Translate this blog to any language

புதன், 9 மே, 2018

NEET அரக்கனும் அப்பாவி அப்பாக்களும்!

*இந்த அரசுகள் ஒருநாள் கருகும்* !


நீங்கள் *அந்த அப்பாக்களை* கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலும், சென்ட்ரல், எக்மோர் ரயில் நிலையங்களிலும் பார்த்திருக்கலாம். ப்ளஸ் டூ ரிசல்ட் வந்தவுடன், *ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் மற்றும் மருத்துவ கலந்தாய்வுக்கு வேட்டி சட்டையில், கையில் ஒரு நாளைக்கான துணிமணியுடன்  தன் மகனையோ, மகளையோ  கையில் பிடித்துக் கொண்டு, இஞ்சினியரிங் கவுன்சிலிங்க் க்கு அண்ணா யூனிவர்சிட்டிக்கும், மெடிக்கல் கவுன்சிலிங் க்கு கீழ்பாக்கத்திற்கோ, எந்த பஸ் போகுமென்று விசாரித்துக் கொண்டிருக்கும் கடைக்கோடி கிராமத்தில் இருந்து வந்திருக்கும் அப்பாக்களை பார்த்து இருப்பீர்கள்*.


அந்த அப்பாக்களைத் தான் உம் மவனோ மகளோ" நீட்" எழுதி டாக்டராக வேண்டுமென்றால் ராஜஸ்தானுக்கு கூட்டிட்டு போ என்றிருக்கிறது உச்சநீதி மன்றம்.சித்திரை மாதத்தில்  தமிழ்நாட்டிலேயே  நடமாட முடியாது. இந்த கத்திரி வெயில் சீசனில் உன் புள்ளைங்களை ராஜஸ்தானுக்கு கூட்டிட்டு போய் பரீட்சை எழுத வை என்கிறது  உச்சநீதி மன்றம்.இதற்கு ஒத்து ஊதுகிறது மத்திய அரசு.!

*இதுவரை சென்னையையே பார்த்திராத அப்பாக்கள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். கட்சி மாநாட்டிற்கு வரும்போது மட்டுமே கடற்கரையையும், எம்ஜிஆர் சமாதியையும் பார்த்த அப்பாக்கள் இருக்கிறார்கள்.கலெக்டர் ஆபிஸில் கொடுப்பதற்கு ஒரு மனு கூட எழுதத் தெரியாத அப்பாக்கள் இருக்கிறார்கள்.


எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் போனால் பத்து ரூபாய் அதிகமாகும் என்று சாதா வண்டிக்கு காத்திருக்கும் காசு இல்லாத அப்பாக்கள் இருக்கிறார்கள். ரொம்ப தூரம் வெளியூர் பயணத்திற்குப் போகும்போது ஓட்டலில் சாப்பிட காசு இல்லையென்று வீட்டில் இருந்து புளியோதரை கட்டிக்கொண்டு போகும் அப்பாக்கள் இருக்கிறார்கள்.இன்னும் எழுத படிக்க தெரியாத அப்பாக்கள் இருக்கிறார்கள்*

அந்த அப்பாக்களைதான் உம் புள்ளைங்களை கூட்டிட்டு ராஜஸ்தானுக்கோ, கேரளாவிற்கோ "நீட்" எழுதுவதற்கு ஓடு! என்றிருக்கிறது இன்றைய உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு.


எவ்வளவு வறட்சியையும் தாங்கிக் கொண்டு வளருமே காட்டுச்செடி, அதுபோல் பொருளாதாரத்தில் எவ்வளவு பின்தங்கி இருந்தாலும், கல்வி பாடங்களின்  பட்டியலை ஏழை மாணவர்களுக்கு எட்டாத வகையில் திருத்தி வைத்திருந்தாலும், அதையெல்லாம் சமாளித்து எல்லாவற்றிக்கும் சவால்கொடுத்து உயர் படிப்புக்கு வந்து நிற்கும் போது, முதலில் நீட் எழுதி தேர்வாகி வாருங்கள் என்றார்கள். நீட் என்றால் என்ன? அப்படியென்றால் என்ன? அதையும் அலைந்து திரிந்து கேட்டு தெரிந்து,அதற்கும் நாங்கள் தயார் என்று வந்து நிற்கும்போது, உங்களுக்கெல்லாம் தேர்வு மையமே உள்ளூரில் கிடையாது என்னும் போது எத்தனை பெத்த வயிறு பற்றி எரியும்..! 

*அப்படி எரிகின்ற தீயில் இந்த அரசுகளும் அதன் உத்தரவுகளும் ஒருநாள் நிச்சயம் கருகும். அந்தநாள் வெகுதொலைவில் இல்லை*.

பா.வெங்கடேசன்.
(Via WhatsApp)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: