Translate this blog to any language

திங்கள், 8 செப்டம்பர், 2025

விதையில்லாத கிராமம்!! மரபணு மாற்றப்பட்ட பழங்கள்!!


ஒரு சிறிய மலைக்கிராமம். அங்குள்ள மக்கள் கல்வி கற்றவர்கள் அல்ல; ஆனால் அவர்கள் நிலத்தை நேசித்தவர்கள். வியர்வையைச் சிந்தி உழைப்பதே அவர்களின் வாழ்வு.


அந்தக் கிராமத்தில் பழமையான மரபு இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் காய்கறிகள், பயறு வகைகள், தானியங்கள் – எல்லாவற்றிலிருந்தும் விதைகளை எடுத்து வைப்பது. அடுத்த பருவத்தில் அந்த விதைகள் தான் அவர்களின் வாழ்க்கைக்கு உயிராக இருந்தன.


🌿 புதிய பேராசை:

ஒரு நாள் நகரத்திலிருந்து வியாபாரிகள் வந்து, அவர்களிடம் புதுமையான காய்கறிகளையும் பழங்களையும் காட்டினார்கள்.
“பாருங்கள், இது விதையில்லாத திராட்சை. விதையில்லாத மாதுளை. விதையில்லாத தக்காளி. சாப்பிட சுலபம், சுவை அதிகம், சந்தையில் அதிக விலை வரும்,” என்றார்கள்.

கிராம மக்கள் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். “அட, விதையில்லாததால் சாப்பிட எளிது. குழந்தைகளுக்கும் நல்லது. இனி விதை எடுக்கும் சிரமமில்லை.” என்று நினைத்து, அவர்கள் பழைய மரபை மெதுவாக கைவிட்டனர்.

அவர்கள் பழைய விதையுள்ள காய்கறிகளை ஒதுக்கி வைத்து, அந்த வியாபாரிகள் விற்ற விதையில்லா காய்கறிகள், பழங்களை மட்டும் சாப்பிடத் தொடங்கினர்.


🌱 சிக்கல் ஆரம்பம்:

சில மாதங்கள் கழித்து, ஒரு விவசாயி – பெயர் ராமு – தன் மனைவிக்காக தோட்டத்தில் தக்காளி வளர்க்க நினைத்தான்.
அவன் வாங்கி வந்த விதையில்லா தக்காளியை வெட்டி, மண்ணில் போட்டான்.
நாட்கள் கடந்தும் எந்தச் செடியும் முளைக்கவில்லை.

“இது என்ன வியாபாரம்? பழம் இருக்கிறது, சுவை இருக்கிறது… ஆனா உயிரே இல்லை!” என்று அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.

அவன் அடுத்த நாள் விதையில்லா கத்திரிக்காய், மிளகாய் – பலவற்றையும் மண்ணில் போட்டான். எந்த ஒன்றும் முளைக்கவில்லை.


🌾 முழு கிராமமும் அச்சத்தில்:

மெல்ல அந்த உண்மை கிராமம் முழுக்க வெளிப்பட்டது. யாருக்கும் விதை கிடைக்கவில்லை.
விதையில்லா பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்ததால், அடுத்த பருவத்தில் பயிரிடக் கூடும் விதைகள் எதுவும் அவர்களிடம் இல்லை.

அவர்கள் நகர வியாபாரிகளிடம் மீண்டும் போனார்கள்.
வியாபாரிகள் சிரித்து, “நீங்கள் விதை இல்லாததால் தான் எங்கள்மீது நம்பிக்கையாக இருக்க வேண்டியிருக்கு. விதைகள் வேண்டுமா? எங்களிடம் tissue culture plant-கள் இருக்கின்றன. ஆனால் விலை அதிகம்,” என்றார்கள்.

அந்த வார்த்தைகள் கிராம மக்களை அச்சுறுத்தின.
“இப்போ நம்ம வாழ்வு முழுக்க இவர்கள்மீதே சார்ந்துவிட்டதே? நம்ம நிலம் இருக்கிறது, தண்ணீர் இருக்கிறது, ஆனா விதைகள் இல்லையே!” என்று அவர்கள் கவலையடைந்தார்கள்.


🌳 பழைய ஞானம்:

அந்த நேரத்தில், கிராமத்தில் இருந்த முதியவர் கோபால் பேசத் தொடங்கினார்.
“நம் தாத்தா, பாட்டா காலத்திலிருந்து விதைகளை எடுத்துப் பேணி வைத்தார்கள். அதுதான் எங்களுடைய உண்மையான செல்வம்.

விதையில்லா பழங்கள் சுவைக்காக நல்லவை. ஆனால் வாழ்வுக்கான உணவு எப்போதும் விதையுள்ள மரபு வகைகளில்தான் இருக்கிறது. நாம் அந்த வழியை விட்டுவிட்டோம். அதனால்தான் இப்படி சிக்கலில் விழுந்திருக்கிறோம்.”


🌿 வெளிச்சம்:

அந்த சமயம், அருகிலுள்ள ஊரிலிருந்து வந்த விவசாய நிபுணர், மக்களிடம் சொன்னார்:
“நீங்கள் நினைக்கிறீர்கள் விதையில்லாதது தான் முன்னேற்றம் என்று. ஆனால் உண்மை வேறுபட்டது.

விதையில்லா வகைகள் – grafting, tissue culture போன்ற முறைகளால் பெருகும். அவை வணிகத்திற்கு நல்லவை.
ஆனால் உங்கள் குடும்பம், உங்கள் கிராமம் – வாழ்வதற்கு விதையுள்ள மரபு வகைகள் தேவை.

நீங்கள் மீண்டும் உங்கள் நிலங்களில் விதையுள்ள தக்காளி, கத்திரிக்காய், பயறு, மிளகாய், பசலை – எல்லாவற்றையும் நட்டு வளருங்கள்.
அவற்றிலிருந்து விதைகளை எடுத்து வையுங்கள். அதுதான் உங்கள் சுயசார்பு. அதுதான் உண்மையான சுதந்திரம்.”


🌾 புதிய தொடக்கம்:

அந்த வாரம், கிராம மக்கள் ஒன்று சேர்ந்தார்கள்.
அவர்கள் அருகிலுள்ள கிராமத்திலிருந்து சில மரபு விதைகளை வாங்கினார்கள்.

மீண்டும் நிலம் உயிர் பெற்று பசுமையாயிற்று.
ஒவ்வொரு குடும்பமும் விதைகளை சேமிக்கத் தொடங்கினார்கள்.
மரபு விதைகள் அவர்களின் வீடுகளில் தங்கம் போலப் பாதுகாக்கப்பட்டன.


முடிவுரை:

அந்தக் கிராமம் ஒரு பாடம் கற்றுக்கொண்டது:

விதையில்லா பழங்கள் சுவைக்காகவும் வணிகத்திற்காகவும் பயன்படும்.

ஆனால் விதையுள்ள மரபு வகைகள் தான் வாழ்வின் அடிப்படை.

உணவின் சுதந்திரம், விதையின் சுதந்திரத்தில் உள்ளது.


அவர்கள் அந்த நாளிலிருந்து எப்போதும் சொன்னார்கள்:

விதை இல்லாதது வியாபாரியின் வசதி; விதை உள்ளதே மனிதனின் உயிர்.”


-Yozenbalki 

புதன், 27 ஆகஸ்ட், 2025

விநாயகர் வழிபாடு எப்போது வந்தது?

எனக்கு தெரிந்து விநாயகர் வழிபாடு பிள்ளையார் வழிபாடு என்பது பவுத்த சமண சமயங்கள் தென்னிந்தியாவில் பரவ ஆரம்பித்த காலத்தில் அதை தடுக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.


அப்போது ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்த சைவ சமயத்தினர் மற்றும் வைணவ சமயத்தினர் (அறுசமய வழிபாடு: சைவம், வைணவம், சௌரம், கௌமாரம், சாக்தம், காணாபத்யம்)
ஒன்று கூடி இந்த அறுவரும் ஒத்துக் கொள்ளக்கூடிய ஒரு கடவுளாக வைத்து திணிக்கப்பட்ட வழிபாடாகவே அது தெரிகிறது! 

காரணங்கள் நான் சொல்கிறேன்: 

1. கோயில்கள் அதிகமாக உள்ள தமிழ்நாட்டில் விநாயகருக்கு எனறு முருகர் போன்று தொன்மையான தனிப்பட்ட பெரிய கோயில் எதுவும் கிடையாது.

2. பிள்ளையாரை "ஓம்" எனும் பிரணவத்தின் வெளிமுக குறியீடாகவே இன்றும் சொல்வதை நாம் கருத்தில் கொள்ள முடியும். 

3.  பிள்ளையார் ஓம் போலவே அமைந்திருப்பதையும் நாம் காணலாம்.
 பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் பிற்கால ஓலைச்சுவடிகள் அதிகம் உண்டு. 

4.  அனைத்து அறுசமய கோவில்களிலும் பிற்காலத்தில் பிள்ளையார் சிலைகளை வலிந்து திணித்திருப்பதை நாம் இன்றும் காண முடியும். அது மட்டும் புதிதாக செங்கற்களால் சில காலத்துக்கு முன் கட்டப்பட்டதாக இருக்கும். 

5. அது போதாது என்று தெருத்தெருவுக்கு ஊர் ஊராக ஆலமரம் அரசமரம் குளக்கரையில் திடீர் பிள்ளையார்கள் சைவம் தழைத்து ஓங்கிய தமிழ்நாட்டில் வைக்கப்பட்டது. 

6. அதுவும் போதாமல் தெருக்களில் நேர் குத்து வருகின்ற இடங்களில் அந்த வீடுகளின் சொந்தக்காரர்கள் ஒரு சிறிய பிள்ளையாரை கண் திருஷ்டி பிள்ளையார் என்றும் வைக்கத் தொடங்கினார்கள்.

7. சமண சமயம் தமிழகத்தில் பரவத் தொடங்கிய போது அதைத் தடுக்கும் விதமாக அவர்களை வஞ்சகமாக வாதத்திற்கு அழைத்து ஏதோ ஒரு வகையில் தோற்கடித்து 8000 சமணர்களை கழுவில் ஏற்றிக் கொன்றவன் திருஞானசம்பந்தன் என்ற ஆரிய சைவன் ஆவான். 

"வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென் றழிக்கத் திருவுள்ளமே…”
”அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெயத்திரு வுள்ளமே…”
”வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெயத்
திருவுள்ளமே"! இதெல்லாம் அவனுக்கு சமணர்கள் மீது இருந்த வெறுப்பை தெளிவிக்கும் பாடல்கள்! 

8. நரசிம்மவர்ம பல்லவனின் படைத்தளபதியான பரஞ்சோதி (சைவ நாயன்மார்களில் ஒருவரான சிறுத்தொண்டர்) வாதாபியைக் கைப்பற்றிய பின்னர், அங்கிருந்த ஒரு வித்தியாசமான கணபதி சிலையை எடுத்து வந்து தமிழ்நாட்டில் பிரதிஷ்டை செய்தார். 
முதலாம் நரசிம்ம பல்லவனின் ஆட்சிக் காலம் (கி.பி. 630-668) ஆகும்.
அதுவே வாதாபி கணபதி என்று இன்றும் இந்தச் சிலை திருவாரூர்த் கோயிலில் உள்ளதாக ஒரு சாராரும், திருச்சங்காட்டங்குடியில் உள்ளதாக வேறு ஒரு சாராரும் கருதுகின்றனர். இது பல்லவர்கள் மற்றும் சாளுக்கியர்களின் கலை மற்றும் கலாச்சாரத்துடன் தொடர்புடையது.

9. ஆக கி.பி‌. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் விநாயகர் வழிபாடு இல்லை, விநாயகருக்கு (காணாபத்தியம்) என்று பெரிய கோயில்களும் இல்லை என்றே நம்மால் உணர முடிகிறது.

ஆக என்னுடைய துணிந்த கருத்து என்பது பௌத்த சமண மத சமயங்கள் தென்னிந்தியாவில் காலூன்றக் கூடாது என்பதற்காக அதைத் தடுக்கும் விதமாக ஐந்து அல்லது ஆறு சமயத்தினர் கூடி உருவாக்கிய அல்லது திணித்த ஒரு பொது இறை வழிபாடு விநாயகர் வழிபாடு என்கிற பிள்ளையார் வழிபாடு எனலாம்!

Yozen Balki