எனலாம். (பழைய பகுத்தறிவு இயக்க பாலுவாக இருந்தால் இது போன்ற வாதப் பிரதி வாதங்கள் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி! பத்து பேர் சுற்றி நின்று வாள் வீசினாலும் தூசு எனக்கு அது! அது ஒரு காலம்! இப்போதெல்லாம் மவுனம் பிடித்திருக்கிறது. சும்மா இருக்கப் பிடிக்கிறது! பேச்சு-வெறும் பேச்சு என்றே படுகிறது; அது எவ்வளவு சிறந்த நல்ல பேச்சென்றாலும். எனவே அதை தவிர்க்கவே விரும்புகிறது மனம் !)

பல சமயம் இப்படித்தான் ஆகி விடுகிறது.
என்ன செய்வது என்று தெரியாமல் சிலரிடம் மாட்டிக் கொண்டு இப்படி முழிக்க வேண்டியதாகி விடுகிறது. பலருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும்.
இப்படி "மந்திரித்து விட்ட கோழி" மாதிரி சிலர்-பலர் இந்த சாமியார்களிடம் ஈர்ப்புடன் இருப்பதற்கும், தெருவில் நின்று ஆள் பிடிக்காத குறையாய் மாய்ந்து மாய்ந்து அப்படி புகழ் பாடுவதற்கும் என்ன காரணம்?

அதாவது அதற்க்கான மனோதத்துவ காரணம் (Psychological Reason) என்ன என்று, எனக்கு தெளிவாக தெரியும். ஆனால் அதைச் சொன்னால் தெளிவாக எல்லோர்க்கும் புரியும் என்று நான் நம்பவில்லை. ஏன் என்றால், நூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் இப்படிதான் ஏதோ ஒரு தலைமை, ஏதோ ஒரு புத்தகம் அல்லது தத்துவத்துக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். நானும் அப்படி ஒரு காலத்தில் இருந்தவன் தானே! தலைவர்கள்-சாமியார்கள் என்று! அதன் பின் ரொம்ப கஷ்டப்பட்டு அந்த "வசிய" (Mesmerized World) உலகங்களில் இருந்து விடுபட்டு சுதந்திரக் காற்றை இன்று சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதிருக்கும் நிலை எந்த புத்தர் வந்து எதிரில் நின்றாலும் ஆச்சர்யப்படுகிற அல்லது பூமியில் இருந்து ஆகாயத்துக்கு நான் எம்பிக் குதிக்கிற நிலை அல்ல என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.

அது சரி! மனிதர்களை மனிதர்களாக மட்டுமே பார்க்க நம்மால் ஏன் முடிவதில்லை!
குறைந்தது அவர்கள் சராசரிக்கு பத்து இருபது சதவிகிதம் மேற்பட்டவர்கள் என்பதாக மட்டும் நம்மால் ஏன் கருத முடிவதில்லை?

மாறாக அவர்களை ஒரு தேவ தூதர்கள் அல்லது இறைவனின் அவதாரம் போன்று எது நினைக்க வைக்கிறது?

1. அவர்கள் புத்தகங்கள் பலவும் படித்து நன்றாக (Articulation) பேசுகிறார்கள்.
2. நிறைய "அரைத்த மாவுக்" கதைகள் சொல்கிறார்கள்.
3. தேர்ந்தெடுத்த நடை உடை பாவனைகள் கொண்டு வித்தியாசமான உடைகள் அணிந்து ஒரு சராசரிக்கு மேற்பட்டவர்கள் போன்ற தோற்றத்தை வலிந்து ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
4. இவ்வுலக பிரச்சினைகள் மற்றும் "அவ்வுலக பேறு" பற்றி அரை குறையாக பேசுகிறார்கள்.
5. எல்லாவற்றிற்கும் ஒரு "சர்வ ரோக வலி நிவாரணி" மாதிரி ஒரு சில
மந்திரங்களை, வார்த்தைகளை, வசனங்களை கை வசம்
வைத்திருக்கிறார்கள். அவை வேலை செய்யும் என்பது மக்களின் நம்பிக்கை.
6. பெருங்கூட்டம் கூடுகிறது-எனவே அங்கு உண்மை இருக்கவீண்டும் என்ற தவறான கருத்து மக்களிடம் மலிந்து கிடக்கிறது.

ஆனால், ஒன்றை மட்டும் எல்லா மனிதர்களும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இதே போன்று நிறைய ஊர்களில் நிறைய நாடுகளில், நிறைய சாமியார்களுக்கும், மத போதகர்களுக்கும், இவ்வாறு பெரும் கூட்டம் கூடுகிறது. அவர்களும் மற்ற அமைப்புகளை நேரடியாக அல்லது மறை முகமாக கேலி கிண்டல் செய்கிறார்களே சண்டைகள் வருகிறதே-அப்படியாயின் அதில் எது உண்மையான அமைப்பு? உலகில் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் ஒரு சாஸ்வதமான மத அமைப்பு உண்டா?

என்னிடம் உள்ளதே உண்மையான கோஹினூர் வைரம் என்று ஒவ்வொரு வியாபாரியும் சொன்னால் பிறகு எது தான் உன்மை கோஹினூர் வைரம் சொல்லுங்கள் ?

அது சரி! வியாபாரியாவது தன் பொருளை போற்றி புகழ்ந்து விற்பனை செய்வது நியாயம் என்று கொள்வோம். ஆனால், "இறைமை" பற்றி பேசுகிற ஒரு அமைப்பு, அதன் அங்கங்களான பிற மனிதர்கள், ஏன் ஆள் பிடிக்க அப்படி அலையோ அலை என்று அலைகிறார்கள்?

அதன் காரணம், இதில் ஏதோ ஒன்றாக இருக்கலாம்!

1. தன்னைச் சார்ந்தவர்களையும் தான் சேர்ந்திருக்கும் ஒரு அமைப்பில் இணைத்துவிட்டால் தன்னைப் பிறகு அவர்கள் கின்டல்கேலி செய்ய மாட்டார்கள் ; தனது 'தன்முனைப்பும்' கெடாது என்ற எண்ணமாய் இருக்கலாம்.
2. பொருள் வரவு அல்லது ஆள் சேர்த்ததால் அந்த அமைப்பில் கிடைக்கும் புகழ் வரவு காரணமாய் இருக்கலாம்.

இதைத் தவிர நான் கேட்கும் கேள்வி என்னவென்றால்,
மேற்படி ஏதோ ஒரு தெய்வீக அமைப்பில் சேர்ந்ததால் மட்டுமே ஒரு மனிதர் 150 வருடம் நோய் இன்றியும் நிம்மதியாகவும் வாழ்ந்தார். அவரது சாமியாரும் அதே போல 200 வருடங்கள் நரை, திரை, பிணி, மூப்பு இன்றி வாழ்ந்தார் என்ற செய்தி இது வரை உலகில் காணக் கிடைக்கவில்லை. மாறாக, யாரோ ஒரு முனிவர்.....எங்கேயோ.... எப்போதோ....பல நூறு வருடங்களுக்கு முன்பு...வாழ்ந்தார் என்று கடந்த காலங்களை சொல்லியே நமக்கு "காது குத்துவதை" நாம் தான் அடிக்கடி பார்க்கிறோமே!

(உம்! இலட்சக் கணக்கான சாமியார்கள்..கோடிக் கணக்காக நீண்ட அந்த கடந்த காலம்! இன்னும் வர இருக்கும் பல கோடி சாமியார்கள்- மற்றும் அவர்களின் புகழ் பாடிகள்! நினைத்துப் பார்க்கிறேன்!)

நிகழ் காலத்தில் மேற்படி சாமியார்கள் ஏன் அங்ஙனம் தெய்வீக செயல்கள் புரிவதில்லை-அதாவது செத்தவர்களை எழுப்புவது, வானில் பறப்பது, கூடு விட்டு கூடு பாய்வது....இத்யாதி என்று எவரும் எந்த சாமியாரையும் பார்த்து கேள்வி கேட்பதில்லை! ( ஆனால் மேற்படி வாழ்கிற இன்றைய சாமியார்கள் பற்றிய, அவர்களது பிற்கால சரித்திரத்தில், செத்தவர்களை அவர்கள் எழுப்பியதாகவும், வானத்தில் அவர்கள் பறந்ததாகவும் கதைகள் எழுதி-பிற்கால மக்களால் அது இக்காலம் போலவே நம்பப்படும்!)

இதெல்லாம் நான் எத்தனைதான் விவரமாக உங்களிடம் சொன்னாலும் உங்களின் "வசிய" மனம், எதையாவது நம்பச் சொல்லி உங்களை நிர்பந்திக்கும் என்றும் எனக்குத் தெரியும்.

ஒன்று
, சாமியார்கள் வாய்ப்பேச்சை நம்புவது, அல்லது 
"கடவுள்
இல்லை" என்று  சொல்லுபவர்கள் வாதத்தை அப்படியே நம்புவது,
அல்லது சுயமுன்னேற்ற (Self Development Bookish Knowledge Orators) கதைகளைப்  பேசும் 'வசீகர வாய்ப் பேச்சாளர்களை' நம்புவது...
என்று
எதையாவது நம்ப வேண்டும் உங்களுக்கு!
ஆராய்கிற
மனம் உங்களிடம் அடியோடு கிடையாது!
உண்மையை கண்டு கொள்ளும் சக்தியும் உங்களிடம் அறவே இல்லை!

ஆராய பயம் என்று கூட நான் சொல்ல மாட்டேன்!

இறந்து போன உங்கள் அன்பு பாட்டியை ( நான் 'அப' வார்த்தை சொல்ல விரும்பாமல் பாட்டியோடு விட்டு விட்டேன்) ஒரு சாமியார் எழுப்ப முடியும் என்ற நம்பிக்கையை நீங்கள் கெடுத்துக் கொள்ள விரும்புவீர்களா என்ன ?
மேலும், உங்கள் வாழ்க்கையை ஒரு சின்ன மந்திரம், "குண்டலினி சக்தி" நல்ல படியாக மாற்றி விடும் என்ற நம்பிக்கையை விட்டு விட உங்கள் மனம் இடம் தருமா?
நீங்கள் நல்லவர் என்றும், உங்களுக்காக அவ்வுலகத்தில் ஒரு இருக்கை காத்திருக்கிறது என்று உங்கள் சாமியார் சொல்வதை நம்புவது உங்களுக்கு கசப்பாகவா இருக்கும்?

உங்கள் நம்பிக்கையை, உங்களின் எதிர் பார்ப்பை போட்டு வைத்திருக்கும் கல்லாப்பெட்டி அல்லவா உங்களின் சாமியார் மற்றும் அதன் அமைப்பு சார் பொருள்கள்/மத-அரசியல் மற்றும் சுயமுன்னேற்ற உள-வசிய சிந்தனைகளை சுமந்த சொற்கள்
அட! அவை யாவுமே பிறர் வாயிலிருந்து வருகின்ற நேர்த்தியாக கட்டமைக்கப்பட்ட சொற்கள், எழுத்துகள் தாமே? 
பிறகு அந்த அலங்கரிக்கப்பட்ட சொற்கள் சுமந்து வரும் நம்பிக்கைகள் பொய் வாக்குறுதிகள், அவற்றை விட்டு விட நீங்கள் எப்படி மனம் வந்து சம்மதிப்பீர்கள்?
அதாவது 'உங்கள்' (நம்பிக்) "கையை" நீங்களே... 'உங்களது கையால்' வெட்டிவிட எப்படி 'உங்களால்' முடியும்?

அதனால் தான் இங்கே இப்பூவுலகில், போற்றி பாதுகாக்கப் படும் நிறைய பிரிவுகள் ; அதனால் ஏற்படும் மதப் பூசல்கள் அரசியல் பகை-சண்டைகள் உட்பட!
உம்! என்ன சொல்லி என்ன பயன்?
இயற்கையை நாம் நம்பாத வரை- "நடு நிலைப் பார்வை" என்ற ஒன்று
நம்மிடம் இல்லாத வரை !

சரி போகட்டும்!
எனக்கொன்றும் அதில் வருத்தம் இல்லை!
அது அப்படியே பல ஆயிரம் வருடங்கள் இருந்து தொலைத்திருக்கிறது.
மக்களிடம், முக்கியமாக படித்தவர்களிடமாவது ஒரு நல்ல
மாற்றம், தெளிவு, சிந்திக்கும் ஆற்றல் வர வேண்டும். அது வரை நிறைய போலிச் சாமியார்கள்-போலி அரசியல்
வாதிகள், சுயமுன்னேற்றப் பேச்சாளர்கள் உங்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று வந்து கொண்டே இருப்பார்கள்!

அதாவது இந்தக் காலக்கடற்கரை யில்
அந்த நல்ல நாள் வரும் வரை
புதுப் புதுச் சாமியாரகள் / புதுப் புது போதனையாளர்கள்
புதுப் புது வேடங்களில்
வரவே செய்வர்-
நமக்குப் பிடிக்கிறது என்பதால்!

-மோகன் பால்கி

1 கருத்து:

  1. ஆரம்பமே நச். என் மனதில் இந்த விடயங்கள் குறித்து... என்ன இருந்ததோ அதையே நீங்களும் முழுமையாக பிரதிபலித்திருக்கிறீர்கள்.

    (Memorized World) (Mesmorized World) என்றிருக்க வேண்டுமோ?

    //சுதந்திரக் காற்றை இன்று சுவாசித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதிருக்கும் நிலை எந்த புத்தர் வந்து நின்றாலும் ஆச்சர்யப்படுகிற அல்லது பூமியில் இருந்து ஆகாயத்துக்கு நான் எம்பிக் குதிக்கிற நிலை அல்ல என்பது மட்டும் எனக்கு தெரிகிறது.//

    நானும் இதே சுதந்திரத்தை உள்ளுக்குள் அனுபவிக்கிறேன்.

    ஆயினும்... வெளிக்காட்டிக் கொள்ள முடிவதில்லை.

    பின்னே... தொலைச்சிடுவாங்களே.... மக்கள்!

    (இந்த மாதிரி நிலையில் இருக்கும் ஒருத்தன் இப்படிப் பேசலாமோ...? இதனாலதாண்டா கடவுள் உன்னை இப்படி ஆக்கி வச்சிருக்கார்- எனும் பழிப்பு... ஆஹா...! வாய் திறக்கலாமோ? )

    மொத்தத்தில் உங்கள் பதிவு... என்னையே ஒரு முறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டதைப் போல இருந்தது.

    //மாறாக அவர்களை ஒரு தேவ தூதர்கள் அல்லது இறைவனின் அவதாரம் போன்று எது நினைக்க வைக்கிறது?//

    காரணங்கள்... அனைத்தும்... Professional words from a professional.

    "காலக்கடற்கரை" கவிதையும் படித்தேன். அமைதியான அழகுடன் கூடிய அருமையான தத்துவ ரசம்.

    பதிலளிநீக்கு

You can give here your comments: